"பந்தயம் அடிக்கும் குதிரை".. திடீரென எடப்பாடி பக்கம் சாய்ந்த பாஜக? அப்போ ஓபிஎஸ்.. பிளானே வேறயாமே!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக எடுத்து இருக்கும் நிலைப்பாடு ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. பாஜக முக்கியமான சில விஷயங்களை மனதில் வைத்து தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது நேரடியாக எடப்பாடிக்கு ஆதரவான தீர்ப்பாக இல்லை என்றாலும் மறைமுகமாக அவருக்கே ஆதரவாக முடிகிறது. பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை நிலைப்பாடு
இந்த நிலையில் அண்ணாமலை இது தொடர்பாக அளித்த பேட்டியில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக ஒரு அணிக்குள் இருந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும். இது பற்றி ஓ பன்னீர்செல்வத்திடம் பேசினேன். ஓ பன்னீர்செல்வத்தின் வேட்பாளரை விட எடப்பாடி தரப்பின் வேட்பாளருக்கு அதிக ஆதரவு உள்ளூரில் உள்ளது. அதனால் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண்டேன். ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன், என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

ஓபிஎஸ் பின்னடைவு
இது ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய பின்னடைவாக மாறி உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு பாஜக ஆதரவு கொடுப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. பாஜகவின் நேரடி ஆதரவு முதல்முறையாக எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதையடுத்தே இந்த விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வமும் பின்வாங்க தொடங்கி உள்ளார். இதையடுத்தே நேற்று பொதுவேட்பாளரை, அதாவது இரட்டை இலை சின்னத்தின் கீழ் நிற்கும் வேட்பாளரை ஏற்றுக்கொள்வோம் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தது. இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று தெரிவித்தது.

பாஜக நிலைப்பாடு கேள்வி
எடப்பாடி பழனிசாமிக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அவருக்குத்தான் அதிக மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. அவர் தான் தற்போது பந்தயம் அடிக்கும் குதிரையாக உள்ளார். அவருக்கு கொங்கு மண்டலத்திலும் ஆதரவு உள்ளது. அதனால் அவர் மீது "பெட்" கட்ட பாஜக முடிவு எடுத்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு இல்லை. அவரை ஆதரித்தால் நம்முடைய கூட்டணிக்குத்தான் சிக்கல் என்பதால் பாஜக இந்த நிலைப்பாட்டு எடுத்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

உண்மை என்ன விளக்கம்
இது தொடர்பாக பாஜக தரப்பில் விசாரித்ததில்.. அதிமுக ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். பாஜக யாருக்கும் ஆதரவாகவும் இல்லை. எதிராகவும் இல்லை. திமுகவை ஒன்றாக எதிர்க்க வேண்டும் என்பதே நோக்கம். இப்போது எடப்பாடி தரப்பின் வேட்பாளருக்கு ஆதரவு உள்ளது. அதனால் அவரை ஆதரிக்கிறோம். இடைத்தேர்தலில் அவரின் கை ஓங்கி உள்ளது. அதனால் அவரின் வேட்பாளரை ஆதரிக்கிறோம். மற்றபடி ஓ பன்னீர்செல்வத்திற்கும் எங்களுடைய சப்போர்ட் இருக்கிறது என்று பாஜகவினர் விளக்கம் அளித்துள்ளனர். பாஜகவின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்தால் தான் தெரியும் என்கின்றனர் பாஜக தரப்பு நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications