சசிகலாவின் திடீர் ஆடியோ.. ஸ்வீட் ..தென் மாவட்ட அதிமுக.. "சின்னம்மா"வுக்காக அணி திரள்வார்களா?
சென்னை: அதிமுகவில் நிர்வாகிகளுக்கிடையே ஒற்றுமை இல்லாததால் அக்கட்சி பிளவுப்படும் அபாயம் உள்ளதால் சசிகலா வருகை தருவது ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் அவரது வருகையை தென் மண்டல அதிமுக எம்எல்ஏக்கள் விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video
கடந்த இரு நாட்களாக அதிமுகவில் சசிகலாவால் குழுப்பம், சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சசிகலா பேசிய இரு ஆடியோக்கள். அதிமுகவில் தற்போது ஜெயலலிதா இருந்த போது இருந்த கட்டுப்பாடு இல்லை என்பது பரவலாக கூறப்படுகிறது.
ஆட்சியில் இருந்த போது ஆளாளுக்கு கருத்து சொல்லி அதிமுகவில் குழப்பத்தை உண்டாக்கி வந்தனர். இதற்கு காரணம் ஒற்றை தலைமை இல்லாததே என கூறப்படுகிறது. ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதிலிருந்தே புகைச்சல் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

ஓபிஎஸ்
ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இல்லாவிட்டால் கட்சியை ஒற்றை தலைமை, அதுவும் என் தலைமையின் கீழ் கொண்டு வருவது என ஓபிஎஸ் கேட்டு பார்த்தார். ஆனால் இதற்கெல்லாம் எடப்பாடி தரப்பு ஒப்புக் கொள்ளவே இல்லை. காரணம் எடப்பாடிக்கு கட்சியில் இருக்கும் எம்எல்ஏக்களின் ஆதரவுதான்.

எடப்பாடிக்கு ஆதரவு
எடப்பாடிக்கு ஆதரவாக மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இருந்தனர். பொதுவாக கட்சியில் கருத்தொற்றுமை இல்லாவிட்டால் வாக்கெடுப்புக்கு செல்வர். அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் எடப்பாடிக்குத்தான் ஆதரவு அதிகம் என்பதால் ஓபிஎஸ்ஸால் எதையும் செய்ய முடியவில்லை.

சசிகலாவின் ஆடியோ
இதையடுத்து இருவரும் எப்போதும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் தனித்தனியே அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். இது கட்சியில் மேலும் பிளவை ஏற்படுத்துவது போலவே உள்ளது. இந்த நிலையில் சசிகலாவின் ஆடியோ கடந்த இரு தினங்களாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆடியோ லீக்
இத்தனை நாள் இல்லாத திருநாளாம்... ஏன் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சசிகலா பேசிய ஆடியோ "லீக்" செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அரசியல் நோக்காளர்கள் சொல்வது அதிமுகவில் கருத்தொற்றுமை இல்லாததுதான். எடப்பாடிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை சசிகலா பயன்படுத்திக் கொள்ள விழைகிறார் என்கிறார்கள்.

தென் மண்டலம்
அது போல் சசிகலாவின் வருகையை அதிமுகவின் தென் மண்டல எம்எல்ஏக்களும் விரும்புவதாகவும் ஒரு கருத்து பரவலாக பேசப்படுகிறது. அதாவது மேற்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றதே தன் மண்டலத்தில் 33 எம்எல்ஏக்கள் உள்ளனர், தென் மண்டலத்தில் அதுவும் துணை முதல்வராக இருந்த ஓபிஎஸ் இருக்கும் மண்டலத்தில் வெறும் 15 எம்எல்ஏக்கள்தான் வென்றுள்ளனர்.

நிராசையான பதவி
இதனால் முதலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஓபிஎஸ்ஸுக்கு நிராசையானது. இதனால் இனி அடுத்தடுத்து என்னவெல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டியது இருக்கோ என்ற கலக்கம் தென் மண்டலத்தினருக்கு வந்துவிட்டது. தென் மண்டலத்தில் கணிசமாக தேவர் சமுதாயத்தினர் உள்ளனர். அது போல் மேற்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர்கள் உள்ளனர். சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அவரும் தேவர் சமூகம் என்பதால் தங்கள் பிரச்சினைக்கு ஒரு விடிவு பிறக்கும் என நம்புகிறார்கள். என்ன நடக்குமோ, பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications