புலி பதுங்கியது பாயத்தானோ?.. சசிகலா பேசியதாக வெளியான ஆடியோவின் பின்னணி என்ன?
சென்னை: மீண்டும் வருவேன் தைரியமாக இருங்கள் என சசிகலா கூறியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பாகி வரும் நிலையில் நிச்சயம் அவர் அதிமுகவை மீட்டெடுக்க ஆயத்தமாகி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து ரிலீஸான சசிகலா சென்னைக்கு வரும் போது அதிமுக கொடி கட்டிய காரில் வந்தார். பின்னர் அவர் வேனில் இருந்தபடியே இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என சூளுரைத்தார்.
இதனால் தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் சசிகலாவால் பெரிய சலசலப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரது வருகையால் தேர்தல் முடிவுகளில் தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் பேசப்பட்டது.

அறிக்கை
ஆனால் திடீரென ஒரு நாள் இரவு சசிகலா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் அரசியலில் இருந்து தற்போது ஒதுங்குகிறேன். அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என கூறியிருந்தார். இதிலிருந்தே புலி பதுங்குவதே பாய்வதற்கு என தெரிந்தது.

சசிகலா
தேர்தலில் அதிமுக ஜெயித்தால் சசிகலா கட்சியில் தலையிட மாட்டார் என்றும் ஒரு வேளை அக்கட்சி தோற்றால் நிச்சயம் அதிமுகவை கைப்பற்ற திட்டமிடுவார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் சசிகலா கட்சி தொண்டரிடம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது.

தைரியம்
அதில் அவர் நான் நிச்சயம் வருவேன். தைரியமாக இருங்கள். கட்சியை சரி செய்து கொள்ளலாம். அனைவரும் கவனமாக இருங்கள் என சசிகலா கூறியது போல் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. இது உண்மையில் சசிகலா பேசியதுதானா, அவ்வாறெனில் திடீரென அந்த ஆடியோவை வெளியிட்டது ஏன்?

கேள்வி
கட்சியை சரி செய்து கொள்ளலாம் என சசிகலா யாருக்கு சூசகமாக சொல்கிறார்? அரசியல் பார்வையாளர்கள் கூறியபடி அதிமுக தேர்தலில் தோற்க தான் ஒரு காரணமாக இருந்து விடக் கூடாது என அறிக்கை விடுவது போல் விட்டுவிட்டு தற்போது அதிமுக தோற்றவுடன் அவர் களத்திற்கு வருகிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பேசியது சசிதானா
மேலும் இது சசிகலாவின் குரல்தானா, அவர் பேசியதுதானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏற்கெனவே அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே கருத்தொற்றுமை இல்லாமல் உள்ளது. எனவே கட்சி சிதறுவதற்குள் எப்படியாவது கைப்பற்றி அதை ஜெயலலிதா வைத்திருந்தது போல் ராணுவ கட்டுக்கோப்பாக வைத்திருக்க சசிகலா முயல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications