தாது மணல் ஏற்றுமதியால் விவி மினரல்ஸ் சட்ட விரோத சம்பாத்தியம்.. வருமான வரித்துறை விளக்கம்
Recommended Video

சென்னை: தாது மணல் ஏற்றுமதி மூலமாக சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளதாக, விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு எதிராக புகார் வந்துள்ளதாக வருமான வரித் துறை விளக்கம் அளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை கீரைக்காரன்தட்டு பகுதியை, தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருவது விவி மினரல்ஸ். இதன் உரிமையாளர் வைகுண்டராஜன்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடற்கரைகளில் குவிந்துள்ள தாது மணலை சட்டவிரோதமாக அள்ளி எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக இந்த நிறுவனத்தின் மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது.
வைகுண்டராஜன் சகோதரருக்கு சொந்தமான நெல்லை மாவட்டம் குட்டம் உள்ளிட்ட ஊர்களில் செயல்பட்டு வரும் பிஎம்சி நிறுவனமும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு, மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளையும் உவர்ப்பு நிறையும் பரிசாக அளிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மணலிலுள்ள தாதுக்களை கொண்டு, வெளிநாடுகளில் அணுகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வு நடத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அவர் அளித்த அறிக்கை இன்னும் அம்பலப்படுத்தப்படாமல், அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வைகுண்டராஜனின் மற்றொரு சகோதரர் குமரேசன் இரு வருடங்களுக்கு முன்பாக சென்னையில் ஒரு பரபரப்பு பேட்டி அளித்தார். அதில், மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் விதிக்கப்பட்ட தடையை மீறி விவி மினரல்ஸ் நிறுவனம், தொடர்ந்து தாது மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால் தமிழக அரசுக்கு 10 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தடையை மீறி 50 லட்சம் டன் அளவுக்கு தாது மணலை வைகுண்டராஜன் வெளிநாடுகளுக்கு கடத்தி உள்ளார். இந்த சட்ட விரோத நடவடிக்கையை ரவுடிகளின் பாதுகாப்புடன் நடத்தி வருகிறார். இதுவரை 50 காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வைகுண்டராஜனின் சொத்துக்களை முடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குமரேசன் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான், வருமானவரித்துறை அதிகாரிகள் விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வைகுண்டராஜன் வீடு அவரது மகன் வீடுகளும் சோதனையில் தப்பவில்லை. அவர்கள் நடத்தி வரும் டிவி சேனலிலும் ரெய்டு நடக்கிறது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த பிரமாண்ட வருமான வரி சோதனை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக இன்று காலை வருமான வரித்துறை சார்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தாது மணல் கடத்தல் மூலமாக சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை வேறு பல தொழில்களில் மினரல்ஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளது என்று புகார்கள் வந்ததாகவும், இந்தப் புகார்களை உறுதி செய்வதற்காக ரெய்டு நடத்தி வருவதாகவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக வருமான வரி ஏய்ப்பு செய்து வந்ததாகவும், வைகுண்டராஜன் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் அசோக் நகர், அண்ணாநகர், எழும்பூர், பெசன்ட் நகர், பெரம்பலூர் மாவட்டம் உடும்பியத்தில் உள்ள சர்க்கரை ஆலை, கோவை, நெல்லை, ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், காரைக்கால் ஆகியவற்றிலும் வருமான வரி ரெய்டு நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications