க்ரீன் சிக்னல் தினகரன்.. திரைமறைவில் ஸ்கெட்ச்? ஓபிஎஸ் தரப்புக்கு பிளான் போட்டு கொடுக்கிறாரா சசிகலா?
சென்னை: அதிமுகவில் இணையுமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளதை டிடிவி தினகரன் வரவேற்றுள்ள நிலையில் சசிகலா அமைதி காப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
கிட்டத்தட்ட அதிமுக ஓபிஎஸ் கையில் வந்துவிட்ட நிலையில் மனக் கசப்புகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி தரப்பினருக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். அதிமுக ஒன்றாக இருந்து தேர்தல் சமயங்களில் வெற்றிகளை குவித்த வரலாறு உண்டு. திமுகவை தோற்கடித்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் சசிகலா, தினகரனும் அதிமுகவில் இணைய இந்த அழைப்பு பொருந்துமா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் நான்தான் எல்லாரும் என சொல்லிவிட்டேனே என்றார். அதற்கு நிருபர்கள், பெயரை சொல்லுங்கள், ஏன் பெயரை சொல்ல தயங்குகிறீர்கள் என கேட்டனர்.

சசிகலா- தினகரன்
அதற்கு சசிகலா, தினகரன் ஆகியோரும் அதிமுகவில் இணையலாம் என ஓ பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து டிடிவி தினகரன் கூறுகையில் ஓபிஎஸ் அழைப்பை வரவேற்கிறேன் என்றார். ஆனால் சசிகலாவோ ஓபிஎஸ்ஸின் ஆஃபருக்கு எந்த வித பதிலையும் சொல்லாமல் உள்ளார்.

உசிலம்பட்டி எம்எல்ஏ
நேற்று முன் தினம் உசிலம்பட்டி எம்எல்ஏ எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து ஓபிஎஸ் பக்கம் அணி மாறினார். அப்போது நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணையுமாறு அழைப்பு விடுப்பேன் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இதன் பிறகும் சசிகலா எந்த அறிக்கையும் விடவில்லை.

சசிகலா தரப்பு
இதன் பின்னணி என்ன என்று விசாரித்த போதுதான் சசிகலா தரப்பினர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு தீர்ப்பும் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்தால், அந்த நாளிலோ அல்லது அடுத்த நாளிலோ சசிகலாவை ஓபிஎஸ் போய் அதிகாரப்பூர்வமாக சந்திப்பாராம். ஆனால் தற்போது ஓபிஎஸ் தரப்புக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனையையும் சசி வழங்கி வருகிறாராம்.

அதிமுகவில் இணைப்பு
சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லி மேலிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களிடம் பேசிவிட்டு சொல்வதாக தெரிவித்தாராம். இதனால் கோபமடைந்த டெல்லி மேலிடம், சசிகலாவிடம் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் பணியாற்றுங்கள் என கூறிவிட்டதாம்.

வலுவான பிடிப்பு
இதனால் வலுவான குடுமி தன் பக்கம் வந்தவுடன் சசிகலா அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக வருவார். அது வரை ஓபிஎஸ் தரப்புக்கு தேவையான உதவிகளை தூரமிருந்தே செய்து வருவார். இவ்வளவு ஏன் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்துவோரில் யாராவது அவர் பக்கம் சாய்வது போன்ற தொனி இருந்தால் உடனே சசிகலாவிடம் இன்னார் குறித்த விவரங்களை கூறுகிறாராம்.

போனில் பேச்சுவார்த்தை
இதை வைத்து சசிகலா பேசியதும் அந்த நிர்வாகிகள் மறுபேச்சு இல்லாமல் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தருகிறோம் என்கிறார்களாம். இது போல் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்திய 35 எம்எல்ஏக்களிடம் 25 மாவட்டச் செயலாளர்களிடமும் சசிகலா தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எனவே தீர்ப்பு வெளியானதும் என்னென்ன மாற்றங்கள், ட்விஸ்ட்டுகள் நடக்கின்றன என்பதை பாருங்கள் என பெயர் வெளியிட விரும்பாத சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications