Layoff: அலறவிடும் ஏஐ! ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்!அரசு ஏன் வேடிக்கை பார்க்குது? குமுறும் சங்கம்
சென்னை: ஒரு காலத்தில் ஐ.டி. வேலை என்பது கனவு வேலை; குடும்பத்தில் 'ஐ.டி. வேலை கிடைத்துவிட்டால் போதும்' என்று பெருமையாகப் பேசப்படும் நிலை இருந்தது. ஆனால் இன்று? பணி நீக்க அச்சம், செயற்கை நுண்ணறிவு பற்றிய பயம், நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் என ஐ.டி. ஊழியர்களின் நிலை தலைகீழாக மாறியுள்ளது.

நிறுவனங்கள் லாபத்தில் இயங்கினாலும், ஏன் ஊழியர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்ற கேள்வி பலரின் மனதிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவ்விஷயத்தில் அரசாங்கம் ஏன் தலையிடுவதில்லை? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஐடி ஊழியர்களின் 'யுனைட்' சங்கத்தின் பொதுச்செயலாளர் வெல்கின், ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: "1990-களுக்குப் பிறகு, அரசு புதிய தாராளமயக் கொள்கையை (New Liberal Policy) ஏற்றுக் கொண்டது. இதன் முக்கிய அம்சம், நிறுவனங்கள் தேவைப்படும்போது ஊழியர்களை வெளியேற்றலாம் என்பதுதான்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய போது, 'நிறுவனங்களை சட்டப்படி ஒழுங்குபடுத்தக் கூடாது' என்ற நிபந்தனை இந்தியாவுக்கு விதிக்கப்பட்டது. இதனால், எந்த அரசு வந்தாலும் இக்கொள்கையைப் பின்பற்றுகிறது.
நிறுவனங்கள் சட்டத்தை மீறினால் கேள்வி எழுப்பக் கூடாது என்கிற நிலை உருவாகிறது. பெரும்பாலான நடுத்தர வர்க்க ஊழியர்களுக்கு ஒரு பயம் இருக்கும். இவ்வளவு பெரிய நிறுவனத்தை எதிர்த்தால், எதிர்காலத்தில் வேலை கிடைக்குமா கிடைக்காதா என்ற பயத்தினால், நியாயம் கேட்கத் தூண்டுவதில்லை.
அதனால்தான் சிலரால் மட்டுமே பேச முடிகிறது. நிறுவனங்கள் எந்தப் பயமும் இன்றி, "நாங்கள் இத்தனை பேரை நீக்கப் போகிறோம்; ஊழியர்களைக் குறைக்கப் போகிறோம்" என வெளிப்படையாகவே அறிவிக்கின்றன.
அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அவர்களுக்கு பயம் வரும். சட்டத்தில் தெளிவான விதிமுறைகள் இருந்தும், அரசு செயல்படுத்த தயக்கம் காட்டுகிறது. சமீபத்தில், சாம்சங் நிறுவனத்தில் ஊழியர்கள் முழங்கால் போட்டு உட்கார வைக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின், 12 ஆண்டுகள் கழித்து அங்கே ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. அது போல் ஐடி துறையிலும் சங்கம் ஒன்று தொடங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களை யூடியூப் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்:
TCS, HCL, Cognizant, Infosys போன்ற பெரிய கம்பெனிகளில் ஊழியர்கள் பணிநீக்கம், சம்பள குறைப்பு செய்து வருகிறார்கள். இதனால் வேலை கிடைக்காமல் இருந்த வேலையும் போய், ஊழியர்கள் கடுமையான மனஉளைச்சலுக்குள்ளாகிறார்கள். இதற்கு அரசு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அனைத்து ஊழியர்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications