பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித் துறை பறிப்பு! ஆளுநருடனான மோதல் போக்கால் இல்லையாமே! காரணமே வேறு!
சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை மாற்றப்பட்டதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பெரும்பாலான அரசியல் நிபுணர்கள், அவர் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய போது ஒருமையில் பேசியதுதான் காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் உண்மையில் அது காரணமில்லை என்கிறார்கள். நேற்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்தது. அதாவது 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, 4 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அது போல் சிலரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது.

இதில் முக்கியமானவர் பொன்முடி! திமுகவில் சீனியர் , அமைச்சர்களுள் சீனியர்! இவரிடம் இருந்த உயர்கல்வித் துறை பறிக்கப்பட்டு வனத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித் துறை, அரசு கொறடாவாக இருந்த கோவி செழியனிடம் வழங்கப்பட்டுள்ளது.
பவர்ஃபுல் துறைக்கு அமைச்சராக இருந்த பொன்முடி, எப்படி வனத்துறைக்கு மாற்றப்பட்டார் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பொன்முடியின் மோதல் போக்குகள்தான் காரணம். இவருடைய மோதலால் துணை வேந்தர்கள் நியமனத்தில் பிரச்சினை உள்ளது. இதனால் உயர்கல்வியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
இப்படியே போனால் தமிழகத்தில் உயர்கல்வித் துறை என்பது பிரச்சினைக்குரியதாகிவிடும் என முதல்வர் ஸ்டாலின் கருதியதால் பொன்முடி தூக்கியடிக்கப்பட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் தலைமைச் செயலக வட்டாரங்களில் கேட்ட போது காரணமே வேறயாக உள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பெயர் குறிப்பிட விரும்பாத சிலர் கூறியதாவது: சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை கொடுக்கப்பட்டதை அடுத்து அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இது அவரை வெகுவாக பாதித்ததாக தெரிகிறது.
மேலும் அவருடைய மனைவிக்கு சிறை தண்டனை விதிப்பு என்ற தீர்ப்பு பொன்முடியை மேலும் மனஉளைச்சலுக்குள்ளாகியது. இதனால் மத்திய அரசு, ஆளுநருடன் நேரடியாக டீல் செய்யும் எந்த துறையும் வேண்டாம் என பொன்முடியின் குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
இதற்கு அவரும் ஒப்புக் கொண்டு முதல்வரிடம் துறை மாற்றம் குறித்து கேட்டாராம். அவரும் "நீங்கள் சீனியர் , உங்களுக்கு சாதாரண துறைகளை கொடுக்க என் மனம் ஒப்பவில்லை. நீங்கள் உயர்கல்வித் துறையே பாருங்கள்" என்றாராம். ஆனாலும் பொன்முடி தனது மனநிலையை எடுத்துக் கூறியதும்தான் முதல்வர் ஸ்டாலின் வேறு வழியில்லாமல் சீனியருக்கு சாதாரண துறை ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த துறை மாற்றத்தால் பிரச்சினையிலிருந்து பொன்முடி ரிலாக்ஸ்டாக இருப்பார் என அவரது ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனராம். எனினும் மின்துறையும் , மதுவிலக்கும் மீண்டும் செந்தில் பாலாஜிக்கே வழங்கியதில் சீனியர்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. வந்த 3ஆவது நாளே அந்த துறைகளை தூக்கி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என பலர் புலம்பி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications