முதல்வர் கனவில் அண்ணாமலை? முழுக்குப் போட்ட எடப்பாடி! உதவிக்கு வந்த திமுக!
சென்னை: அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் ஏன் காத்திருக்கின்றன? அதிமுக ஏன் பாஜகவைப் புறக்கணிக்கிறது? இதற்குப் பின்னால் திமுகவின் ரகசியத் திட்டம் என்ன?
அதிமுக தலைவர்கள் பாஜகவுடனான கூட்டணி முறிந்ததும் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். 'அரசியலில் கத்துக்குட்டி' என்றார் ஒரு முன்னாள் அமைச்சர். 'அவர் என்ன லேகியம் விற்பதைப் போலப் பேசுகிறார்' என்றார் இன்னொரு முன்னாள் அமைச்சர். அதற்கு அண்ணாமலை, 'ஆமாங்கண்ணா நான் லேகியம்தான் விற்கிறேன். அதை வாங்கி சாப்பிடுங்கள் ஊழல் இல்லாமல் போய்விடும்' என்றார்.

இப்படி மாறி மாறி அதிமுகவிலிருந்து வீசப்பட்ட பந்துகள் எல்லாம் நேராகக் கமலாலயத்தில் அமர்ந்துள்ள அண்ணாமலையைப் போய் தாங்கி வந்தது. ஆனால், சமீபத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் பிரதமர் புகழ்ந்துதான் பேசினார்.
அதில் ஒரு தவறும் இல்லை. அதற்காகச் சந்தோசப்பட வேண்டிய அதிமுக மூத்த தலைவர்கள், 'ராமர் பேரைச் சொல்லி வாக்கு கேட்கத் தைரியம் இல்லாத பிரதமர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பெயரைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்' என்று விமர்சித்தனர்.
எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியிலிருந்தவரை அவருக்கு மோடி அருகிலேயே அமர நாற்காலி போடப்பட்டது. அந்தளவுக்கு அன்புகாட்டி வந்த அதிமுக இன்று மோடியை நோக்கி அம்பு மழைகளைப் பொழிந்துவருகிறது.

வெளிப்படையாக பாஜக கூட்டணியை அதிமுக புறக்கணித்துவிட்டது. இந்தத் தேர்தலில் மட்டும் இல்லை 2026 சட்டசபைத் தேர்தலில் கூட பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது.
அப்படி எதுவும் நடக்காததைப் போல அண்ணாமலை போகின்ற இடங்களில் எல்லாம், 'கதவு திறந்திருக்கிறது. கூடவே ஜன்னல் திறந்திருக்கிறது' என்று தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார்.
"பாரத பிரதமரையே விமர்சிக்கும் அளவுக்கு அதிமுக சென்றபிறகு, பாஜக அது குறித்து பதிலடி கொடுக்காமல் மவுனம் காப்பதைப் பார்த்தால் பாஜக பலவீனப்பட்டுப் போய்விட்டது என்பதையே காட்டுகிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ்.

அண்ணாமலையோ 39 இடங்களிலும் பாஜக போட்டியிடும் என்றார். 20% வாக்கு களைப் பெற்று 2வது கட்சியாக பாஜகவை வளர்த்துக் காட்ட வேண்டும் என்று இவர் நினைக்கிறார். தனியார் ஊடகங்கள், சில நிறுவனங்கள் செய்த கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் பாஜக 12% வாக்குகளைப் பெறும் என்று சொல்லி இருக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை பாஜக முதல்வர் வேட்பாளர் என்று கணக்கு வைத்துக் காய் நகர்த்துகிறார். அங்கேதான் பிரச்சினை உள்ளது. ஒரே உறையில் இரண்டு வாள் எப்படி இருக்க முடியும்,
மோடி பிரதமர் என்றால், தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அதுதான் அவரது கணக்கு. அதற்கே உலை வைக்கும் காரியத்தில் அண்ணாமலை இறங்கியதில்தான் பூதம் கிளம்பியது.

முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பாக ஒருவர் இல்லாதபோது, ஏன் பாத யாத்திரை நடத்தி கட்சியை வளர்க்க வேண்டும். அதிமுக கொடுக்கும் சீட்டை வாங்கிக் கொண்டு பழைய பாஜகவாகவே தொடர்ந்து விடலாமே எனக் கட்சிக்குள் நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களில் ஆவேசமாகப் பேசி வருகிறார் அண்ணாமலை.
அந்தச் செய்திகள் அதிமுக தரப்புக்கு பாஜக பழைய தலைவர்களே தருகிறார்கள். அதைக் கேட்டு ஆடிப்போன பழனிசாமி, கூட்டணியை விட்டு வெளியேறுகிறார்.
மேலும் தொடர்ந்து அதிமுகவைத் தூக்கிச் சுமந்தால், ஒரு ஏக்நாத் ஷிண்டேவை பாஜக உருவாகிவிடும். கட்சியை உடைத்துவிடும். அத்துடன் அதிமுக கூட்டணி பலத்தைக் கொண்டு பாஜக தன் வாக்கு சதவீதத்தை வளர்த்துக் கொள்ளும். இந்தக் காரணங்கள் எல்லாம் தான் பாஜகவை எடப்பாடி புறக்கணிக்கக் காரணம்.

இதே காரணங்கள் டிடிவி தினகரன் மற்றும் ஒபிஎஸுக்கு உள்ளது. அதிமுக போனால் என்ன அமமுக வரும் என்றார்கள். ஒபிஎஸ் வருவார் என்றார்கள். இப்போது பாஜக பக்கம் இந்த இருவரும் வருவார்களா எனச் சந்தேகம் கிளம்பியுள்ளது.
ஏனென்றால், டிடிவி தினகரன் மற்றும் ஒபிஎஸை விழுங்கப் பார்க்கிறார் அண்ணாமலை. ஒபிஎஸ் ஐ விட டிடிவி தினகரன் தனது பலத்தைத் தேர்தலில் காட்டி இருக்கிறார். பல இடங்களில் அவரது கட்சி செல்வாக்கை நிரூபித்திருக்கிறது. அவருக்கே முதல்வர் கனவு இன்னும் வரவில்லை. அதற்குள் 3% வாக்குகளை வைத்து கட்சியான பாஜகவில் உள்ள அண்ணாமலைக்கு வந்துள்ளது துரதிருஷ்டம் என்கிறது அதிமுக.

டிடிவி தினகரன், 'நானும் ஒபிஎஸும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவது என்ற முடிவை எடுத்துள்ளோம் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது உண்மை. விரைவில் அறிவிப்போம்' என்று சொல்லி இருந்தார்.
ஆனால், டிடிவி மற்றும் ஒபிஎஸ் ஆகிய இருவர்களையும் தாமரை சின்னத்தில் நிற்கச் சொல்லி பாஜக அழுத்தம் தருவது உண்மை என்கிறார்கள் அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர். ஒபிஎஸ் மிகத் தைரியமாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். பொறுத்திருந்து பாருங்கள் என்றார். அதன்பிறகு அவர், பாஜக பக்கம் காணவில்லை. பிரதமர் மோடி கூட்டத்தில் அவர் பங்கேற் காதது சந்தேகத்தைக் கிளப்பியது.
டிடிவி தினகரனிடம் தாமரை சின்னத்தில் நிற்கச் சொல்வதாகக் கசிந்த தகவல் குறித்து கேள்வி எழுப்பியபோது அவர், 'எங்களுக்கு என்று குக்கர் சின்னம் இருக்கிறது. வதந்திகளை வைத்துக் கொண்டு கேள்வியைக் கேட்க வேண்டாம்' என்று மறுத்துள்ளார்.

இப்போதைக்கு அதிமுக பக்கம் டிடிவி தினகரனும் ஒபிஎஸும் போக முடியாது. ஆகவே அந்தப் பந்துகள் பாஜக மைதானம் பக்கமே ஒதுங்கும். அதன் மூலம் எடப்பாடியின் வலிமையைக் குறைத்து, தங்களின் பலத்தைக் காட்டவே திட்டம் தீட்டுவார்கள். இதில் பெரிய ரகசியம் எல்லாம் இல்லை.
எடப்பாடி பழனிசாமிக்கு அந்த நிலை இல்லை. அவர் கையில் தேமுதிக, அடுத்து பாமக என்று இரண்டும் ஒதுங்கிவிட்டால் மீண்டும் தமிழக தேர்தல் களம் திமுக Vs அதிமுக என்றே இருதுருவ அரசியலாக அமையும்.

அதில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே எழுதப்படாத ஒரு ரகசிய ஒப்பந்தம் ஒன்றுள்ளது. இரண்டு கட்சிகளைத் தாண்டி 3வது ஒரு கட்சி உள்ளே நுழைவதைத் தடுக்க இந்த இருகட்சிகளும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கும். இந்தக் கணக்கு நாளை தேர்தல் களத்திற்கு வரப் போகின்ற விஜய்க்கும் பொருந்தும்.













Click it and Unblock the Notifications