ஏகப்பட்ட சர்ச்சை.. புர்கா படம் திடீரென எதிர்ப்புக்கு உள்ளாவது ஏன்? என்ன காரணம்?
சென்னை: தமிழில் வெளியாகி இருக்கும் புர்கா படம் தற்போது சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
சர்ஜுன் கேஎம் இயக்கத்தில் கலையரசன், மிர்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த படம் சென்னையில் வருடத்தை குறிப்பிடாமல் தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் ஒரு மத கலவரத்தை அடிப்படையாக வைத்து கதையின் பின்புலம் அமைக்கப்பட்டு உள்ளது.
கலவரம் நடக்கும் பகுதியில் வசித்து வருகிறார் நஜ்மா என்ற இஸ்லாமிய பெண். கணவனை இழந்து 4 மாதம் கூட ஆகாத காரணத்தால் இஸ்லாமிய வழக்கப்படி 4 மாதங்கள் வெளியே வராமல் இருக்கும் இத்தா விதி முறையை அவர் கடைப்பிடித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த கலவரத்தில் காசுக்காக கலந்து கொள்ளும் கலையரசன்.. உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக உதவி கேட்டு நஜ்மா வீட்டிற்கு செல்கிறார். முதலில் அவருக்கு இடம் கொடுக்க மறுக்கும் நஜ்மா.. கடைசியில் அவரை வீட்டில் அனுமதிக்கிறார் .

அதோடு சூர்யா என்ற கதாபாத்திரத்தில் வரும் கலையரசனுக்கு மருந்து போட்டுவிட்டு, சிகிச்சையும் கொடுக்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில் இஸ்லாமிய பெண்ணும் - கலவரத்தில் கலந்து கொண்ட ஒரு இந்துவிற்கும் இடையில் என்ன நடந்தது.. அவர்கள் பேசிக்கொண்டது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.
மதம், அடக்குமுறை மற்றும் மனிதநேயம் பற்றிய விவாதத்தை ஏற்படுத்தும் படமாக இது வெளியாகி உள்ளது. சரி.. கதை நன்றாகத்தானே இருக்கிறது.. இந்து - இஸ்லாமியர் இடையே ஆரோக்கியமான வாதத்தை ஏற்படுத்தும் படத்தில் என்ன தவறு இருக்க முடியும் என்று சிலர் கேட்கலாம் .
ஆனால் இந்த படத்தில் வரும் சில வசனங்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.,
விவாதம் ஏன்?
இந்த படம் விவாதத்தை ஏற்படுத்த காரணம் அதில் இருக்கும் ஹிஜாப் தொடர்பான சில விமர்சனங்கள். மற்றும் இஸ்லாமிய முறைகள் தொடர்பான சில வசனங்கள். ஹிஜாப், புர்காவிற்கு எதிராக இந்த படம் இருப்பதாக இஸ்லாமியர்கள் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இஸ்லாமிய பெண்கள் உட்பட பலர் இந்த படத்தில் வரும் வசனங்களை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர். இஸ்லாமிய வழக்கங்களை, குர் ஆனை விமர்சிக்கும் விதமாக படம் இருப்பதாக இஸ்லாமிய பெண்கள் உட்பட பலர் இதை விமர்சனம் செய்துள்ளனர்.
ஆதரவு கருத்துக்கள் : அதே சமயம் இந்த படம் பெண் விடுதலை, உரிமைகளை பற்றி பேசுகிறது. அதில் தவறு இல்லை என்றும் இன்னொரு பிரிவினர் வாதம் வைக்கிறார்கள். இதனால் இந்த படம் கடுமையான விவாதங்களை இணையத்தில் ஏற்படுத்தி உள்ளது.

சீமான்: இந்த படம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நபி பெருமானாரின் நன்மொழிகளால் தொகுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டம் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவதில் பல முற்போக்கான கருத்துக்களை வலியுறுத்தும் நிலையில், இஸ்லாம் மார்க்கமே பெண்களுக்கு எதிரானது போல் 'புர்கா' திரைப்படம் சித்தரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்திய பெருநாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து, அவர்களின் கொடுங்கரங்களில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமய மக்களை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் போலக் காட்ட முனைவது கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.
நாட்டின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் எவ்வித தீங்கும் ஏற்படாத வண்ணம் படைப்பாளிகள் தங்களின் கடமையை உணர்ந்து, மிகுந்த பொறுப்புணர்வுடன் தங்களது படைப்புகளை வெளிக்கொணர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி, அவர்களின் உணர்வுகளைச் சீண்டி, பதற்றமான சூழலை உருவாக்கும் படைப்புகளைப் புறக்கணிக்க வேண்டுமென திரைக்கலை ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது 'ஆகா ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'புர்கா' திரைப்படம் இசுலாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிவுப்படுத்துவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து அதனைத் தடைசெய்யக் கோரும் இசுலாமிய மக்களின் கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி போராடும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறி உள்ளார் .












Click it and Unblock the Notifications