இதுதான் நல்லது.. ஃப்ரியா விடுங்க! எடப்பாடி எழுச்சியால் குஷியில் அறிவாலயம்? பின்னணியில் 4 காரணங்கள்!
சென்னை: அதிமுகவில் எடப்பாடி - ஓபிஎஸ் இடையிலான மோதலில் தலையிட திமுக மறுத்துவிட்டதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பு ஆளும் திமுகவை பல்வேறு முறை சமாதானம் பேச அணுகியதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video
எடப்பாடி - ஓபிஎஸ் இடையே சமாதானம் செய்ய ஆளும் திமுகவை ஓபிஎஸ் தரப்பு அணுகியதாக கூறப்பட்டன. அதோடு சட்ட ஒழுங்கை காரணம் காட்டி பொதுக்குழுவை தடை செய்யவும் ஓபிஎஸ் தரப்பு ஆளும் திமுக தரப்பிடம் வேண்டுகோள் விடுத்ததாக பல்வேறு தகவல்கள் வந்தன.

ஓபிஆர் என்ன சொன்னார்?
சமீபத்தில் கூட ஓபிஎஸ் மகன் ஓ பி ரவீந்திரநாத் எம்பி அளித்த பேட்டியில்.. ஆளும் திமுக தரப்பும் அதிமுக பொதுக்குழு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று இலைமறைகாயாக பேசி திமுகவின் ஆதரவை வேண்டி இருந்தார். ஆனால் திமுக இந்த விவகாரத்தில் தலையிட்டுக்கொள்ளவே இல்லை. நேரடியாகவும் சரி.. மறைமுகமாகவும் சரி.. ஆளும் திமுக இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்கவில்லை. ஓபிஎஸ் தரப்பு பல முறை அணுகியும் திமுக இதை தளியிட்டுக்கொள்ளவில்லையாம்.

என்னாச்சு
ஆளும் திமுக நினைத்து இருந்தால் சட்ட ஒழுங்கை காரணம் காட்டி பொதுக்குழுவை தடை செய்து இருக்க முடியும். ஆனால் அந்த முடிவை எடுக்க திமுக விரும்பவில்லை என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர். முக்கியமாக எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி கூட ஒரு விதத்தில் நல்லதுதான். திமுகவிற்குத்தான் இது சாதகமாக முடியும்.. அரசியல் ரீதியாக திமுகவிற்கு இதுதான் மிக மிக நல்லது என்று திமுகவின் மூத்த தலைகள் நினைக்கிறார்கள். இதற்கு 4 முக்கிய காரணங்களையும் அவர்கள் சொல்கிறார்கள்.

காரணம் 1 - டிராக் ரெக்கார்ட்
அதிமுகவில் எடப்பாடி வந்த பின் எந்த தேர்தலிலும் அக்கட்சி வெற்றிபெறவில்லை. 2 இடைத்தேர்தலை தவிர வேறு எதிலும் அக்கட்சி வெற்றிபெறவில்லை. அதிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி வலுவாக இருக்கும் கொங்கு மண்டலத்திலேயே.. ஏன் அவரின் சொந்த சேலம் மாவட்டத்திலேயே அதிமுக படுதோல்வி அடைந்தது. இதனால் எடப்பாடிக்கு கீழ் அதிமுக இருப்பதால் திமுகவின் வெற்றி எளிதாகும்.. கடந்த 3 - 4 வருட டிராக் ரெக்கார்ட் இதைத்தான் சொல்கிறது என்று திமுக தரப்பு நினைக்கிறதாம்.

காரணம் 2 - கோடநாடு வழக்கு
இரண்டாவது விஷயம்.. எடப்பாடி தலைக்கு மேல் கோடநாடு வழக்கு கத்தி போல தொங்கிக்கொண்டு இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு ஒரு காலத்தில் டான்சி வழக்கும்.. பின்னர் சொத்து குவிப்பு வழக்கும் இருந்தது போல எடப்பாடிக்கு கோடநாடு வழக்கு. இதனால் எப்போது வேண்டுமானாலும் எடப்பாடியை வீழ்த்த இந்த வழக்கு அஸ்திரமாக பயன்படும் என்று அறிவாலயம் கருதுகிறதாம். எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனாலும்.. அவரின் லகான் எங்கள் கையில் என்ற குஷியில் அறிவாலயம் இருக்கிறதாம்.

காரணம் 3 - தென் மாவட்டங்கள்
மூன்றாவது காரணம்.. எடப்பாடி அதிமுகவில் எழுச்சி பெற்றால்.. தென் மாவட்டங்களில் அக்கட்சி பலத்த சேதம் அடையும். முக்கியமாக முக்குலத்தோர் வாக்குகள் உள்ள தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுக கடும் பின்னடைவை சந்திக்கும். கடந்த சட்டசபை தேர்தலில் கூட தென் மாவட்டங்களில் அதிமுக மோசமாக தோல்வி அடைய முக்குலத்தோர் வாக்குகள் பிரிந்தது காரணமாக அமைந்தது. எனவே எடப்பாடியின் எழுச்சி தங்களுக்குத்தான் நல்லது என்று வாக்கு வங்கி ரீதியாக திமுக கருதுகிறதாம்.

காரணம் 4 - கொங்கு - செந்தில் பாலாஜி
சரி கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு கீழ் அதிமுக வலுவாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லை என்கிறார்கள். கொங்கு மண்டலத்திலும் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலேயே அதிமுக படுதோல்வி அடைந்துவிட்டது. அங்கு செந்தில் பாலாஜியையே அதிமுகவால் சமாளிக்க முடியவில்லை. எனவே எடப்பாடிக்கு கீழ் கொங்குவை கைப்பற்றுவதும் கஷ்டமான காரியம் இல்லை என்று திமுக நினைக்கிறதாம்!
இதன் காரணமாகவே ஓபிஎஸ் அவ்வளவு கேட்டும்.. ஆளும் திமுக அவருக்கு உதவ முன் வரவில்லை என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications