"பிரஷர்.. பிரஷர்".. அசைந்து கொடுக்காத அப்பாவு.. உறுதியான முடிவு! எடப்பாடி கோரிக்கையை ஏற்காதது ஏன்?
சென்னை: அதிமுகவில் பெரிதும் எதிர்கட்சி துணை தலைவர் யார்.. சட்டசபையில் அந்த இருக்கையில் அமர போவது யார் என்ற கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. அந்த இருக்கையில் அமர போகும் நபர் ஓ பன்னீர்செல்வம்! எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு பின் இன்று தொடங்கிய கூட்டத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றிய பின்னர் சட்டசபை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இருக்கை எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ பன்னீர்செல்வத்திற்கும் அளிக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதியது. ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் இன்று தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவரின் இருக்கை மாற்றப்படவில்லை. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எம்எல்ஏ-க்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
அதாவது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிக்கு முன் வரிசையிலும், அவருக்கு அருகிலேயே துணை எதிர்க்கட்சி தலைவர் ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கையும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆர்பி உதயகுமாரை சபாநாயகர் எதிர்கட்சித் துணை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் கோரிக்கையை அப்பாவு ஏற்றுக்கொள்ளாதது ஏன் என்பதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன.
பின் வரும் காரணங்களால் அவர் எடப்பாடி தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
காரணம் 1 - அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டாலும் உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஒருவேளை ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிட்டால்., அதற்கு முன் ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அப்பாவு நியமித்தால் அது சிக்கலாகிவிடும். தேவையில்லாத சட்ட சிக்கல்களை, விவாதத்தை அது ஏற்படுத்தும். இதனால் சபாநாயகர் அப்பாவு இதில் எடப்பாடி கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
காரணம் 2 - அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் ஆணையமே இன்னும் பொதுக்குழு முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை இப்போதும் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடிதான் இணை ஒருங்கிணைப்பாளர். சபாநாயகர் முடிவு எடுக்கும் போது தேர்தல் ஆணையத்தில் என்ன பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதைதான் பார்ப்பார். தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை இப்போதும் ஓபிஎஸ் அதிமுக உறுப்பினர்தான்.
இதில் சபாநாயகர் சுயமாக முடிவு எடுக்கலாம் என்றாலும், அவசரப்பட்டு பதவிகளை மாற்றினால் அது தேவை இல்லாத விவாதங்களை ஏற்படுத்தும்.
இந்த இரண்டு விஷயங்களால்தான் அதிமுகவில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ பன்னீர்செல்வம் தொடர்கிறார் என்று கூறப்படுகிறது!












Click it and Unblock the Notifications