ரபேல் வாட்ச் திமுகவை அழிக்கும்! பில்லை அண்ணாமலை ஏப்ரலில் வெளியிடுவது ஏன்? அமர் பிரசாத் ரெட்டி விளக்கம்
சென்னை: ரபேல் இந்தியாவை பாதுகாக்கும்.. இந்த ரபேல் வாட்ச் திமுகவை அழிக்கும்.. குறிச்சு வச்சுக்கோங்க.. அண்ணாமலை ஏப்ரல் மாதம் இந்த பில்லை வெளியிட காரணம் உள்ளது என்று பாஜகவின் தமிழ்நாடு விளையாட்டு & திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். ஒன்இந்தியா தமிழுக்கு இது தொடர்பாக சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்று பல மேடைகளில் குறிப்பிடும் அண்ணாமலை 4.40 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட ரபேல் எடிஷன் பெல் அண்ட் ராஸ் வாட்சை வாங்கியது எப்படி என்ற கேள்வியை ஆளும் திமுக தரப்பு எழுப்பி உள்ளது.
இந்த வாட்ச் வாங்கிய பில் எங்கே என்று திமுகவினர் அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அண்ணாமலையோ பில்லை ஏப்ரல் மாதம் கொடுக்கிறேன் என்று கூறி உள்ளார். இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு..

அண்ணாமலை வாட்ச்
கேள்வி: அண்ணாமலை தனது ரபேல் வாட்சின் பில்லை ஏப்ரல் மாதம் தருவதாக சொல்கிறாரே.. ஏன் இப்போதே தரவில்லை என்று திமுகவினர் கேட்கிறார்களே?
உதயநிதி ஸ்டாலின் இத்தனை நாட்களாக எம்எல்ஏவாக இருந்தாரே. இப்போது ஏன் அமைச்சர் ஆனார். நல்ல நேரம் பார்த்து தானே அமைச்சர் ஆக்கினார்கள். அதேபோல்தான் நாங்களும் சில விஷயங்களை நேரம் பார்த்து செய்வோம். அவங்க சொல்லுகிற நேரத்துக்கு எல்லாம் பில் கொடுக்க முடியாது. எங்களுக்கு விருப்பமான நேரத்தில்தான் பில் கொடுப்போம்.

ஏப்ரல் மாதம்
ஏப்ரல் மாதம் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். அவர் நடைப்பயணத்தை தொடங்கும் போது அந்த பில்லை வெளியிடுவார். அந்த பில்லுடன் சேர்த்து திமுகவினர் செய்த ஊழல்கள் பற்றியும் பேசுவார்கள். திமுகவினர் சொத்து விவரங்கள் பற்றியும் அண்ணாமலை வெளியிடுவார். அதனுடன் பில்லையும் அண்ணாமலை சேர்த்து வெளியிடுவார். எல்லா பில்லும் அண்ணாமலையிடம் இருக்கிறது. இறக்குமதி வரி கட்டிய விவரங்களும் கூட இருக்கின்றன. அதை எல்லாம் காட்டுவோம். இவனுங்களுக்கு அண்ணாமலை பற்றி பேச வேறு விஷயம் இல்லை. அண்ணாமலை எங்கே மாட்டுவார் என்று தேடி தேடி பார்த்து இருக்கிறார்கள்.

வேறு விஷயம் இல்லை
அது கிடைக்கவில்லை என்றதும் அண்ணாமலை மீது வாட்ச் புகாரை வைக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை நேர்மையானவர். இந்த புகாரை வைத்தது யார்? இந்த பில்லை கேட்பது யார் சார்?
கேள்வி: அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி உள்ளிட்ட பலர் கேட்கிறார்களே?
செந்தில் பாலாஜிக்கு இதை பற்றி பேச தகுதி இருக்கா? அவரை உச்ச நீதிமன்றம் ஊழல் வழக்கில் கேட் வரை விரட்டி விரட்டி அடித்ததே. அவர் எல்லாம் இதை கேட்கலாமா? அவர் ஒரு ஊழல் பேர்வழின்னு உச்ச நீதிமன்றமே சொல்லி இருக்கே. அவர் வெளிப்படையாக வேலை வாங்கி கொடுப்பதில் ஊழல் செய்து இருக்கிறார். அவர் மீது இப்போது லஞ்ச தடுப்பு சட்டம் கூட பாய்ந்து இருக்கிறதே. அவர் மேல் ஊழல் வழக்கை ரத்து செய்ய மறுத்து உள்ளனர்.

ஊழல்
அவருக்கு பேச என்ன தகுதி இருக்கு. அவர் அதிமுகவில் இருக்கும் போது ஊழல் செய்ததாக ஸ்டாலின் கூறினார். இப்போது மட்டும் என்னவாம். ஊழலில் முகவரியே செந்தில் பாலாஜிதான் என்று ஸ்டாலின் கூறினாரே,. இப்போது மட்டும் உதயநிதி நல்லவராகிவிட்டாரா? செந்தில் பாலாஜி வந்து என்ன கிழித்தார். மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்கள் மடியில் அடித்தார். அவ்வளவுதான். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க.. ரபேல் இந்தியாவை பாதுகாக்கும்.. இந்த ரபேல் வாட்ச் திமுகவை அழிக்கும்.. குறிச்சு வச்சுக்கோங்க.. என்று அமர் பிரசாத் ரெட்டி குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications