விஜய் பிரச்சாரம் செய்வதை நாங்க ஏன் தடுக்கப்போறோம்?.. குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கே.என்.நேரு
சென்னை: விஜய் பிரச்சாரம் செய்வதை நாங்கள் ஏன் தடுக்கப்போகிறோம்? அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திமுகவை விமர்சனம் செய்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் சிலர் திட்டமிட்டே தனது பிரச்சாரத்துக்கு இடையூறு செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் தவெக தலைவர் விஜய் மனு கொடுத்தார்.

சென்னையில் தவெக சார்பில் திட்டமிட்டப்பட்ட பிரச்சாரக் கூட்டத்துக்கு மாநகரக் காவல்துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டது ஜனநாயகம் மீதான தாக்குதல். முல்லை நகரில் பிரச்சாரத்துக்கு அனுமதி கேட்டு 2 நாட்கள் முன்பே அனுமதி கோரப்பட்டது.
திடீரென கூட்டத்துக்கு ஒருநாள் முன்பு அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. நான் பிரச்சாரம் மேற்கொள்ள முயற்சிக்கும்போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணம் கூறி அனுமதியை தாமதிப்பதும், அனுமதி மறுப்பதும் தொடர்கதை ஆகிவருகிறது. திமுக அரசு திட்டமிட்டு எனது பிரச்சாரத்தை முடக்குகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார் விஜய்.
இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான மறைந்த ராமஜெயத்தின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அமைச்சர் கே.என்.நேரு.
அமைச்சர் கேஎன் நேரு பேசுகையில், "திருச்சியில் அனைத்து தொகுதிகளிலும் நிச்சயம் மீண்டும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் வெற்றி பெறும். முக ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவதற்கு திருச்சி முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறோம். மக்களும் அதை தான் விரும்புகிறார்கள்.
திருச்சி மட்டுமல்ல திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் உள்ள 41 தொகுதிகளிலும் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். பொதுமக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். இந்த ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது." எனத் தெரிவித்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட்டால் திமுக வெற்றி சாத்தியமா என்கிற கேள்விக்கு பதில் அளித்த கேஎன் நேரு, ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது. யார் போட்டியிட்டாலும் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வெற்றி பெற வைப்போம்.
இந்த முறை தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் மகளிர் என பலருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மீதமுள்ள 34 தொகுதிகளிலும் அவர் சேர்த்தே கூறட்டும். 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது அவருடைய ஆசை, ஆனால் அது நிறைவேறப் போவதில்லை. திமுக அணிதான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். கூட்டணியில் யாரையும் விட்டுவிடாமல் அனைவரையும் அரவணைத்து செல்லும் முதலமைச்சருக்கு பெருமை தான்.
விஜய் பிரச்சாரம் செய்வதை நாங்கள் ஏன் தடுக்கப் போகிறோம்? அவரவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது திமுகவை விமர்சனம் செய்வார்கள். டெல்டா மாவட்டங்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அனைவரும் பாடுபடுவோம். திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிப்பது குறித்து நிதிநிலைக்கு ஏற்ப முடிவு எடுப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications