Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக ஓட்டுகள் சீமானுக்கு கிடைக்கல.. காரணம் இதுதான்.. பாயிண்டை பிடித்த மூத்த பத்திரிகையாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக ஓட்டுகள், நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்காதது ஏன் என்பது பற்றி ஒரு முக்கியமான காரணத்தை கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தமாக 29 பேர் போட்டியிட்டனர். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின.

Seeman vikravandi by election results ntk

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 82.04 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. இந்த இடைத்தேர்தலில் அதை விட கூடுதலாக 82.48 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிமுக தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்த நிலையிலும் வாக்குப்பதிவு அதிகரித்ததால், அதிமுகவினரும் வாக்களித்தது உறுதியானது.

அதிமுகவினரிடம் ஆதரவு கேட்ட சீமான்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "அதிமுக மற்றும் தேமுதிக தொண்டர்களே.. நம் பொது எதிரி திமுக தான். எத்தனையோ முறை கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். எனவே இந்த முறை என்னை ஆதரியுங்கள்" என்று பேசினார். அன்புமணி ராமதாஸும், அதிமுக தொண்டர்களிடம் வாக்கு கேட்டார். எனவே அதிமுக வாக்குகள் பாமகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் பிரிந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

நாதகவுக்கு அதிமுக ஓட்டுகள் விழவில்லை: ஆனால், பலரும் எதிர்பார்க்காத வகையில் குறிப்பிடத்தக்க அளவுக்கான அதிமுக வாக்குகள் திமுகவுக்கு சென்றுள்ளன. பாமகவும் கணிசமாக பெற்றுள்ளது. ஆனால், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு பெரிய அளவில் வாக்குகள் விழவில்லை. அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்த நிலையிலும் கூட கடந்த முறை பெற்ற வாக்குகளைத் தான் நாதகவால் பெற முடிந்துள்ளது.

சீமான், அதிமுகவை அதிகமாக விமர்சிப்பதில்லை, எடப்பாடி பழனிசாமியை இணக்கமாகவே அணுகுகிறார், அப்படி இருந்தும் அதிமுக வாக்குகள் நாதகவுக்கு செல்லாதது அரசியல் பார்வையாளர்களின் தீவிர கவனிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் இதுபற்றி அலசியுள்ளார்.

பத்திரிகையாளர் பேட்டி: ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "தமிழ்நாட்டில் இப்போது பிரதான எதிர்க்கட்சி தலைவராக வருவது யார் என்பதில் தான் போட்டியே நடக்கிறது. முதல்வர் ஆகப்போவது யார் என்பதில் இல்லை. இந்தியா கூட்டணியில் மம்தா, சரத் பவார் போன்றவர்கள் போர்க்கொடி தூக்குவதைப் போல, அண்ணாமலை, சீமான், அன்புமணி ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் எண்ணத்தில் இருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் கருத்து வேறுபாடுகள், கொள்கைகளை மறந்து, வாக்குகள் ஒருங்கிணைந்தால் நாம் வெல்ல முடியுமா என்ற அளவில் ஒன்றுபட்டால் ஓரளவுக்கு வெற்றி பெற முடியும் என நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரதம் இருந்தால் சீமான் ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுகிறார். சாட்டை துரைமுருகன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிடுகிறார். அண்ணாமலை உள்ளே வருகிறார். இதுபோல ஒருங்கிணைவை முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள்.

சீமானுக்கு அதிமுக ஓட்டு விழாததன் காரணம்: சீமான், எடப்பாடி பழனிசாமியை சித்தப்பா என்று கூப்பிட்டாலும், அதிமுக தொண்டர்கள் சீமானுக்கு வாக்களிக்க தயாராக இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், அதிமுகவில் இளைஞர்கள் அதிகளவில் இல்லை. அதிமுக தொண்டர்களின் சராசரி வயது 50க்கு மேல் இருக்கும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அக்கட்சியில் புது வரவே இல்லை. மூத்தவர்களின் கட்சியாக இருக்கிறது.

அதிமுகவில் இளைஞர்கள் அதிகம் இருந்திருந்தால் அவர்களின் ஓட்டுகள் சீமானுக்கு சென்றிருக்கும். அது இல்லை என்பதால் தான் சீமானுக்கு அதிமுக ஓட்டுகள் கிடைக்கவில்லை. கூட்டணி வைத்தால் தவிர நாம் தமிழர் கட்சி அதிகாரத்தில் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.

2026ல் எதிர்க்கட்சிகள்: மேலும் பேசியுள்ள ப்ரியன், "திமுக ஏற்கனவே வலிமையாக உள்ளது. கூட்டணி கட்சிகளும் இருப்பதால் அந்தக் கூட்டணி மேலும் வலுப்பெறுகிறது. மோடி அரசு மத்தியில் இருக்கும் வரை திமுக கூட்டணிக்குள் பிரச்சனை வராது. எதிர்க்கட்சிகள், திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பெற முயற்சிக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலுக்குள், திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி பல்வேறு தரப்பினரையும் திருப்திப்படுத்த முயற்சிக்கும். அதைத் தாண்டி எதிர்ப்பு ஓட்டுகளை கவர்வது தான் எதிர்க்கட்சிகளுக்கு சவால்.

2026 சட்டசபை தேர்தலுக்கு விஜய் களத்தில் இறங்குகிறார். அதிமுக உள்ளிட்ட கட்சிகள், திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒரு முடிவில் கருத்து வேறுபாடுகளை மறந்து வலுவான கூட்டணியை அமைத்தால், விஜய் தனியாக வந்தாலும் கூட அவரை பின்னுக்குத் தள்ளிவிட முடியும். திமுகவுக்கு கடுமையான சவாலை அளிக்க முடியும். எதிர்க்கட்சிகள் 3 அல்லது 4 அணிகளாக நின்றால் திமுக எளிதாக மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழலே ஏற்படும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+