வெள்ளத்தில் கார் சிக்கிடுச்சா.. இதெல்லாம் மறந்தும் செஞ்சுடாதீங்க.. சென்னை கார் விற்பனையாளர்கள் பேட்டி
சென்னை: சென்னையில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய கார்களை உடனே ஸ்டார்ட் செய்யக்கூடாது என்றும் அப்படி செய்தால் மேலும் பாதிப்பு அதிகமாகும் என்றும் கார் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். காரை பழுது நீக்காமல் ஸ்டார்ட் செய்தால் என்ஜினில் பெரிய பிரச்சனையாகும் என்றும் எச்சரித்தனர்.
சென்னையில் கனமழை காரணமாக மிகப்பெரிய வெள்ளம் சென்னை முழுவதும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் ஏராளமான கார்கள் பழுதடைந்துள்ளன. சென்னையில் பலரும் கார்களை சரி செய்ய கடைகளில் கொடுத்துள்ளனர் . ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான கார்கள் பழுதடைந்துள்ளதால் அதனை சரி செய்ய ஆட்கள் இல்லாமல் கார் பழுது பார்க்கும் நிறுவனங்களே ஸ்தம்பித்து போய் இருக்கின்றன. ஒரே நேரத்தில் பல ஆயிரம் கார்களை எடுத்து சர்வீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது

கார்களை ரெக்கவரி வண்டியை வைத்து தூக்கி கொண்டு போகும் சம்பவங்கள் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட சென்னையில் பெரும்பாலான கார்கள் பழுதடைந்துவிட்டன. முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிய கார்கள், அடித்து செல்லப்பட்ட கார்கள், வயலுக்குள் விழுந்த கார்கள், கவிழ்ந்து கால்வாய்க்குள் விழுந்த கார்கள் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு பலத்த சேதம் அடைந்துள்ளன . முழங்கால் அளவு தண்ணீரில் சிக்கிய கார்கள், தண்ணீர் புகுந்த காரணத்தால் ஸ்டார்ட் ஆகாமல் உள்ளன.
இந்நிலையில் சென்னையில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய கார்களை உடனே ஸ்டார்ட் செய்யக்கூடாது என்றும் அப்படி செய்தால் மேலும் பாதிப்பு அதிகமாகும் என்றும் கார் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். மேலும் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்கள் பாதி விலைக்குத்தான் வாங்கப்படுவதாகவும் கூறினார்கள்.
இது தொடர்பாக கார் விற்பனையாளர் சாதிக் பாட்ஷா, தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், புது வண்டி 2020 மாடல் நாம் எடுக்குறோம் என்றால், சாதாரணமாக நாம் 4 லட்சத்தில் இருந்து 3.5 லட்சத்திற்கு எடுப்போம். இதேநேரம் வெள்ளத்தில் சிக்கிய வாகனம் என்றால் இதில் பாதிக்கு பாதி தான் நாங்கள் எடுப்போம். ஏனெனில் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களில் செலவு அதிகம்.. ஒரு லட்சம் வரை செலவு ஏற்படும்.
ஒரு லட்சம் செலவு செய்து வண்டியை தயார் செய்தாலும் அந்த வாகனத்தை விற்க படாதபாடு பட வேண்டியதிருக்கிறது. ஏனெனில் வாகனத்தை வாங்க வருபவர்கள் வெள்ளத்தில் சிக்கிய வாகனமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் தான் பார்ப்பார்கள். 2 அல்லது 3 நாட்கள் வாகனங்கள் மழையில் நிற்கும் போது, கரை பிடிக்கும். சீட்டுக்கு கீழ் தூசிகள் சேர்ந்திருக்கும். ஸ்டெயரிங் பாக்ஸ், ஷீட் பெல்ட் , என்ஜினில் துரு பிடிக்கும் என்றார்.
கார் விற்பனையாளர் இம்ரான் கூறுகையில், "மழையில் நனைந்த கார்களை வந்து சாவி போட்டு ஸ்டார்ட் செய்யவே கூடாது.. ஸ்டார்ட் பண்ணாமல் ரெக்கவரி வாகனத்தை வரவழைத்து ரெக்கவரி செய்து, சர்வீஸுக்கு எடுத்து வந்து ஆயில் உள்ளிட்டவற்றை முழுமையாக மாற்றிய பின்னரே ஸ்டார்ட் செய்ய வேண்டும். அப்படி ஸ்டார்ட் பண்ணினால் பெரிய பிரச்சனை வராது..
ஆனால் தெரியாமல் ஸ்டார்ட் செய்துவிட்டால்,முழுமையாக என்ஜினை பிரித்து வேலைபார்க்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி செய்தால தான் வண்டி ஸ்டார்ட் ஆகும். அதற்கு அதிக செலவு ஆகும். ஹோண்டா சிட்டி காரை என்ஜின் பிரித்து வேலை செய்ய 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வந்துவிடும். இதே பிஎம்டபிள்யூ பார்த்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு வந்துவிடும்.." என்றார்.












Click it and Unblock the Notifications