அதிரடி.. சென்னையில் பல முக்கிய ஹோட்டல்களுக்கு திடீர் சீல் வைக்கும் அதிகாரிகள் என்ன காரணம் தெரியுமா
சென்னை: தலைநகர் சென்னையில் இயங்கும் பல முக்கிய ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன.. அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையின் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சென்னையில் பல்வேறு பிஸ்னஸ்கள் இயங்கி வந்தாலும் கூட ஹோட்டல்களுக்கு இங்கே தனிச் சிறப்பு இருக்கவே செய்கிறது. நல்ல சுவை மற்றும் சுகாதாரமான முறையில் உணவைக் கொடுத்தால் போதும் மக்கள் ஆதரவு நிச்சயம் உணவகங்களுக்கு இருக்கும்.

அப்படி மிகச் சிறியளவில் ஹோட்டல்களை ஆரம்பித்து இன்று அதையே மிகப் பெரிய பிஸ்னஸ்களாக பலரும் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே நகரில் இருக்கும் பல ஹோட்டல்களுக்கு சீல் வைக்கும் பணியைச் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
80 ஹோட்டல்களுக்கு சீல்: இதுவரை சுமார் 80 ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி உறுதி செய்துள்ளது. அதாவது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இங்கும் ஹோட்டல்களில் எங்கெல்லாம் வாகனங்களை நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லையோ.. அந்த ஹோட்டல்களுக்கு எல்லாம் சீல் வைக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
இது தொடர்பாகப் போக்குவரத்து போலீஸாரிடம் என்ஓசி எனப்படும் தடையில்லாச் சான்றிதழ்கள் ஹோட்டல்களிடம் இருக்கிறதா என்பதை வருவாய்த் துறை அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருகின்றனர். பொதுவாகச் சென்னையில் பார்க்கிங் பிரச்சினையைச் சரி செய்யவும்.. சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் டிராபிக் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் ஹோட்டல்களில் போதியளவில் பார்க்கிங் இடங்கள் உள்ளது என்பதை உறுதி செய்த பின்னரே தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
என்ன காரணம்: அதன்படி சென்னையில் இப்போது வரை சுமார் 80 ஹோட்டல்கள் போதிய பார்க்கிங் இடமில்லாமல் இயங்கி வருவதை மாநகராட்சி கண்டுபிடித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட அனைத்து ஹோட்டல்களும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க, போதியளவு பார்க்கிங் இடத்தை வைத்திருக்க வேண்டும் என்ற விதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் கே.தன சேகரன் கூறுகையில், "நகரில் உரிமம் பெறாத பல ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டு, போதுமான வாகன நிறுத்துமிடங்களை உருவாக்க கவுன்சிலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படியே நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்கிறார்கள், பெரும்பாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஓட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே கவுன்சிலர்கள் தரப்பில் இருந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
உரிமம் இல்லை: சென்னை நகரைப் பொறுத்தவரை இங்கே இருக்கும் 3,500 ஹோட்டல்களில், உரிய உரிமம் பெறாமல் இயங்கும் 306 ஹோட்டல்களை போக்குவரத்து போலீஸார் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், அதில் பல ஹோட்டல்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், அவர்கள் நிரந்தமாக மூடிவிட்டார்களா.. அல்லது வேறு இடத்தில் ஹோட்டல்கள் இயங்குகிறதா என்பது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது மட்டுமின்றி வரும் ஏப்ரல் மாதம் முதல் உரிமம் இல்லாத வணிக நிறுவனங்களுக்குச் சீல் வைக்கும் மற்றொரு பெரிய நடவடிக்கையைத் தொடங்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications