"இணக்கம்".. திட்டவட்டமாக சொன்ன ஸ்டாலின்.. சல்லி சல்லியாகும் திட்டம்! எடப்பாடி இனிதான் சுதாரிக்கணும்
சென்னை: தமிழ்நாடு அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட விஷயம் ஒன்றுக்கு பிள்ளையார் சுழி போடும் முன் முற்றுப்புள்ளி வைத்து உள்ளார் முதல்வர் ஸ்டாலின். நேற்று மனோரமா பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசிய சில விஷயங்கள் தமிழ்நாடு அரசியலில் கவனம் பெற்றுள்ளன. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் பேச்சை சுட்டிக்காட்டி
எடப்பாடி பழனிசாமி இனிமேல்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் வல்லுனர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசியலில் தற்போது ஹாட் டாபிக்காக இருக்கும் விஷயம் அதிமுக - பாஜக கூட்டணிதான். அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக பாஜகவுடன் அவர்களின் உறவு முறிய போவதாக பல்வேறு தகவல்கள் வர தொடங்கி உள்ளன.
முக்கியமாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கு பாஜக இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை. டெல்லி பாஜக சார்பாக இதுவரை யாருமே எடப்பாடியை வாழ்த்தவில்லை.
இதனால் எடப்பாடி தரப்பும் பாஜக தலைவர்கள் மீது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

அப்செட்
இது இப்படி இருக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீடுகளில் அடுத்தடுத்து வருமானவரித்துறை ரெய்டும் நடந்து வருகிறது. சமீபத்தில் காமராஜ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதேபோல் எஸ்.,பி வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அதேபோல் சி விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கில் வழக்கு பதிவு செய்யவும் சிபிஐ அனுமதி கேட்டது. இதனால் அதிமுகவிற்கு எதிராக பாஜக களமிறங்கி உள்ளதோ என்ற கேள்வி எழுந்தது.

கேள்வி
இதன் காரணமாக பாஜக - அதிமுக உறவு முறிய போவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்தன. அதோடு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற போது அவரை தனியாக சந்திக்க பிரதமர் மோடி மறுத்துவிட்டார். இதனால் இவர்களின் கூட்டணி முறிய போகிறது என்று ஆருடம் சொல்லப்பட்டது. இது போக எடப்பாடி பழனிசாமியை சென்னை வந்த போதும் மோடி சந்திக்கவில்லை. அதிமுக - பாஜக மோதல் தொடர்பான விவாதங்களை இது அதிகப்படுத்தியது.

கூட்டணி மாற்றம்
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் கூட்டணிக்கு செல்வார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாக தொடங்கின. இந்த விவாதம் எழுந்ததற்கு பின்பு 3 காரணங்கள் இருந்தன.
காரணம் 1 - பிரதமர் மோடி படத்தை தமிழ்நாடு அரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் ஒட்டியவர்களை ஏன் போலீஸ் கைது செய்யவில்லை என்று தமிழ்நாடு போலீசை காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி விமர்சனம் செய்து இருந்தார். அதோடு செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை காங்கிரஸ் புறக்கணித்தது. திமுக - காங்கிரஸ் இடையிலான பிளவை இது காட்டுவதாக கூறப்பட்டது.

காரணங்கள்
காரணம் 2 - பிரதமர் மோடியுடன் செஸ் ஒலிம்பியாட் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெருக்கம் காட்டினார். இதுவும் பாஜக - திமுக கூட்டணி வாய்க்குமோ என்ற விவாதத்தை எழுப்பியது.
காரணம் 3 - இது போக காங்கிரஸ் தலைவர்களுடன் எடப்பாடி ஆலோசனையில் இருப்பதாகவும், ராகுல் காந்தியிடம் எடப்பாடி போனில் பேசியதாகவும் கூட செய்திகள் வந்தன.

கூட்டணி மாற்றம்
இதன் காரணமாக அதிமுக - பாஜக கூட்டணி முறிந்து.. அதிமுக - காங்கிரஸ் கூட்டணியும், பாஜக - திமுக கூட்டணியும் உருவாக போவதாக செய்திகள் வந்தன. ஆனால் இந்த செய்திகளுக்கு நேற்று முதல்வர் ஸ்டாலின் ஒரே அடியாக முற்றுப்புள்ளி வைத்தார். பிரபல மலையாள ஊடகமான மனோரமா ஊடகத்தின் 'இந்தியா 75' என்ற விழா நேற்று இணைய வழியாக நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் ஆன்லைன் வழியாக கலந்து கொண்டார். இதில் பேசிய ஸ்டாலின், திமுக தலைமையிலான கூட்டணி தொடரும்.

ஸ்டாலின் உறுதி
இது கொள்கைக்கான கூட்டணி. நாங்கள் வெறும் தேர்தலுக்காக கூட்டணி வைக்கவில்லை. நாங்கள் இணக்கமாக இருக்கிறோம். நாங்கள் ஆரோக்கியமான ஆலோசனைகளை செய்து வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியாக கூறினார். இதன் காரணமாக தற்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணி என்ற விவாதம் அடிபட்டு போகிறது. அதிமுக - காங்கிரஸ் இணைய வாய்ப்பே இல்லை என்ற நிலையை இது ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி சுதாரிக்கணும்
இதனால்தான் தற்போது எடப்பாடி சுதாரிக்கணும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். காங்கிரசுடன் கூட்டணி வைக்கலாம் என்று நம்பி பாஜகவை எடப்பாடி பகைத்துக்கொள்ள கூடாது. ஸ்டாலின் கூற்றுப்படி பார்த்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பே இல்லை. எனவே எடப்பாடி பாஜக கூட்டணியில் தொடருவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சி வாக்குகள் பிரிந்தது போலத்தான் பிரியும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications