கண்ணசைத்த ஸ்டாலின்.. டெல்லிவரை பறந்த "சிக்னல்".. ராகுல் ஏன் அப்படி பேசினார் தெரியுமா..?
தமிழகத்தை ராகுல்காந்தி குறி வைத்து பேச காரணம் வெளியாகி உள்ளது
சென்னை: நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசும்போது, ஏன் தமிழ்நாட்டையே சுற்றி சுற்றி வந்தார்? ஏன் தமிழக பிரச்சைனையையே மையமாக எடுத்து பேசினார்? என்பதற்கான காரணங்கள் லேசாக கசிய ஆரம்பித்துள்ளது.
இதற்கு முன்பு இப்படியெல்லாம் ராகுல் பேசியதே இல்லை.. ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில் ராகுல் பேசுவது மிகப்பெரிய விவாதத்தை உண்டுபண்ணும்.. வழக்கம்போல பாஜகவும் பொங்கி கொண்டு கேள்விக் கேட்கும்.
ஆனால் இந்த முறை ராகுல் பேசியதில் நிறைய அரசியல் உள்ளதாக பார்க்கப்படுகிறது.. குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் நெடி பொதிந்திருந்ததாக கருதப்படுகிறது..

நீட் தேர்வு
"தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி, கலாசாரம், வரலாறு குறித்த புரிதல் இருக்கிறது... அவர்களிடமிருந்து நான் ஒவ்வொருநாளும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வைத்து வரும் கோரிக்கையை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளாமல், அவர்களை உதாசீனப்படுத்தி நிராகரித்து வருகிறது.. எப்போதும் எந்த சூழலிலும் தமிழக மக்களை உங்களால் ஆட்சி செலுத்த முடியாது ; ஆளுமை செலுத்தவும் முடியாது" என்று சீறினார்.

சகோதரிகள்
அதுமட்டுமல்லாமல், ஏன் தமிழ்நாடு பெயரை மட்டும் பல முறை உச்சரித்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கும் "ஏனென்றால் நானும் தமிழன்" என்று சட்டென யோசிக்காமல் பதில் தந்ததும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.. ராகுலை பொறுத்தவரை நிறைய முறை தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.. தமிழக சகோதரிகள் ராகுலை அண்ணா என்று கூப்பிடுவதையும், பாசத்துடன் நெருங்கி பழகுவதையும் பலமுறை பார்த்துள்ளோம்.. அரசியல் ரீதியாக எடுத்து கொண்டால், மறைந்த தலைவர் கருணாநிதியை சந்திக்க வந்தது முதல், உதயநிதியுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டு, மண்பானை சோறு வரை ராகுலின் தமிழக தடங்கள் இன்னும் பளிச்சிட்டே காணப்படுகின்றன.

ராகுல்காந்தி
எனினும், இந்த பற்றையெல்லாம் தாண்டி, அரசியலே ராகுலின் பேச்சுக்கு காரணமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. ராகுல்காந்திக்கு திடீரென தமிழகத்தை பற்றி அதிகம் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்கிற கேள்விகள் தான் தற்போது அதிகளவில் விவாதிக்கப்படுகிறது. ராகுலின் தமிழகத்தை பற்றிய உரைக்கு ஸ்டாலின் நன்றியும் தெரிவித்துள்ளதும் அனைவரையும் கூர்ந்து ஈர்த்துள்ளது..

கேரளா
கடந்த லோக் சபா தேர்தலில் கேரளாவில் நின்று வெற்றிப்பெற்ற ராகுல் காந்தி, 2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட திட்டமிடுகிறார்... அதற்காக, இப்போதிலிருந்தே தமிழகத்தின் மீது அக்கறை இருப்பது போல காட்டுவதற்கு ஒத்திகைப் பார்க்கத் துவங்கியுள்ளார்... இதன் முதல் விஷயம் தான் இப்போதைய அவரது பேசிய பேச்சு, இனி பார்லிமெண்டில் மட்டுமல்ல, பொது வெளியிலும் கூட தமிழகம் பற்றி நிறைய பேசுவார், பாருங்கள்" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்...

தொகுதி
முதல்வர் நன்றி தெரிவித்து, ராகுலின் விருப்பத்திற்கு கண் அசைத்து ஒப்புதல் சிக்னல் தந்துவிட்டதாகவும் தகவல் கசிந்திருக்கிறது... இதை மனதில்வைத்துதான், "தமிழ்நாட்டை தன் வாழ்நாளில் பாஜக ஆளவே முடியாது" என்ற வார்த்தையை, ராகுல் துணிந்து உதிர்த்துள்ளார் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ராகுல் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற விஷயம்கூட கசிந்துவிட்டது.. தன்னுடைய அப்பா உயிரிழந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை செண்டிமெண்ட்டாக ஸ்டாலினிடம் கேட்க யோசித்து வருகிறாராம்... ஒருவேளை ஸ்ரீபெரும்புதூரை ராகுல் கேட்டாலும், அதற்கு ஸ்டாலினும் எவ்வித மறுப்பும் சொல்ல போவதில்லை என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications