விசிக, ஐயுஎம்எல்-ன் திடீர் தாவல்.. ஆனாலும் திமுக கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகள்! காரணம் இதுதான்!
சென்னை: வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போம் என்று சொன்ன விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மு.க.ஸ்டாலின் சொல்வதைதான் கேட்போம் என்று சொன்ன ஐயுஎம்எல் கட்சியும் தற்போது தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அமைச்சரவையில் பங்கெடுத்திருக்கின்றன. இருப்பினும் தேமுதிக போன்ற கட்சிகள் இன்றும் திமுக கூட்டணியில் தொடர்கிறது. ஏன் இக்கட்சிகள் திமுக கூட்டணியை விட்டு பிரிந்து வரவில்லை என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக, மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருந்தது. இருப்பினும், தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பலம் இல்லை.

திமுக கூட்டணி கட்சிகள்
எனவே, கூட்டணியை தவெக நாடியது. குறிப்பாக திமுக கூட்டணியிலிருந்த கட்சிகள் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தவெக கேட்டுக்கொண்டது. அப்படியாக முதலில் காங்கிரஸ் தனது ஆதரவை கொடுத்திருந்தது. அதை தொடர்ந்து இடதுசாரிகள், அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்று சொல்லி வெளியிலிருந்து ஆதரவளிக்க முன்வந்தனர்.
முதலமைச்சராக விஜய்
பின்னர் ஐயுஎம்எல் கட்சியும், விசிகவும் ஆதரவு தெரிவித்தது. எனவே, இந்த பெரும்பான்மையுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இருப்பினும் திமுக கூட்டணியிலிருந்த கட்சிகளின் உதவியோடுதான் விஜய் முதலமைச்சரானார் என்று திமுகவினர் பேசி வருகின்றனர். மறுபுறம் தேமுகதிக போன்ற கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து பிரிய மாட்டோம் என்று உறுதியாக சொல்லியிருப்பது கவனம் பெற்றிருந்தது. இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
தேமுதிக விலகாமல் இருக்க காரணம்
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், கடைசி நேரத்தில்தான் தேமுதிக இணைத்துக்கொள்ளப்பட்டது. மட்டுமல்லாது, நம்பிக்கைக்குரிய தோழமை கட்சிகளான விசிக, இடதுசாரிகளை விட.. தேமுதிகவுக்குதான் அதிக தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதுபோக ஒரு மாநிலங்களவை எம்பி பதவியும் கொடுக்கப்பட்டது. இவ்வளவையும் வாங்கிக்கொண்டு தவெக பக்கம் சாய்வது சரியாக இருக்காது என்பதால்தான் தற்போது வரை தேமுதிக, திமுக கூட்டணியில் நீடிக்கிறது. தேமுதிக தவிர..
- மனித நேய மக்கள் கட்சி
- மதிமுக
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
- மனிதநேய ஜனநாயக கட்சி
- எஸ்டிபிஐ
- முக்குலத்தோர் புலிப்படை
- தமிழர் தேசியம்
மற்ற கட்சிகளின் நிலை
உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. ஆனால், இக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டிருந்தனர். இதில் மதிமுக 2, கொமதேக 1, மனிதநேய ஜனநாயக கட்சி 1, மனிதநேய மக்கள் கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. இக்கட்சிகளால் திமுக கூட்டணியிலிருந்து விலகி வர முடியாது. காரணம், இவை தனி சின்னத்தில் போட்டியிடாமல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருக்கின்றன.
கொறடா உத்தரவு
தனி சின்னத்தில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளில் தேமுதிகவை தவிர அனைத்தும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. இப்படி இருக்கையில் மதிமுக உட்பட மேலே குறிப்பிட்ட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தால் சட்ட சிக்கல் உருவாகும். ஏனெனில், போட்டியிட்டு வெற்றி பெற்றது உதயசூரியன் சின்னம் என்பதால், திமுகவின் கொறடா உத்தரவை மீறி செயல்பட முடியாது. அப்படி நடந்தால் எம்எல்ஏ பதவி காலியாகும். எனவேதான் இந்த கட்சிகள் அனைத்தும் தற்போது வரை திமுக உடன் பயணித்து வருகின்றன.
அதிருப்தியில் திமுக
மறுபுறம் தவெக தலைமையிலான கூட்டணியில் விசிக இடம்பெற்றிருந்தது திமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதை மறைமுகமாக குறிப்பிட்டு திமுக எம்பி ஆ.ராசா x தளத்தில் கடுமையாக பதிவிட்டிருந்தார். கடும் சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அந்த பதிவு நீக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications