பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி சந்தித்தது ஏன்? விளக்கத்தில் உருக்கம்
சென்னை: குடும்ப நண்பரான நயினார் நாகேந்திரனை சந்திப்பதில் கூட அரசியல் சாயம் பூசுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்பி வேலுமணி தனது எக்ஸ்வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.

அதன்பிறகு எனது குடும்ப நண்பர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வை, இன்றைய நாளிதழ் அரசியல் சாயம் பூசி செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் கழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்நிலையில் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களுக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதிலிருந்தே எஸ்.பி.வேலுமணி அதிமுகவுக்கு எதிராக செயல்படுகிறார், பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தது. மகாராஷ்டிரா அரசியலில் ஏக்நாத் ஷிண்டேவை போல் இவர் செயல்படுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால் எஸ்.பி.வேலுமணி அதிமுகவுக்காகத்தான் உழைத்து வருகிறார் என்பது அவர் செயல்பாடுகள் மூலம் அறியப்பட்டது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க இப்போதே அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழுவை மாவட்ட வாரியாக களஆய்வு மேற்கொள்ள நியமித்துள்ளார். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கான அதிமுக கள ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, வரகூர் அருணாச்சலம் ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இந்த கூட்டத்தில் அதிமுகவினர் இருகுழுவாக பிரிந்து மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான எஸ்.பி.வேலுமணி திடீரென பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இருவரும் ஒரு சோஃபாவில் அருகருகே அமர்ந்து கொண்டு பேசிய புகைப்படங்கள் வைரலானது. அதிமுக - பாஜக இடையே வார்த்தை போர் நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் விரைவில் கட்சி மாறுவார் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இவர்களது சந்திப்பு சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு எஸ்பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். அதில் நண்பரான நயினார் நாகேந்திரனை சந்தித்ததை எப்படி அரசியல் சாயம் பூசி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications