தயவு செஞ்சு உங்கள் தகுதிக்கு மீறி யாருக்கும் பணம் கடன் வாங்கி கொடுக்காதீங்க.. நெட்டிசன்கள் பதிவு
சென்னை: தயவு செஞ்சு உங்க தகுதிக்கு மீறி யாருக்கும் பணம் கடன் வாங்கி குடுக்காதீங்க. முடிஞ்சா அஞ்சோ பத்தோ உதவி பண்ணுங்க. அதற்கு மேல் எல்லாம், அவங்களோட ரிலேஷன்ஷிப் போய்டுமென்னு கவலைப்பட்டு உதவி செய்து மன உளைச்சலுக்கு ஆளாகாதீங்க என்று நெட்டிசன் ஒருவர் பதிவு ஒன்ற வெளியிட்டிருந்தார்.. அதை பின்பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கடன் வாங்குவது எந்த அளவிற்கு நம்மை பாதிக்குமோ, அதே போல் கடன் கொடுப்பதும் நம்மை பாதிக்கும். கடன் கொடுத்து விட்டு அதை திரும்ப வாங்குவது பலருக்கும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. மிக நெருங்கிய நண்பர், சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை, உறவினரின் மகன், நண்பனின் உறவினர்கள், நண்பர்கள், அலுவலகத்தில் வேலை செய்வோர் என நம்மை சுற்றியுள்ள நெருக்கமானவர்களுக்கு கடன் கொடுத்து விட்டு திரும்ப வாங்குவது தற்போது எளிதானது இல்லை.

கடனை வாங்கியவர்கள் அவர்களாக கடனை தொகையை திரும்ப கொடுத்து விட்டால் எந்த சிக்கலும் இல்லை.. அவர்கள் ஏதேனும் சிக்கலில் மாட்டி உங்களுக்கு பணத்தை திரும்ப தராமல் போனால் பணத்திற்காகவே உங்கள் நண்பருக்கும், உறவினருக்கும் தர்மசங்கடமான நிலை ஏற்படும். அதே போல் பணத்தை திரும்ப கேட்டு கேட்டு பேசும் போது, அவர்களுடன் உள்ள நட்பும் உறவும் கண்டிப்பாக பாதிக்கப்படும். கடன் அன்பை முறிக்கும் என்பது நிச்சயம் உண்மை..
இது ஒருபுறம் எனில் கடன் வாங்கியவர், கடனை வேண்டுமென்றே திரும்ப கொடுக்காமல் ஏமாற்றினால், சட்ட ரீதியாக நிவாரணம் பெறுவது எளிதானது அல்ல.. இன்னொன்று போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் கொடுத்தால், சிவில் விவகாரம் என்பதால், பணம் கொடுத்தது உண்மை என்பதற்கான ஆதாரம் வேண்டும். அதேபோல் பணத்தை திரும்பத்தரவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும் இதற்கு நீதிமன்றத்தில் போய் வழக்கு தொடர வேண்டும். அப்படி வழக்கு தொடர்ந்தாலும் பணம் கொடுக்கும் நிலையில் இருந்தால் தான் வாங்க முடியும். பணத்தை தரமுடியாத அளவிற்கு கைவிரித்தால் ஒன்றுமே செய்ய முடியாது...
எனவே தான் வங்கிகள் கூட சரியான மாத ஊதியம் இல்லாதவர்களுக்கு கடன் தருவது இல்லை. இப்படியான சூழலில் நண்பர்கள் உறவினர்கள் என்று கடன் கொடுத்துவிட்டால், பின்னால் அவதிப்பட வேண்டிய நிலை வரும்.. இதுபற்றி பலரும் கூறியிருக்கிறார்கள். ஆனாலும் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுத்து கடன் கொடுத்து விடுகிறார்கள். குறிப்பாக எமோசனலான பேச்சுக்களை நம்பி கடன் கொடுத்து விடுகிறார்கள். கடன் வாங்கியவர் ஜாலியாக சுற்றுவார், கடன் வாங்கியவர் தான் கலங்கியபடி நிற்க வேண்டி நிலை ஏற்படுகிறது.
கையில் உள்ள பணத்தை கொடுத்தால், இந்த நிலை என்றால், ஒருவரை நம்பி வங்கியில் லோன் எடுத்து அல்லது அலுவலகத்தில் அதிகப்படியான பணத்தை கடன் வாங்கி கொடுத்தால், கண்டிப்பாக அது உங்களுக்கு பேராபத்து ஆகும். இதுபற்றி எஸ்டிஆர் என்ற பெயரில் உள்ள நெட்டிசன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "தயவு செஞ்சு உங்க தகுதிக்கும் மீறி யாருக்கும் பணம் கடன் வாங்கி குடுக்காதீங்க. முடிஞ்சா அஞ்சோ பத்தோ உதவி பண்ணுங்க. அதற்கு மேல் எல்லாம் அவங்களோட ரிலேசன்சிப் போய்டுமென்னு கவலைப்பட்டு உதவி செய்து மன உளைச்சலுக்கு ஆளாகாதீங்க" என்று கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், 85000 ரூபாய்.. ஒரு வருடம் ஆக போகுது... யார்கிட்டயும் இந்த அளவுக்கு நான் இறங்கி போனது இல்லை.. ஆனா கடன் கொடுத்த பாவத்துக்கு பிச்சை மட்டும்தான் நான் அந்த நேரத்தில் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "தெரிஞ்ச பையனுக்கு என் பெயரில் லோன் போட்டு பைக் எடுத்து கொடுத்தேன். அவன் ஒழுங்கா பணம் கட்டவிலை. வங்கியில் இருந்து எனக்கு தான் அழைப்பு வரும். நீங்க பணம் கட்டுங்க பிறகு தரேன் என்றான். நானும் கட்டினேன். ஆண்டு 1 ஆகிறது இன்னும் பணம் வரல." என்று கூறியுள்ளார்.
Mm 85000ரூபாய்.. ஒரு வருடம் ஆக போகுது...எவங்கிட்டயும் இந்த அளவுக்கு நான் இறங்கி போனது இல்லை.. ஆனா கடன் கொடுத்த பாவத்துக்கு பிச்சை மட்டும்தான் நான் அந்த டைம் ல எடுக்கல.. 🤦♂️🤦♂️ https://t.co/TTl37XFerw pic.twitter.com/AcyLqD0kqH
— அழகானவனின் தகப்பன் (@vanhelsing1313) February 9, 2024
இதுபற்றி கருத்து தெரிவித்த நெட்டிசன்கள் பலரும் ஒரே குரலில் யாருக்கும் கடன் வாங்கி தர வேண்டாம். கடன் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். கடன் வாங்கி கொடுத்து திரும்ப கேட்டு கெட்ட பெயர் எடுப்பதை விட வாங்கித் தராமல் அதே கெட்ட பெயரை எடுக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்த காலத்தில் உதவி செய்தால் உபத்திரவம் தான் வருகிறது.. எனவே நாமாக போய் யாருக்கும் உதவி செய்வதை ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்றும், கடன் வாங்கி தர வேண்டிய நிலை வந்தால், கண்டிப்பாக முடியாது என்று ஒரே குரலில் மறுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். அதேநேரம் உதவி செய்ய விரும்பினால் உங்களால் முடிந்த சிறிய அளவில் நிதி உதவி தரலாம் என்றும். அது கடன் என்று நினைக்காமல் திரும்ப வராது என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணத்தை அவர்களுக்கு தரலாம் என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்..












Click it and Unblock the Notifications