ஏன் ஆம்னி பேருந்துகள் இயங்காது... தனியார் பேருந்துகள் இயங்குமா.. பிரச்சனை என்ன?
சென்னை: மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்தும் ஆம்னி பேருந்துகள் ஓடாது என்றும் அறிவித்திருப்பதன் பின்னணியில் சாலை வரி பிரச்சனை உள்ளது.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 7.9.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். ஆனல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி சாலை வரி உள்ளது.
சாலை வரி என்பது மாநில அரசால் விதிக்கப்படும் வரியாகும். இது வாகன உரிமையாளர்களுக்கு மாநில அரசு விதிக்கிறது. மாநிலத்திற்கு மாநிலம் இந்த வரி வேறுபடும்.

தமிழகம் 2வது இடம்
இந்தியாவில் 10 சதவீதத்திற்கும் அதிமாகச் சாலை வரி விதிக்கும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக அதிக சாலை வரி விதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

ஆம்னி பேருந்துகள்
இந்நிலையில் கொரோனா பாதிப்பும் அதனால் போடப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் லாரி, வாடகை கார் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 5 மாதங்களாக முழுமையாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. பேருந்தை பொறுத்தவரை 5 மாதங்களாக முற்றிலும் இயங்கவில்லை. இதனால் அவர்களால் சாலை வரியை கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அரசு சாலை வரியை கட்ட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனால் தான் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

அதிக சாலை வரி
நேற்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறும் போது, ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த காலக்கட்டத்திற்கும் சாலை வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக இடைவெளியுடன் பேருந்துகளை இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே அரசு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 7ம் தேதி ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று கூறினார்.

7ம் தேதி பேருந்து ஓடும்
இதனிடையே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் தனியார் பேருந்துகள் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மாவட்டத்திற்குள் மட்டும் இயக்கிக்கொள்ள தமிழக அரசு முன்பு அனுமதி அளித்ததால் அவர்கள் லாபம் வராது என்று கூறி இயக்க மறுத்தனர். எனவே 7ம் தேதி முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications