"மழைநீர் வடிகால்களில் பிரச்சினை இல்லை.. கடல் உள்வாங்கவில்லை என்பதே உண்மை.." மா.சு. தந்த விளக்கம்
சென்னை: சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் மழைநீர் வடியாமல் இருந்ததற்குக் காரணம் குறித்தும் விளக்கியுள்ளார்.
மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பல பகுதிகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது நகரில் பல பகுதிகளில் நீர் வடிந்துவிட்ட போதிலும், இன்னும் சில பகுதிகளில் நீர் இருக்கிறது. அதை அகற்றும் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே மழை வெள்ளத்தால் நோய்ப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கச் சென்னையில் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது. அதன்படி இன்று சென்னை சைதாப்பேட்டையில் நடந்த மழைக்கால சிறப்பு முகாமில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
அமைச்சர் மா.சு: அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னையில் மழை நீர் தேங்கியதற்கான காரணத்தை விளக்கினார். மேலும், சென்னையில் ஆக்கிரமிப்பு இடங்கள் உள்ளதைத் தகுந்த ஆவணங்களுடன் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த அவர், 2015ஐ காட்டிலும் இப்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மழைக்கால சிறப்பு முகாமை தொடங்கி வைத்துப் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "நோய்ப் பாதிப்புகள் ஏற்பாடாமல் இருக்க கடந்த 6ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள. இந்த 300 நடமாடும் மருத்துவக் குழுக்கள் இப்போது வரை 357 இடங்களில் பரிசோதனை செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
மருத்துவ முகாம்கள்: இது தவிரத் தமிழ்நாடு முழுக்கவும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 16516 மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளோம். இதன் மூலம் 7,83,443 பேர் பயனடைந்துள்ளனர். 2958 பேருக்குக் காய்ச்சல், 1620 பேருக்குச் சளி இருமல் கண்டறியப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் பல இடங்களில் தொடர்ச்சியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நமது அரசு மருத்துவமனைகளில் மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையாக்கத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. மேலும், சித்தா, யுனானி, அலோபதி மருந்துகளும் கூட தேவையான அளவுக்கு இருக்கிறது.. இன்றும் 7 தனியார் மருத்துவமனைகள் சார்பில் மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது. பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
டெங்கு: டெங்கு பாதிப்பு என எடுத்தால் தமிழ்நாட்டில் இந்தாண்டு 7662 பேருக்கு டெங்கு ஏற்பட்டுள்ளது. அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 1250 முகாம்கள் அறிவிக்கப்பட்டு, அதில் 1083 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளார்,
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனச் சொல்லியுள்ளதாகக் கூறுகிறார்கள். வெறும் கரன்டியில் பாத்திரம் சுழற்றுவது சுலபம். அதிமுக ஆட்சியில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.. அப்போது அவர்கள் வெள்ளத்தை உருவாக்கினார்கள்,. நாடாளுமன்றத்தில் கூட 2015 வெள்ளத்தை Man made flood என்றே குறிப்பிட்டார்கள்.
2015 பெருவெள்ளம்: அப்போது வானிலை மையம் தொடர்ச்சியாக எச்சரிக்கையைக் கொடுத்தார்கள். அப்போது செம்பரம்பாக்கம் ஏரி நீரைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால், அப்போது அதிகாரிகளால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. திடீரென ஒரு நாளில் அதிகளவில் நீரைத் திறந்துவிட்டதே பாதிப்பிற்குக் காரணம். அப்போது எடப்பாடி பழனிசாமியும் ஜெயக்குமாரும் அமைச்சர்களாக இருந்தார்களே. அவர்கள் ஏன் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்களுக்கு இது குறித்து பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை.
ஆனால், இந்த முறை குறுகிய காலத்தில் பெருமழை கொட்டி தீர்த்தது இதன் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டது. மேலும், இப்போது நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும்.
கடல் சீற்றம்: சென்னையில் மழைநீர் வடிகால் இருந்த அனைத்து இடங்களிலும் மழை நீர் வெளியேறியது. கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் முதல் நாளில் மட்டும் சென்னையில் உள்ள 4 நீர்நிலைகளான அடையாறு, கூவம், கோசஸ்தலை, பக்கிங்காம் கால்வாய் மூலம் சென்ற மழைநீரைக் கடல் உள்வாங்கவில்லை. மழை நின்ற பிறகு மெல்ல மழை நீர் கடலில் சென்று கலக்கத் தொடங்கியது. அதன் பிறகு நீர் வடிய தொடங்கிவிட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications