அந்த பேச்சுக்கே இடமில்லை.. சின்னம் முடங்கினால் முடங்கட்டும்! துணிந்து இறங்கிய எடப்பாடி.. பரபர காரணம்
சென்னை: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் பிரச்சனை இல்லை என்ற மனநிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படையப்பா படத்தில் எல்லாம் இழந்து நிற்கும் ரஜினிக்கு திடீரென மலையை தோண்ட போய் கிரானைட் கிடைக்கும். அப்படித்தான் கிரானைட் மலை கிடைத்த உற்சாகத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ஆம் மலையை தோண்டுவது போல.. வேறு ஒரு விவகாரத்திற்காக உச்ச நீதிமன்றம் சென்றவருக்கு.. வேறு ஒரு வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. உச்ச நீதிமன்றம் நேற்று அதிமுக பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று கூறியது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்தே எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றம் சென்றார். ஆனால் உச்ச நீதிமன்றமோ அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்றம் தலையிடவே முடியாது என்று கூறிவிட்டது. தீர்மானம் பற்றிய தீர்ப்பிற்கு எதிராக வழக்கு தொடுத்த எடப்பாடிக்கு கிரானைட் மலை கிடைத்தது போல மொத்தமாக பொதுக்குழு நடத்த கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது.

ஒற்றை நீதிபதி
பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு ஒற்றை நீதிபதி முன் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றமே பொதுக்குழுவில் தலையிட மாட்டோம் என்று கூறிவிட்டதால், தனி நீதிபதியும் பொதுக்குழு விவகாரத்தில் தலையிட வாய்ப்பு குறைவு. இப்படி போகிற இடமெல்லாம் கிழக்கு என்ற உற்சாகத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் பிரச்சனை இல்லை என்று எண்ணத்தில் இருக்கிறதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு.

இரட்டை இலை சின்னம்
உள்கட்சி மோதலில் ஈடுபட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே. ஜே. கட்சியின் நிறுவனர் பி. ஏ. ஜோசப் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 11ம் தேதி
ஜூலை 11ம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். இதன் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று அவர் வழக்கு தொடுத்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் பிரச்சனை இல்லை என்ற மனநிலையில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சின்னம் முடக்கம்
இது எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகளிடம் விசாரித்ததில்.. இரட்டை இலை சின்னம் இப்போது முடங்கினால் பிரச்சனை இல்லை. பொதுக்குழுவை காரணம் காட்டி முடக்க பார்க்கிறார்கள். முடக்கட்டும். இப்போது ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் தவிர வேறு தேர்தல் இல்லை. அதுவும் நாளை மறுநாள் நடப்பதால், அதிமுக போட்டியிட முடியாது. எனவே சின்னத்தை மீட்க நேரம் இருக்கிறது.

மீட்டு விடலாம்
அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வாக்களித்த எடப்பாடியை தேர்வு செய்வார்கள். அவர்கள் பொதுச்செயலாளருக்கான் தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள். இந்த தீர்மானம் இருந்தாலே போதும்.. கட்சிக்கு உரிமையாளர் எடப்பாடிதான் என்பதை நிரூபித்து எளிதாக சின்னத்தை மீட்க முடியும், என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். இப்போதைக்கு பொதுச்செயலாளர் பதவியை பெறுவதே முக்கியம் சின்னத்தை பின்னர் ஈசியாக பெற்றுவிடலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இருக்கிறதாம்.

பேச்சுக்கே இடமில்லை
அதேபோல் அதிமுகவில் இனி ஓ பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயலாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அவருக்கு உயர் பதவிகள் கொடுக்கப்படாது. அதிகாரத்தில் எந்த விதமான பங்களிப்பும் தரப்படாது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவிக்கிறது. பொதுக்குழுவில் நடக்கும் விஷயங்களை பொறுத்து அவரை பொருளாளர் பதவியில் இருந்து மட்டுமின்றி கட்சியில் இருந்தே நீக்குவது தொடர்பாக ஆலோசனைகள் செய்யப்படலாம் என்று எடப்பாடி தரப்பு ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications