தொங்க விட்டு மிரட்டலாமே.. சிங்கம்னு நிரூபிங்க அண்ணாமலை.. எருமை கதை சொல்லி சீண்டிய காயத்ரி!
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடப்போகிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாத நிலையில், அண்ணாமலை தன்னை இடைத்தேர்தலில் ஆதரிக்கும்படி, கூட்டணி கட்சிகளை மிரட்ட வேண்டியதுதானே தான் சிங்கம் என்பதை நிரூபிக்க வேண்டியதுதானே என்று சீண்டியுள்ளார் காயத்ரி ரகுராம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான மோதலைத் தொடர்ந்து, அவரை மறைமுகமாக விமர்சித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தொடர்ச்சியாக அண்ணாமலையை நேரடியாக அட்டாக் செய்து வருகிறார்.
அந்தவகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள சூழலில், அண்னாமலையை சீண்டி வருகிறார் காயத்ரி ரகுராம்.
2 நடிகர்களிடம் சென்றார் அண்ணாமலை.. அப்புறம்தான் பாஜக.. விடாமல் அட்டாக் செய்யும் காயத்ரி ரகுராம்!
காயத்ரி - அண்ணாமலை மோதல்
பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்த காயத்ரி ரகுராம், பாஜகவில் சூர்யா சிவா - டெய்சி சரண் விவகாரத்தில் ட்விட்டரில் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்ததற்காக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராகவும் அண்ணாமலை பெண்களை குறிவைத்து அவதூறு கிளப்புவதற்காகவே வார் ரூம் வைத்திருப்பதாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் காயத்ரி. முதலில் மறைமுகமாக தாக்கி வந்தவர், பின்னர் நேரடியாக பெயரைச் சொல்லியே ட்வீட்களை பதிவிடத் தொடங்கினார்.
காயத்ரி அட்டாக்
சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் சமீபத்தில் அறிவித்தார் காயத்ரி. இதையடுத்து கட்சியில் இருந்து காயத்ரி ரகுராமை நீக்கினார் அண்ணாமலை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, பாஜகவுக்கு எதிராக நடைபயணம் செல்லப்போவதாக அறிவித்த காயத்ரி ரகுராம், நாள்தோறும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை தன்னை எதிர்த்துப் போட்டியிடுமாறு சவால் விடுத்தார் காயத்ரி.
சிங்கம் - எருமை கதை
இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில், அதிமுகவில் ஓபிஎஸ் அணி தனியாகவும், ஈபிஎஸ் அணி தனியாகவும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், பாஜகவும் போட்டியிடப்போகும் சூழல் நிலவுவது பற்றி ஒரு வீடியோவைப் பகிருந்து விமர்சித்துள்ளார் காயத்ரி. "ஐந்து சிங்கங்கள் எருமையை வேட்டையாடி விருந்துண்ணத் தயாராகின்றன. அப்போது சிங்கங்களுக்கு இடையில் சண்டை மூண்டது. சிங்கங்களுக்கு இடையே நிலவிய குழப்பமான சண்டையில், எருமை எழுந்து நின்று தப்பி ஓடுகிறது. இத்தான் ஈரோடு இடைத்தேர்தலில் கூட்டணியின் கதை." என்று பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று
மேலும் மற்றொரு பதிவில், "அண்ணாமலை ஏன் கூட்டணிக் கட்சியை ஈசிஆர் ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று தேர்தல் குறித்து முடிவு செய்யக்கூடாது? அண்ணாமலை பாணியில் ஓடும் விமானத்தின் எமெர்ஜென்சி கதவைத் திறந்து 4 பேரை தலைகீழாக தொங்கவிட்டு மிரட்டி பாஜக நட்சத்திர வேட்பாளரான தன்னை ஏன் ஆதரிக்கச் சொல்லக்கூடாது. அண்ணாமலை தான் சிங்கம் என்பதை நிரூபிப்பதுடன், பெருமைக்குரிய கன்னடிகா வளர்ப்பு மகன் என்பதையும் நிரூபிக்க வேண்டும்." எனப் பதிவிட்டுள்ளார்.