அதிமுக கொடி கட்டப்பட்ட வேறு ஒரு காரில் பயணம்.. காரா முக்கியம்.. கொடிதானே!.. சசிகலாவின் சமயோஜிதம்
சென்னை: தனது காரில் அதிமுக கொடியை அகற்றிய நிலையில் சசிகலா அதிமுக கொடி கட்டிய வேறு ஒரு காரில் தனது பயணத்தை தொடர்கிறார்.
Recommended Video

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவிட்டு பண்ணை வீட்டுக்கு சென்ற போது சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்தார்.
இது அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்புகளை கிளப்பியது. இந்த நிலையில் அவர் இன்றைய தினம் காலை 7.40 மணிக்கு கோடாகுருக்கி பண்ணை வீட்டிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்துக் கொண்டிருக்கிறார்.

அகற்ற மறுப்பு
அப்போது அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக எல்லையில் அதிமுக கொடியை அகற்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. கொடியை அகற்ற சிறிது நேரம் கால அவகாசம் வழங்கப்படும். ஒரு வேளை அகற்ற மறுத்தால் போலீஸாரே அகற்றுவர் என எச்சரிக்கப்பட்டது.

வேறு ஒரு கார்
இந்த நிலையில் சசிகலாவின் கார் தமிழக எல்லையான ஜூஜூவாடியை வந்தடைந்தது. அப்போது அவரது காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது. எனினும் சசிகலாவுக்கு பின்னால் வந்த வாகனங்களில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதனால் சசிகலா அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த வேறு ஒரு காருக்கு மாறினார்.

வேறு கார்
தற்போது அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு தமிழக எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சசிகலா வேறு ஒரு காரில் பயணம் மேற்கொள்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக எல்லை
4 ஆண்டுகள் சிறை தண்டனை, கொரோனா முடிந்து முதல் முறையாக தமிழகத்திற்கு வரும் சசிகலா தற்சமயத்திற்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என தெரிகிறது. மேலும் தமிழக எல்லைக்குள் போனதும் சிறிது தூரம் கழித்து தனது காருக்கு மாறினாலும் மாறலாம் என தெரிகிறது.

முழு உரிமை
அதிமுக கொடியை பயன்படுத்த முழு உரிமை உள்ளது என்றும் கொடியை அகற்றினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் கூறியிருந்த நிலையில் தேவையில்லாத பிரச்சினைகளால் தொண்டர்களின் வரவேற்புக்கு இடையூறு ஏற்பட்டுவிடும் என்பதாலும் அவர் வேறு காருக்கு மாறியிருக்கலாம்.

தூரம்
இத்தனை செலவு செய்து, வெகு தூரத்திலிருந்து தூக்கத்தை தொலைத்துவிட்டு, உண்ணாமல் காத்திருக்கும் தொண்டர்களின் வரவேற்பு நிகழ்ச்சிகள் வீணாகக் கூடாது என்ற எண்ணத்தில் கூட எந்த பிரச்சினையையும் செய்யாமல் அவர் வேறு காருக்கு மாறியிருக்கலாம். காரா முக்கியம், அதிமுக கொடிதானே முக்கியம். அது எந்த காராக இருந்தால் என்ன என்றும் நினைத்திருக்கலாம்.

சமயோஜிதமாக செயல்பட்ட சசி
ஏனெனில் அதிமுக கொடி சசிகலாவின் காரில் இருந்து மட்டுமே அகற்றப்பட்டது. மற்ற கார்களில் இருந்து அதிமுக கொடி அகற்றப்படவில்லை. இதனால் சமயோஜிதமாக செயல்பட்டு அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் கெத்தாக தனது பயணத்தை தொடர்கிறார் சசிகலா.












Click it and Unblock the Notifications