20 ஆண்டுகளுக்கு முன்னர்.. இதே அக்டோபர் மாதம்.. கோபாலபுரம் வந்த புனித் ராஜ்குமார்.. பிளாஷ்பேக்!
சென்னை: 20 ஆண்டுகளுக்கு முன்னர் இதே அக்டோபர் மாதம் கோபாலபுரத்திலுள்ள கருணாநிதி இல்லத்திற்கு புனித் ராஜ்குமார் வந்திருந்தார். இது ஏன் தெரியுமா?
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். 46 வயதாகும் இவர் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை விடாதவர். அது போல் நேற்றைய தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து சரிந்து விழுந்தார். உடனே அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சுயநினைவின்றி வந்த அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது.

திரைத் துறை
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தென்னிந்திய திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடல் ஆரோக்கியத்தில் எப்போதும் அக்கறை கொண்ட புனித்திற்கு மாரடைப்பா என ரசிகர்களின் இதயம் வெடித்து சிதறும் அளவுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்தது. அப்படியும் சில ரசிகர்கள் புனித் மறைவால் தாள முடியாத துக்கத்தில் உயிரிழந்துவிட்டனர்.

தமிழக முதல்வர்
புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவைப் பேணி வந்துள்ளோம். அந்த வகையில் தனிப்பட்ட முறையிலும் இது எனக்கு இழப்பு. தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு தமது குடும்பத்தின் சார்பில் இரங்கலை தெரிவிக்க கோபாலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது என தனது இரங்கலில் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

கருணாநிதி குடும்பம்
கருணாநிதி குடும்பத்தினருடன் ராஜ்குமார் குடும்பத்தினர் நீண்ட காலமாக நட்பு பாராட்டுவது ஏன் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இதே அக்டோபர் மாதம் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோருடன் புனித் ராஜ்குமார் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்திருந்தார். சந்தனக் கடத்தல் வீரப்பன், தனது தந்தை ராஜ்குமாரை கடத்திச் சென்ற நிலையில் தனது தந்தையை மீட்டு கொடுக்கவேண்டுமென்ற கோரிக்கையுடன் புனித் ராஜ்குமார் வந்திருந்தார்.

வீரப்பனிடம் இருந்து மீட்பு
கருணாநிதி அரசு எடுத்த நடவடிக்கையால் வீரப்பனிடம் இருந்து ராஜ்குமார் பத்திரமாக மீட்கப்பட்டார். இதை அந்த குடும்பம் எப்போதும் நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நினைத்து பார்த்தது. இதுதான் கருணாநிதி குடும்பத்தினர் மீது புனித் ராஜ்குமாருக்கு அதிக அன்பு செலுத்த காரணமாக அமைந்தது. கருணாநிதி மறைந்த போதுகூட கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார் புனித்.

செய்தியாளர்கள் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது எனது குடும்பமும் கருணாநிதி குடும்பமும் நீண்ட நாட்களாக நல்ல நட்புறவில் இருந்து வருகிறது. எனது தந்தை ராஜ்குமார் கடத்தப்பட்ட போது அவரை மீட்க கருணாநிதி பேருதவியாக இருந்தார் என தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பிறந்த புனித்திற்கு இப்படித்தான் தமிழகம் மீதும் கருணாநிதி குடும்பத்தினர் மீதும் பாசமும் நட்புறவும் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications