அன்புமணி ஏன் ராமதாஸ் நோட்டீஸுக்கு பதில் தரவில்லை? புட்டுப் புட்டு வைக்கும் தராசு ஷ்யாம்!
சென்னை: "அன்புமணி, ராமதாஸ் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் கொடுத்தால் கட்சி நிறுவனரின் மேலாண்மையை ஒப்புக்கொண்டது போல ஆகிவிடும். அன்புமணியை பொறுத்தவரை அவர் பொதுக்குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்ட தலைவர். நிறுவனருக்கு அதிகாரம் இல்லை என்பது அன்புமணியின் லீகல் ஸ்டாண்ட். எனவேதான் கடிதத்துக்கு பதில் கொடுக்கவில்லை." என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார்.
அன்புமணி மற்றும் அவரது தந்தை ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாமகவை அன்புமணி கைப்பற்ற நினைப்பதாக குற்றம்சாட்டிய ராமதாஸ், அவரை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தானே கட்சித் தலைவர் என்றும் அறிவித்தார். தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி அன்புமணியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியிருந்தார்.

அன்புமணி நீக்கம்
இரண்டாவது முறையாக 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் அன்புமணி தரப்பில் எந்த விளக்கமும் தரப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் அன்புமணி பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்.
பாமகவில் இதுவரை யாரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கைகளில் அன்புமணி ஈடுபட்டதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார் ராமதாஸ். பாமகவின் வளர்ச்சிக்கு அன்புமணியின் நடவடிக்கை குந்தகம் விளைவிக்கும் என்பதால் நீக்கப்பட்டுள்ளார். ஜனநாயக முறைப்படி பல கட்ட விசாரணை, வாய்ப்புகள் கொடுத்த பின்பே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் அறிவுரை கூறியும் அன்புமணி ஏற்கவில்லை. அன்புமணி உடன் இருந்தவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் மன்னிக்க தயாராக உள்ளேன்.
ராமதாஸ் குற்றச்சாட்டு
இது தனி மனிதனாக நான் ஆரம்பித்த கட்சி. இதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. பிள்ளையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் உரிமை கொண்டாட முடியாது. என் மூச்சு உள்ளவரை மக்களுக்கு உண்மையாக இருப்பேன். ஒழுங்கு நடவடிக்கை குழு இரண்டு முறை கடிதம் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைமை.
பாமகவுக்கு இது பின்னடைவு கிடையாது. களை முளைக்குமே என பயிரிடாமல் இருப்பதில்லை. களையை நீக்கிவிட்டோம். அன்புமணி தனி கட்சி ஆரம்பித்துக்கொள்ளலாம். ஆனால், அன்புமணியோடு உள்ளவர்கள் தற்போதுள்ள மாதிரி ஆலோசனை சொன்னால், தனியாக கட்சி தொடங்கினாலும் கட்சி வளராது. என்னோடு 40 முறை பேசியதாக கூறியது பொய். அன்புமணி பேசுவதெல்லாம் பொய்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி பதில் தராதது ஏன்?
இந்நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், "அன்புமணி பதில் கொடுத்தால் கட்சி நிறுவனரின் மேலாண்மையை ஒப்புக்கொண்டது போல ஆகிவிடும். அன்புமணியை பொறுத்தவரை அவர் பொதுக்குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்ட தலைவர். நிறுவனருக்கு அதிகாரம் இல்லை என்பது அன்புமணியின் லீகல் ஸ்டாண்ட். அப்படி இருக்கும்போது, நிறுவனர் தரப்பில் இருந்து வரும் கடிதங்களுக்கு விளக்கம் கொடுப்பது அவருக்கு சரியானது அல்ல. எனவேதான் கடிதத்துக்கு பதில் கொடுக்கவில்லை.
நாளை இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும், தேர்தல் ஆணையத்துக்கும் போகும். அதற்கு அன்புமணி தயாராகவே இருக்கிரார். பொதுச் செயலாளரை நீக்கச் சொன்னபோது அவரை நீக்க மறுத்தது அன்புமணி என்பதுதான் இன்றைய ராமதாஸின் குற்றச்சாட்டு. தருமபுரியில் ராமதாஸ் நிறுத்திய வேட்பாளரை மாற்றிவிட்டு சௌமியாவை நிறுத்தினார் அன்புமணி.
அடுத்த கேள்வி
முகுந்தன் நியமனத்தில் இருந்து இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. அன்புமணி ஆகாசப் பொய் சொல்கிறார், அன்புமணி கட்சிக்கு ஒரு களை என கடுமையான குற்றச்சாட்டுகளை எல்லாம் வைத்துள்ளார் ராமதாஸ். இப்படி இருக்கும்போது தேர்தலுக்கு முன்பாக சமாதானம் ஆவார்கள் என்பதெல்லாம் நடக்கக்கூடும் எனத் தெரியவில்லை. அடுத்தகட்டமாக யார் தேர்தல் ஆணையத்துக்கு போகப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி.
வரலாற்றிலேயே இல்லாத வகையில், சென்னை உயர் நீதிமன்றமே பாமக விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்தது. ராமதாஸும், அன்புமணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதற்கு கூட விருப்பம் இல்லை, எனவே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என நீதிபதியே வெளிப்படையாக கூறினார். பாமக விவகாரத்தில் உயர்நீதிமன்றம் ஏன் சமாதானம் செய்ய முயற்சித்தது என்ற கேள்விக்கு விடையே இல்லை.
பாமக ஓட்டு வங்கி
பாமகவின் ஓட்டு வங்கி என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்த ஓட்டு வங்கி. இந்த ஓட்டு வங்கியில் நிச்சயம் ஒரு பிளவு ஏற்படும். ராமதாஸ் மீது அவர் சமூகத்தைச் சார்ந்த மூத்தவர்களுக்கு மரியாதை உண்டு. அவர் சொல்வது வேதவாக்கு. அன்புமணி செய்வது விவாதப்பொருள். நடுவில், ராமதாஸ் மீது சேறு வாரி இறைக்கப்பட்டது. இதையெல்லாம் பலரும் ரசிக்கவில்லை.
அன்புமணி நீக்கப்பட்டது பாமகவுக்கு பின்னடைவு அல்ல ராமதாஸ் சொல்கிறார். ஆனால், நிச்சயம் பின்னடைவு தான். இந்த விவகாரத்துக்கு பின்னணியில் பாஜக இருக்கிறது. செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அன்புமணி எதுவும் செய்யவில்லை. எல்லோரும் ஒரு புள்ளிக்காக காத்திருந்தார்கள். இப்போது அந்தப் புள்ளி வந்துவிட்டது. இனி பாஜக காய்நகர்த்தும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications