சர்கார் விவகாரம் பற்றி, முக்கியமான இந்த இரண்டு பேரும் கருத்து சொல்லவில்லை கவனித்தீர்களா?
Recommended Video

சென்னை: 'சர்கார்' திரைப்பட விவகாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுமே, கருத்து தெரிவித்து விட்ட நிலையிலும், தமிழகத்தை சேர்ந்த இரு 'தளபதிகள்' அது பற்றி இதுவரை ஒன்றுமே கூறாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார் திரைப்படத்தில் அதிமுக மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்யும் காட்சிகள், வசனங்கள் மறைமுகமாக இடம் பெற்றிருந்ததாக குற்றஞ்சாட்டி, அதிமுகவினர் கடும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மதுரை, திருச்சி, சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 'சர்கார் படத்தை, திரையிட்ட திரையரங்குகளில் வைக்கப்பட்ட பேனர்கள், கட்-அவுட்டுகள், அதிமுகவினரால் கிழித்து எறியப்பட்டன.

நள்ளிரவு ட்வீட்
அதிமுகவினரின் இந்த அடாவடி நடவடிக்கையை கண்டித்து, மக்கள் நீதி மய்யம், கட்சித்தலைவர் கமல்ஹாசன், உள்ளிட்ட திரை உலகைச் சேர்ந்த பலரும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்து விஷயத்தின் வீரியத்தை உணர்த்தினார்.

விஜய் கருத்து இல்லை
ஆனால், இந்த திரைப்படத்தின் கதாநாயகன் விஜய், இதுவரை படம் தொடர்பான சர்ச்சைகளுக்கோ, அடாவடிகளுக்கோ, பதில் அளிக்கவில்லை. 'சர்கார் திரைப்படம் தொடர்பாக கட்-அவுட், பேனர்கள் வைத்த, ரசிகர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ள நிலையிலும் கூட அது குறித்து தனது கண்டனத்தையோ, அல்லது குறைந்தபட்சம் கருத்தையோ கூட, விஜய் தெரிவிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

திமுக நிர்வாகி
திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின், சென்னை மேற்கு மாவட்ட, செயலாளர், ஜெ.அன்பழகன் கூட, ட்விட்டரில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில், அரசியலுக்கு விஜய் வருவார் என முன்பு நினைத்தேன். நடைபெற்ற சம்பவங்களை பார்க்கும்போது, விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார். விஜய் தனது ரசிகர்களுக்காக குரல் கொடுப்பாரா? என வினா எழுப்பியிருந்தார்.

அரசியல் தளபதி
திரையுலகத்தின் 'தளபதி'தான் வாய் திறக்கவில்லை என்றால், அரசியலில் 'தளபதி' என்ற அடைமொழியுடன் வலம் வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. 'சர்கார் விவகாரம் என்பது ஒரு திரைப்படம் தொடர்பான விஷயம் மட்டுமின்றி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் அளவுக்கு வளர்ந்து சென்ற ஒரு பிரச்சினையாக இருந்த போதிலும், அது பற்றி ஸ்டாலின் கருத்து தெரிவிக்காதது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

காரணம் என்ன?
தனது உறவினர் ஒருவர் தயாரித்த திரைப்படம் என்பதால் இதற்கு எழுந்த சிக்கலுக்கு தான் கருத்து தெரிவிப்பது என்பது, குடும்ப கட்சி என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் ஸ்டாலின் மௌனமாக இருந்தார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கும் போதிலும், திரைப்படம் என்பதை தாண்டி, எப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை அளவுக்கு சென்றதோ, அப்போது மாநிலத்தின் நிழல் முதல்வர் என்ற அந்தஸ்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் இது குறித்து கருத்து தெரிவித்து இருக்க வேண்டும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது. விஜய் என்ற ஒரு தனிப்பட்ட நடிகரின் அரசியல் ஆசையை வளர்த்து விடக்கூடாது என்ற எண்ணம் திமுகவில் உள்ள சில தலைவர்களுக்கு இருப்பதாகவும், அவர்கள் அறிவுறுத்தலின் பேரில்தான் ஸ்டாலின் இது பற்றி கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூட ஒரு சில தகவல்கள் உலா வருகின்றன.












Click it and Unblock the Notifications