"கோவை தெற்கில்" கமல்ஹாசன்.. பக்கா ஸ்கெட்ச்.. திமுக, அதிமுக இல்லாத களம்.. "கொத்தாக" ஓட்டுக்கள்
சென்னை: பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன், முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார் என்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி வட்டாரத்தில்.
கமல்ஹாசன் சொந்த ஊர் பரமக்குடி. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிறது. அங்கு போட்டியிடவில்லை. ரொம்ப காலமாக சென்னையில் வசித்து வருகிறார் கமல்ஹாசன்.
சென்னை மக்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் எழுப்பியவர் அவர். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது துணிச்சலாகக் குரல் கொடுத்தவர். ஆனால் சென்னையில் போட்டியிடவும் அவர் முடிவெடுக்கவில்லை. கோவை தெற்கு தொகுதியை எதற்காக கமல் தேர்வு செய்தார்.

காரணம் இருக்கு பாஸ்
எல்லாம் காரணமாகத்தான் என்று கண் சிமிட்டுகிறார்கள் மக்கள் நீதி மையத்தார். ஆம்.. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு செல்வாக்குமிக்க தொகுதிகளில் ஒன்று கோவை. 2019 லோக்சபா தேர்தலின்போது இங்கு மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 1 லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்து அசத்தினார். திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நடராஜன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 150 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார்.

இரு மடங்கு அதிக வாக்குகள்
வது இடம் பிடித்தது பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன். இவர் அதிமுக கூட்டணியில் களமிறங்கினார். இதே தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் கல்யாணசுந்தரம் 60 ஆயிரம் வாக்குகள் வாங்கி நான்காவது இடம் பிடித்தார். அதாவது இவரைவிட மக்கள் நீதி மய்யம் கட்சி இரண்டு மடங்குக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றது. இந்த நிலையில்தான், கோவை தெற்கு தொகுதியை கமல்ஹாசன் தேர்வு செய்துள்ளார்.

திமுக, அதிமுக போட்டியில்லை
இதில் இன்னொரு முக்கிய விசேஷம் இருக்கிறது. இந்த தொகுதியில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் போட்டியிடவில்லை. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய அந்த திராவிட கட்சிகளும், தங்களின் கூட்டணியில் உள்ள தேசிய கட்சிகளுக்கு இந்த தொகுதியை விட்டுத் தந்துள்ளன. எனவே, கமல்ஹாசன் தனது முதல் தேர்தலில் இரட்டை இலை மற்றும் உதயசூரியன் ஆகிய இரண்டு சின்னங்களை எதிர்க்க போவது கிடையாது. தாமரை மற்றும் கை சின்னங்கள்தான் போட்டியாளர். ஒப்பீட்டளவில் இது சற்று எளிமையான மோதலாக இருக்கும் என்பது கமல் தரப்பு திட்டமாக இருக்கிறது.

இரு தொகுதிகளில் போட்டியில்லை
கோவை தெற்கு மற்றும் சென்னை ஆலந்தூர் ஆகிய இரு தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிடலாம் என்று திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால் இரு தொகுதிகளில் போட்டியிடுவது தன்னை பலவீனமாக காட்டும் என்பதால் ஒரே தொகுதியில் போட்டியிடும் முடிவை அவர் எடுத்து உள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கமல்ஹாசன் வியூகம்
தனது முழு பிரச்சாரத்தையும், தனது கட்சியின் முழு பலத்தையும், கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் களம் இருக்க முடியும். அந்த தொகுதியில் தனக்கு இருக்கும் ஆதரவை பெற முடியும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். கோவை தெற்கு தொகுதியில் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி குழுவினர் தீவிரமாக களப்பணியாற்றி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக திட்டமிட்டு இரண்டு திராவிட கட்சிகளும் போட்டியிடாத இந்த நிலையை கணித்து, குறிவைத்து அடித்துள்ளார் கமல்ஹாசன் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications