பிள்ளையை கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டுறாங்க! ரவீந்திரநாத்தை அழைத்த டெல்லி.. அப்படியே அதிர்ந்த எடப்பாடி
சென்னை: டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அழைக்கப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்கிறார்கள் பாஜகவினர்.
இரண்டு நாட்களுக்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மோடி தலைமையில் டெல்லியில் நடந்தது. எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கு எதிராக டெல்லியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மொத்தம் 38 கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன.

இதில் பிரதமர் மோடிக்கு அருகிலேயே எடப்பாடி பழனிசாமி அமர வைக்கப்பட்டு இருந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் மோடிக்கு அருகே எடப்பாடியை நிற்க வைத்து கூட்டணியில் அவருக்கு இரண்டாவது இடம் அளித்து முக்கியத்துவம் கொடுத்தது பாஜக தலைமை. இந்த கூட்டத்தில் மொத்தமாக ஓ பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டார். அவருக்கு அழைப்பே செல்லவில்லை.
லெட்டர் பேட் கட்சிகள்,. எம்பிக்கள் இல்லாத கட்சிக்கு எல்லாம் அழைப்பு சென்றது. ஆனால் முன்னாள் முதல்வருக்கு.. பாஜக சொன்னபடியெல்லாம் கேட்டவருக்கு அழைப்பு செல்லவில்லை. இதனால் ஓ பன்னீர்செல்வம் கடும் மன வருத்தத்தில் இருக்கிறாராம். அவர் இதனால் மிக கடுமையாக அப்செட் ஆனதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம், எடப்பாடியைத்தான் மோடி முழுமையாக ஏற்றுக்கொள்கிறார் என்கிற பிம்பமும் தோற்றமும் உருவானது. இதில் மகிழ்ந்திருந்தார் எடப்பாடி. ஆனால், நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஓபிஎஸ் மகனையும் அழைத்ததை எடப்பாடி ரசிக்கவில்லை.
மேலும், கூட்டத்தில் அவரது மேஜையில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் பலகையில் அவரது பெயருடன் அதிமுக என்றும் பொறிக்கப்பட்டதை எடப்பாடியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. பிள்ளையையும் கிள்ளுகிறார்கள் ; தொட்டிலையும் ஆட்டுகிறார்கள் என்று தம்பிதுரையிடம் கமெண்ட் அடித்திருக்கிறார் எடப்பாடி.
எல்லா வகையிலும் எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு ஓபிஎஸ் மகனுக்கும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ? என்ற கேள்வி தான் அதிமுகவில் எதிரொலிக்கிறது. இது குறித்து விசாரித்தபோது, ''தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்துக்கு எடப்பாடியை மட்டும் அழைத்து விட்டு ஓபிஎஸ்சை பாஜக தலைமை புறக்கணித்ததால் அப்-செட்டான ஓபிஎஸ், எங்களை நம்புங்கள் ; கைவிடப்பட மாட்டீர்கள்.
மோடியை நம்பியவர்கள் அரசியலில் உயர்ந்துதான் இருக்கிறார்கள். அவருக்கு உங்கள் மீது ஏகப்பட்ட மரியாதையும் மதிப்பும் இருக்கிறது என்று பாஜக தலைமை என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தது. நானும் நம்பினேன். இப்போ, எங்களுக்கு எடப்பாடி தான் முக்கியம் என காட்டுகிறார்கள். நம்பிக்கை வைத்த என்னை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்.
அதிமுகவில் நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களிலெல்லாம், பாஜகவை நம்பக்கூடாது; அவர்களுடன் கூட்டணி வைக்கக் கூடாது ; நம்பகத்தன்மை இல்லாத கட்சி என்றெல்லாம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் விமர்சிக்கும் போது அதனை மறுத்து பாஜகவுக்காக பேசியவன் நான். ஆனா, நன்றி விசுவாசம் பாஜக தலைவர்களிடம் இல்லை. பாஜகவை நம்பி மோசம் போனேன் என்று தன்னை சுற்றியிருப்பவர்களிடம் புலம்பியிருக்கிறார் ஓபிஎஸ்.
இவரின் புலம்பல்களும் ஆதங்கமும் கோபமும் பாஜகவின் தேசிய தலைமைக்கு தெரிய வந்திருக்கிறது. அந்த வகையில், ஓபிஎஸ் மனதை குளிர வைக்கவே அவரது மகனை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைத்து, உங்களை நாங்கள் கைவிடவில்லை ; கொஞ்சம் நாள் அமைதியாக இருங்கள் என சொல்லாமல் சொல்லியிருக்கிறது எங்கள் தலைமை'' என்கிறார்கள் தமிழக பாஜகவினர்.












Click it and Unblock the Notifications