அறைகூவல் விடுத்த அண்ணாமலை.. தொட்டதெல்லாம் துலங்குது.. "தலையே" வாராரே! ஏக குஷியில் தமிழ்நாடு பாஜக?
சென்னை: தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பலர் தற்போது ஏக குஷியில் இருக்கிறார்களாம். தமிழ்நாட்டு அரசியலில் சமீப நாட்களாக நடக்கும் விஷயங்கள் பாஜகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
சமீபத்தில் பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்த போதில் இருந்தே புதிய நிர்வாகிகள் நியமனம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பாஜகவில் கட்சி ரீதியாக நிர்வாகிகள் பட்டியல் ஏற்கனவே மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே நிர்வாகிகளை மாற்றி அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
வீட்டை இடிப்பதுதான் திராவிட மாடலா? அந்த அமைச்சர் சப்பை கட்டு கட்டுறாருங்க! விளாசிய பாஜக அண்ணாமலை..!
நிர்வாகிகள் நியமனம்
இந்த நிலையில்தான் புதிய நிர்வாகிகள் நியமனம் காரணமாக அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரத்தினர் குஷியில் இருக்கிறார்களாம். காரணம், அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள்தான் கட்சியில் அதிக பதவிகளை தற்போது பெற்றுள்ளனர். மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நியமனம்
பாஜக மாநிலச் பார்வையாளர்களாக கராத்தே தியாகராஜன், எஸ்.ஜி.சூர்யா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர் தொடர்கிறார்; இணைப் பொருளாளராக எம்.சிவசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மற்றும் மற்ற உறுப்பினர்கள் பலர் அண்ணாமலையுடன் நல்ல உறவை கொண்டவர்கள். பெரிதாக யாரும் அண்ணாமலையுடன் கருத்து வேறுபாட்டில் இல்லை.
குஷி
இந்த நியமன விவகாரமே பாஜகவினர் மத்தியில் குஷியை ஏற்படுத்தி இருக்கிறதாம். பல நாட்களாக எதிர்பார்த்த நியமனம் இது. இப்போது எதிர்பார்த்தபடியே நிர்வாகிகள் நியமனம் நடந்துள்ளது. அதனால் குஷியில் இருக்கிறோம். இனி 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராக வேண்டியதுதான் என்று பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனராம். இது போக சமீபத்தில் திமுக எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா பாஜகவில் இணைந்தார்.
திமுக எம்பி மகன்
திமுக சார்பாக பாராளுமன்ற மாநிலங்களவை குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரின் மகனே பாஜகவில் சேர்ந்தது திமுகவினர் பக்கம் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மூத்த தலையின் மகனையே தூக்கிவிட்டோம். இனி தொட்டதெல்லாம் துலங்க போகிறது. இனி இன்னும் சில தலைகளை எங்கள் கட்சி பக்கம் இழுப்போம் என்ற நம்பிக்கையில் பாஜக தலைகள் இருக்கின்றதாம்.
மாட்டுக்கறி
இது போக தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளும் பாஜகவை குஷியில் ஆழ்த்தி இருக்கிறதாம். ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் தடை செய்யப்பட்டது. இதை பாஜக தரப்பே எதிர்பார்க்கவில்லையாம். பீப் தடையை நீக்கினால் அதற்கு எதிராக போராடலாம் என்று பாஜக திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மழையை காரணம் காட்டி மொத்தமாக பிரியாணி திருவிழா நிகழ்வை ஆட்சியரே ஒத்தி வைத்தது.. பாஜகவினரை இன்னும் குஷி படுத்தி இருக்கிறதாம்.
இலங்கை தமிழர்
இதெல்லாம் போக சமீபத்தில் அண்ணாமலையின் இலங்கை பயணத்திற்கு பின்பாக, அங்கிருந்த மீனவர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். இது வழக்கமாக கோர்ட் மூலம் நடக்கும் நிகழ்வுதான். கோர்ட் மூலம் அவ்வப்போது தமிழக மீனவர்கள் இப்படி விடுவிக்கப்படுவது வழக்கம். ஆனாலும் இதை அண்ணாமலை தன்னுடைய வெற்றியாக பேசி வருகிறார். இருந்தாலும் இதை வைத்து இலங்கை தமிழர்கள் மத்தியிலும், மீனவர்கள் மத்தியிலும் ஸ்கோர் செய்ய முடியும் என்று பாஜக நம்புகிறதாம்.
எதிர்பார்ப்பு
இதெல்லாம் போக தருமபுர ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் பதவி வகித்து வருகிறார். மயிலாடுதுறை கோட்டாச்சியார் பாலாஜி இவரின் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதித்தார். இதற்கு தடை விதிக்கப்பட்டது பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பை சந்தித்தது. ஆதீனங்களும் இதை எதிர்த்தனர். இந்த நிலையில் அரசு இந்த தடையை நீக்கியது. பாஜக இந்த விவகாரத்தையும் தங்களுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடி வருகிறதாம்.
அறைகூவல்
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நாங்கள் எடுத்து வைக்கும் முயற்சிகள் வெற்றிபெறுகிறது என்ற குஷியில் பாஜக நிர்வாகிகள் இருக்கிறார்களாம். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து 25 பாஜக எம்.பிக்கள் வெற்றி பெறுவார்கள். அப்படி நடந்தால் 5 பேர் மத்திய அமைச்சராவது தமிழ்நாட்டிற்கு உறுதியாக கிடைப்பார்கள். தமிழகத்திலும் கேரளாவிலும் அசுரர்கள் களையெடுப்பு நடக்கும்.
ஆட்சி மாற்றம்
அதிவிரைவில் ஆட்சி அகற்றப்படும். நாம் தயார் நிலையில் இருக்கும்போது ஆண்டவன் கட்டளையிடுவான் என்று அண்ணாமலை அறைகூவல் விடுத்தார். அதன்படியே தற்போது எல்லாம் சாதகமாக நடப்பதாக பாஜக நினைக்கிறதாம். இது போக மே 26ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. இதனால் தலைவரே வருகிறார் என்ற உற்சாகத்தில் பாஜக நிர்வாகிகள் இருக்கிறார்களாம்..!