ஆஹா.. "கோவைக்கே கிளம்பி வரேன்".. நேரடியாக களமிறங்கிய அமித் ஷா! பதறும் அதிமுக! உற்று பார்க்கும் திமுக
சென்னை: உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இந்த மாத இறுதியில் தமிழ்நாடு வர இருக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சமீபத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் பாஜக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
சுமார் 40 நிமிடம் இவர்கள் ஆலோசனை செய்தனர். இந்த நிலையில்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மாதம் 29ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் கோவைக்கு வர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நேஷனல் ஹெரால்டு வழக்கு.. காங்கிரஸ் கார்கேவுக்கு கிடுக்கிப்பிடி.. 7 மணிநேரம் விசாரித்த அமலாக்கத்துறை
காரணம் 1
அமித் ஷாவின் இந்த கோவை பயணத்திற்கு பின் 5 முக்கியமான காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றன. முதல் காரணம், பாஜக அலுவலகங்களை அவர் திறக்க வருவதாக சொல்லப்படுகிறது. திருச்சி, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக மாவட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில் கோவை அலுவலகத்தை அவர் நேரில் திறக்க உள்ளார். மீதம் உள்ள அலுவலகங்களை கோவையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க இருக்கிறார்.
காரணம் 2
இது அதிகாரபூர்வ காரணம் என்றாலும்.. வேறு சில காரணங்களும் இந்த பயணத்திற்கு பின்பாக சொல்லப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு திட்டமிடுவது தொடர்பாகவும் இவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். இதற்காக பாஜக மூத்த தமிழ்நாடு தலைவர்கள் எல்லோரும் கண்டிப்பாக கோவையில் ஆகஸ்ட் 29ம் தேதி இருக்க வேண்டும் என்று உத்தரவு சென்றுள்ளது.கோவைக்கு அமித் ஷா வருகிறார். முக்கிய தலைவர்கள் யாரும் அப்செட் ஆக கூடாது என்று உத்தரவு சென்றுள்ளதாம்.
காரணம் 3
அடுத்ததாக கட்சிக்கு உள்ளே இருக்கும் கோஷ்டி மோதல்கள் சிலவற்றை பேசி தீர்க்கவும் அமித் ஷா முடிவு செய்து இருக்கிறாராம். தமிழ்நாடு பாஜகவில் ஒரு சிலரின் லாபி அண்ணாமலையை இன்னும் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. அண்ணாமலை எடுக்கும் முடிவுகளை பாஜகவிலேயே சிலர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவர்களை சந்தித்து.. அண்ணாமலைக்கு கீழ் எல்லோரையும் தேர்தலுக்கு முன் ஒற்றுமையாக ஒன்று திரள வைக்கும் வகையில் அமித் ஷா பேச இருக்கிறாராம்.
காரணம் 4
இது போக 2024ல் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? எடப்பாடி - ஓபிஎஸ் மோதல் விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பது? சசிகலாவை ஆதரிக்கலாமா? என்றும் இவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். அதிமுக விவகாரம் இந்த பயணத்தில் "மெயின் டாப்பிக்காக" இருக்கும் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர். இந்த பயணத்திற்கு பின் அதிமுக மோதலில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக தலைவர்கள் கொஞ்சம் பதற்றத்தில்தான் இருப்பதாக கூறப்படுகிறது.
காரணம் 5
இது போக சிறிய சிறிய ஜாதி கட்சிகளுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைப்பது. திமுகவை சமாளிப்பது பற்றியும் இதில் பேச இருக்கிறார்களாம். அதோடு சில திமுக அமைச்சர்கள் பற்றிய புகார்களை அண்ணாமலை தரப்பு உள்துறை அமைச்சரிடம் நேரிடியாக இந்த பயணத்தில் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2024 தேர்தலுக்கு ஒன்றரை வருடமே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை ரெய்டுகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் அமித் ஷா வருகையை திமுக கவனமாக உற்று நோக்கி வருகிறது!