உயிருக்கு போராடிய ஆசிரம மாணவி.. செல்போனை பறித்து லாக் போட்ட சாமியார்! அறையில் நடந்தது என்ன?
சென்னை: திருவள்ளூரில் ஆசிரமத்தில் பூச்சி மருந்து குடித்துவிட்டு கல்லூரி மாணவி உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணின் செல்போனை வாங்கி சாமியார் முனுசாமி லாக் போட்ட பிறகே அவர்களது உறவினர்களிடம் கொடுத்துள்ளார். இது ஏன் அவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.
பூண்டி அருகே வெள்ளத்துகோட்டை என்ற பகுதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் முனுசாமி. இங்கு பூஜைகள் செய்து மூலிகை சாறுகள் மூலம் நாள்பட்ட நோய்களை முனுசாமி குணப்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இவரது ஆசிரமத்தில் இவரிடம் வந்து ஆசிபெற்றால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் சில பெண்கள் நம்புகிறார்கள். மேலும் திருமணமும் கைகூடி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இவரது ஆசிரமத்திற்கு நிறைய பெண்கள் வருவார்கள்.

இரவு நேரத்து பூஜை
அவர்களில் சிலரை மட்டும் இரவு நேரத்தில் தங்கி தான் நடத்தும் பூஜைகளில் கலந்து கொள்ளுமாறு முனுசாமி வற்புறுத்துவாராம். இவர் பில்லி, சூனியம் வைக்கும் செயல்களிலும் ஈடுபடுவதால் பெண்களும் தங்க மறுக்காமல் தங்கிவிடுவார்களாம். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தீராத வயிற்று வலி மற்றும் கழுத்து வலியுடன் வந்தார் செம்பேடு பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி.

தனியார் கல்லூரி
இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார். இவரை ஆசிரமத்தில் வைத்து சிகிச்சை கொடுப்பதாக முனுசாமி கூறியதாக தெரிகிறது. இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேல் அந்த மாணவி ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஆன்லைன் வகுப்பு என்பதால் அந்த பெண் அந்த ஆசிரமத்தில் தனது அத்தையுடன் ஓராண்டுக்கு மேல் இருந்ததாக தெரிகிறது.

கல்லூரி திறப்பு
இந்த நிலையில் கல்லூரி திறந்தவுடன் அவரை அழைத்து செல்ல பெற்றோர் வந்த போது பெண்ணுக்கு நாகதோஷம் இருக்கிறது. அதனால் ஒரு 3 நாட்கள் பூஜை செய்துவிட்டு பின்னர் அனுப்புவதாக முனுசாமி கூறினாராம். இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பூஜைக்கு அழைத்து சென்றதும் தெரிகிறது.

சாமியார் அறையில் மாணவி?
அன்றைய தினம் இரவு அந்த மாணவியையும் அவரது அத்தையையும் தனது அறையிலேயே சாமியார் முனுசாமி தங்க வைத்துக் கொண்டாராம். மறுநாள் காலையில் மாணவி வாந்தி எடுத்துள்ளார். மிகவும் சோர்வாக இருந்துள்ளார். அவரது அத்தை கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் பதறிய அந்த மாணவியின் அத்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸை வரவழைக்குமாறு முனுசாமியிடம் கூறியுள்ளார்.

2 மணி நேரம் காக்க வைத்த சாமியார்
உடனே முனுசாமி மருத்துவமனைக்கெல்லாம் வேண்டாம். மந்திரம் போட்டால் சரியாகிவிடும் என கூறி 2 மணி நேரத்திற்கு மேல் அங்கேயே காக்க வைத்துள்ளார். பிறகு மாணவியின் நிலை மோசமடைந்ததை அடுத்து ஆம்புலன்ஸுக்கு பதில் ஆட்டோவை வரழைத்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.

செல்போனை பறித்த சாமியார்
மாணவி விஷம் குடித்திருந்ததால் அவருக்கு சிகிச்சை அளித்த மறுத்துவிட்டதால் அங்கு காலதாமதம் ஏற்பட்டு பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது எந்த சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து அவர் உயிரிழந்துவிட்டார். மாணவி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் சாமியார் முனுசாமி அந்த மாணவியின் செல்போனை பறித்து வைத்துக் கொண்டாராம்.

உறவினர்கள்
இதையறிந்த உறவினர்கள் மாணவியின் செல்போனை கேட்டு முனுசாமியிடம் தகராறு செய்தனர். அப்போது தனக்கு தெரியவே தெரியாது என சாதித்த முனுசாமி ஒரு கட்டத்தில் ஆசிரமத்தில் தேடுவது போல் நடித்து அங்கிருந்த கோயிலில் கிடந்ததாக செல்போனை கொடுத்துள்ளார். அந்த செல்போனை பார்க்கலாம் என உறவினர்கள் முயன்றும் அதில் பாஸ்வேர்டு போட்டிருந்ததால் ஓபன் செய்ய முடியவில்லை.

செல்போன் லாக்
தங்கள் மகளுக்கு செல்போனை லாக் செய்யும் பழக்கமில்லை என்பதால் இந்த செல்போனை சாமியார்தான் லாக் செய்திருக்க வேண்டும். மாணவியின் மரணத்தில் சாமியாருக்கும் தொடர்புண்டு என அவர் மீது பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். மாணவிக்கு உடல்நிலை மோசமடைந்த நிலையிலும் சிகிச்சைக்கு அவரை முனுசாமி விரைந்து அனுப்பாமல் விட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மாணவியின் செல்போனை அவரது அத்தையிடம் இருந்து பறித்துக் கொண்டது ஏன் என்றும் தெரியவில்லை. இவற்றுக்கு விடை கிடைத்தால் மாணவி தற்கொலை செய்தது ஏன் என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications