சட்டுனு விலை குறையுது ஓகே.. ஆனா நாம் ஏன் தங்கத்தை வாங்க வேண்டும்.. ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்!
சென்னை: தங்கம் என்பது இந்தியர்கள் அனைவரும் தவறாமல் செய்யும் முதலீடாக இருக்கிறது. ஆனால், ஏன் நாம் இந்தத் தங்கம் வாங்க வேண்டும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
நமது நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் எப்போதும் முதலில் சேமிப்பது தங்கத்தில் தான். திருமணம் தொடங்கி நமது கலாச்சாரத்திலும் தங்கம் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது.

இதன் காரணமாகவே உலகிலேயே அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அந்தளவுக்குத் தங்கம் நமது நாட்டில் முக்கியமான சேமிப்பு கருவியாக இருக்கிறது.
தங்கம் விலை: தங்கம் விலையை பொறுத்தவரை அது கடந்த சில வாரங்களாகப் பெரியளவில் அதிகரிக்கவில்லை. மெல்லக் குறைந்தே வந்தது. ஆனால் அட்சிய திருதியை நாளில் தங்கம் விலை பட்டென அதிகரித்தாலும் கூட அதன் பிறகு அதன் விலை மெல்ல குறைந்தே வருகிறது. நேற்றைய தினம் கூட சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து 6,690 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும், நம்மில் பலரும் தங்கத்தை வாங்கி சேமித்தாலும் கூட ஏன் தங்கத்தை வாங்கி சேமிக்கிறோம் என்பது தெரியாது. இதற்கிடையே அதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இவர் பல ஆண்டுகளாகவே நாம் தங்கத்தை வாங்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.
ஆனந்த் சீனிவாசன்: தங்கம் விலை ரூ.3300- ரூ.3500களில் இருந்த போதே அனைத்து குடும்பங்களுக்கும் 400 கிராம் தங்கம் வேண்டும் என்று சொன்னவர். இப்போது தங்கம் விலை கிட்டதட்ட இரண்டு மடங்கு ஆகிவிட்ட நிலையில், இப்போது குறைந்தது 200 கிராம் தங்கத்தை அனைத்து குடும்பங்களும் வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். இதற்கிடையே இவர் தனது சமீபத்திய வீடியோவில் ஏன் நாம் தங்கத்தை வாங்க வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்.
ஏன் முக்கியம்: இது தொடர்பாக அவர் தனது வீடியோவில், "எப்போதும் தங்கத்தை வாங்க வேண்டும் எனச் சொல்லி வந்துள்ளேன். அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். கடந்த 1964ஆம் ஆண்டு 10 கிராம் தங்கம் 63.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு கிராம் தங்கம் 6.35 ரூபாய்க்கு இருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..
ஆனால், இன்று தங்கம் ஒரு சவரன் தங்கம் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்தால் அது ரூ.75,000ஐ தாண்டிவிட்டது. ஒவ்வொரு 10 ஆண்டுகளும் தங்கம் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் தங்கம் விலை 12% அதிகரித்துள்ளது. 3 ஆண்டுகளில் 14% அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பார்த்தால் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14% வரை அதிகரித்துள்ளது.
லாபம் தரும்: இது கிட்டதட்ட ஒரு பங்குச்சந்தை முதலீட்டைப் போன்ற லாபம் கொடுத்துள்ளது. இது நிச்சயம் வங்கியில் டெபாசிட் செய்யும் தொகையை விட அதிகம். இது ஒரு ஸ்மால்கேப் பங்கு விலை அதிகரித்த ரேட் ஆகும். எனவே அனைவரும் முடிந்த வரை தங்கம் வாங்கலாம். டிஜிட்டல் முறையில் ஒரு மில்லி கிராம் தங்கம் கூட வாங்கலாம். எனவே முடிந்தவரை அதைச் செய்யுங்கள்" என்றார்.
அதிகரிக்கும்: அதாவது நீண்ட கால நோக்கில் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். நீங்கள் இன்று ஒரு குறிப்பிட்ட தொகைக்குத் தங்கம் வாங்குகிறீர்கள் என்றால் சில ஆண்டுகளில் அதன் மதிப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கும். மேலும், தங்கம் மட்டுமே ஆபத்தான காலத்தில் நமக்கு உதவும். எந்தவொரு எமர்ஜன்சி பண தேவை என்றாலும் தங்கம் இருந்தால் அதை உலகின் எந்த மூலையிலும் எளிதாகப் பணமாக மாற்றலாம் என்பதும் மற்றொரு முக்கிய காரணமாகும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications