குழப்பம்! ஓபிஎஸ் வீட்டுக்கு எடப்பாடி அனுப்பிய 2 பேர்! பேசுனது என்ன? சீக்ரெட்டை உடைத்த வைத்தியலிங்கம்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு தம்பிதுரை, செங்கோட்டையன் வந்தது ஏன் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் மோதல் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில்.. அடுப்பில் வைத்திருக்கும் பொங்கப்பானை போல நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கொதிக்க தொடங்கி உள்ளனர். ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஒரு வாரமாக தீவிரம் அடைந்த நிலையில்தான்.. பொதுக்குழுவையே ஒத்திவைக்கும் முடிவிற்கு ஓபிஎஸ் தரப்பு வந்துள்ளது.
இரட்டை தலைமை என்பதால் பொதுக்குழுவை ஓபிஎஸ் நினைத்தால் மட்டும் கூட்ட முடியாது. அதற்கு இபிஎஸ்ஸும் நினைக்க வேண்டும் என்பதால்தான் தற்போது ஓபிஎஸ் தரப்பில் இருந்து இபிஎஸ்ஸுக்கு நேரடியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதம்
ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே சந்திப்பு நடக்க இரண்டு தரப்பு நிர்வாகிகளும் தீவிரமாக முயன்றும் சந்திப்பு நடக்கவில்லை. இந்த நிலையில்தான் நேரில் சந்திப்பதை தவிர்த்துவிட்டு ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒத்திவைக்க வேண்டும்
அதேபோல் இந்த முறையும் அனுமதி அளிக்க வேண்டும். சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கலாம். இதை பற்றி கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நாம் இருவரும் இணைந்து முடிவு எடுக்கலாம் என்று ஓ பன்னீர்செல்வம் சார்பாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கடிதத்தை செய்தியாளர்களிடம் படித்து காட்டிய ஓபிஎஸ் ஆதரவாளர் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், பின்னர் செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பதில்
அதில் செய்தியாளர் ஒருவர்.. தம்பிதுரை.. செங்கோட்டையன் எல்லோரும் அடிக்கடி போய் ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார்களே.. அவர்கள் எடப்பாடி சார்பாக தூது செல்கிறார்களா? ஒற்றை தலைமை குறித்து பேசினார்களா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த வைத்தியலிங்கம்.. தம்பிதுரை எதை பற்றியும் ஓ பன்னீர்செல்வமிடம் பேசவில்லை. அவர் சும்மா ஓபிஎஸ்ஸை வந்து சந்தித்துவிட்டு சென்றார். செங்குட்டுவனுக்கு அப்படித்தான்.

மரியாதை நிமித்தம்
தம்பிதுரை, செங்கோட்டையன் எதுவும் சொல்லவில்லை. ஒற்றை தலைமை பற்றி எல்லாம் இவர்கள் எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமாக வந்தனர். அண்ணணனை பார்க்க வந்தனர். ஒற்றை தலைமை என்ற அஜெண்டா அதிமுகவில் இல்லை. ஒரு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால் அதற்கு அஜெண்டா அனுப்ப வேண்டும். அஜெண்டா அனுப்பாத விஷயங்களை பொதுக்குழுவில் பேச முடியாது.

ஒற்றை தலைமை
அதனால் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி யாரும் பேச முடியாது, என்று வைத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். நேற்று ஒருமுறை சுமார் 1 மணி நேரமும், அதற்கு முதல்நாள் இரண்டு முறையும் தம்பிதுரை ஓபிஎஸ்ஸை சந்தித்தார். நேற்று முதல் நாள் இரண்டு முறை செங்கோட்டையன் ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் எடப்பாடியை சந்தித்துவிட்டு உடனே ஓபிஎஸ்சை சந்தித்தனர். ஆனால் இந்த சந்திப்பு வெறும் மரியாதையை நிமித்தமான சந்திப்பு என்று வைத்தியலிங்கம் மறுத்து பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications