முளையிலேயே கிள்ளி எரியுங்க! 7 மாசம் ரொம்ப முக்கியம்! ஸ்டாலின் "சினம்".. போலீசாருக்கு முக்கிய உத்தரவு
சென்னை: நேற்று நடந்த தமிழ்நாடு காவல்துறை எஸ்பிக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முக்கியமான சில உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
முக்கியமாக தமிழ்நாடு பாதுகாப்பு தொடர்பாக அதிரடி உத்தரவுகள் சிலவற்றை வெளியிட்டார். அவரின் உத்தரவுகள் பின்வருமாறு, காலை முதல் பல்வேறு கருத்துக்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையும் சாதனையும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான். அமைதியான மாநிலத்தில் தான் அனைத்து துறைகளும் வளரும். நான் அடிக்கடி வலியுறுத்துவது குற்றங்களைக் குறைத்துவிட்டோம் என்பதாக அல்லாமல், குற்றம் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்பதாக தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக, எளியோர் பக்கமாகக் காவல் துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர். வறியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் நாடக்கூடிய அரசாகும். ஒரு சாமானியர் தன்னுடைய விண்ணப்பம் / புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காவல் நிலையத்தை நாடுகின்றார் என்றால், அந்த நம்பிக்கையினைக் காப்பாற்றுவது தான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம்.
ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்க வரும் மனுதாரர்களைக் கனிவுடன் நடத்துவதற்கும், அவர்களுக்கு வழிகாட்டவும் வரவேற்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பாளர்களை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும். இவர்களை மற்ற பணிகளுக்காகப் பயன்படுத்துவதாக எனக்குத் தெரிய வருகிறது. அது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். பெறப்படும் அனைத்து விண்ணப்பங்கள் / புகார்களும் இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டு, அதற்கான ஒப்புகைச் சீட்டு மனுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அனைத்து காவல்துறை ஆணையர் / மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு புதன்கிழமையன்றும் குறைகேட்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு நான் ஆணையிட்டேன். அன்றைய தினம் நீங்கள் மனுதாரர்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து அதிக மனுக்களோ அல்லது திரும்பத் திரும்ப ஒரே பொருள் குறித்து தொடர்ந்து மனுக்கள் வரும் நிலையில் அந்தக் காவல் நிலையங்களுக்கு நீங்களே நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். காரணத்தைக் கண்டறிந்து அதனுடைய பிரச்சனையை புரிந்து, அதனை முழுமையாகத் தடுத்து, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அரசு வழக்கறிஞர்கள், அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள், உதவி இயக்குநர்/ இணை இயக்குநர், குற்ற வழக்குகள் தொடர்வுத் துறை உள்ளிட்ட சட்ட அலுவலர்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள இனங்கள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய வேண்டும். ஃபோக்சோ வழக்குகளில் தடய அறிவியல் துறையின் ஆய்வறிக்கை மிக முக்கிய ஆதாரம் என்பதால் அதனை விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• காவல்துறைத் துணைத்தலைவர்கள் (DIG) மாதத்திற்கு ஒருமுறையும், மண்டல காவல்துறைத் தலைவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் அனைத்து வழக்குகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
• நிலுவையில் உள்ள அனைத்து பிடியாணைகளையும் நிறைவேற்றி சட்டம் ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிப்போரைக் கைது செய்து தேவைப்பட்டால், பொது அமைதியை நிலைநாட்ட குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனைப் பெற்றுத் தந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும். ஆகையால், காவல்துறை ஆணையர் கண்காணிப்பாளர்கள் இதனை மாதந்தோறும் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கையை அனுப்ப வேண்டும்.
• நிலுவையில் உள்ள அனைத்து மனுக்கள் விசாரணை அதனுடைய இனங்கள். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய இனங்கள் ஆகியவற்றை காவல் நிலையங்களுக்கே சென்று ஆய்வு செய்வதோடு, அதன் தொடர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
•கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
• சாதிமத பூசல்கள் சிறிய அளவில் ஏற்படும் நிலையிலேயே கண்டறியப்பட்டு, முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
•சட்டம் ஒழுங்கு மற்றும் சாதி உணர்வுகளைத் தூண்டக்கூடிய பிரச்சினைகளில் கவனமுடன், மாவட்ட நிர்வாகத்திற்குக் கீழான அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும்.
• அடுத்து வரும் ஏழு, எட்டு மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலம். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் காவலர் முதல் காவல்துறை உயரதிகாரிகள் வரை மிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும்.
• சமூக ஊடகங்களின் நிகழ்வுகளையும் கண்காணித்து வரவேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications