நீங்க தலையிடுங்க! அப்பா சிகிச்சையில்.. நேராக சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த துரை வைகோ -என்னாச்சு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான திமுக கூட்டணியில் பெரிய அளவில் மோதல்கள் ஏற்படவில்லை என்றாலும் ஆங்காங்கே மாவட்ட அளவில் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. முக்கியமாக வடமாவட்டங்களில் திமுக ஒதுக்கிய இடங்கள் போதுமானதாக இல்லை என்று காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனவாம்.
மாவட்ட அளவில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில் சில இடங்களில் கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை திமுக மாவட்ட செயலாளர்கள் கொடுப்பது இல்லை என்ற புகார் எழுந்துள்ளதாம்.
இது தொடர்பாக திமுகவின் சில கூட்டணி கட்சிகள் ஏற்கனவே திமுக தலைமைக்கு நேரடியாக புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று கூட இதனால்தான் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்த கூட்டத்தில் இருந்து கோபமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிமுக
இதேபோல் மதிமுக கட்சிக்கும் திமுக கூட்டணியில் போதிய இடங்கள் சில மாவட்டங்களில் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட அளவில் திமுக நிர்வாகிகள் அதிக இடங்களை ஒதுக்காமல் கண்டிப்புடன் நடப்பதாக கூறப்படுகிறது. மதிமுகவிற்கு குறைவான வாக்குசதவிகிதம்தான் உள்ளது. வார்டுகளை வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அதிக இடம் ஒதுக்கி வார்டுகளை இழந்துவிட்டால் நகராட்சி, மாநகராட்சி பதவிகளை இழக்க நேரிடும் என்று திமுக நிர்வாகிகள் சில மாவட்டங்களில் மதிமுகவிடம் சொன்னதாக கூறப்படுகிறது.

திமுக vs மதிமுக
அதிலும் சில மாவட்டங்களில் மதிமுகவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முக்கியமாக சென்னைக்கு அருகே இருக்கும் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில்தான் மாவட்ட செயலாளர்கள் அதிக கட்டுப்பாடுகளை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் சில இடங்களில் மாவட்ட அளவில் கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

துரை வைகோ
இந்த நிலையில் மதிமுக தலைவர் எம்பி வைகோ இதில் நேரடி கவனம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார். அவர் வீட்டில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கூட்டணி விவகாரங்களை கேட்டு வந்தாலும் நேரடியாக சென்று தலைவர்களை சந்திக்கவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ முடியாத நிலையில் வைகோ இருக்கிறார். இதனால் அவரின் மகன் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ கூட்டணி பேச்சுவார்த்தையில் குதித்து இருக்கிறார்.

கோரிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு இடங்களை கேட்க வேண்டும் என்று இவர் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம். அதோடு நேரடியாக நேற்று மாலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இருக்கிறார் துரை வைகோ. முதல்வரிடம்.. நீங்கள்தான் இதில் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும். திமுக நிர்வாகிகள் கேட்கும் இடங்களை கொடுக்கவில்லை. எங்களுக்கு கடும் நெருக்கடியாக இருக்கிறது. திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் இடங்களை ஒதுக்க ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

ஸ்டாலின்
துரை வைகோ வைத்த கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். நீங்கள் சொல்வதை பற்றி விசாரிக்க சொல்கிறேன்.. நான் இதை ஆவணம் செய்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்து இருக்கிறார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் மட்டுமே நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வைகோவின் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் துரை வைகோவிடம் கேட்டறிந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications