விறுவிறுவென ஆரம்பித்து திடீரென மந்தமாகிறதே வாக்குப்பதிவு.. என்ன நடக்கிறது தமிழகத்தில்?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் ஆரவாரத்தோடு ஆரம்பித்த ஓட்டுப் பதிவு திடீரென மந்தமாகியுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் காலை 7 மணிக்கு 38 லோக்சபா தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஆரம்பித்தது. ஆரம்பத்தில் மளமளவென வாக்குகள் பதிவாகின. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து ஓட்டுக்களை பதிவு செய்தனர். பிரபலங்களான ப.சிதம்பரம், ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்றோர் முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாக தங்கள் ஜனநாயக கடமையையாற்றினர்.
இதனாலோ என்னவோ மக்களும், முண்டியடித்து நீண்ட க்யூவில் நின்று வாக்குப்பதிவு செய்தனர். காலை 11 மணி நிலவரப்படி, தமிழகம் முழுக்க 30.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், பகல் 1 மணி நிலவரப்படி, 39.49 சதவீத வாக்குகள்தான் பதிவாகின. திடீரென இப்படி வாக்குப்பதிவு மந்தமாக காரணம், சில உள்ளன.
முதலாவது காரணம், வெயில். கடும் கோடை வெயில் காரணமாக மதிய நேரத்தில் வாக்களிக்க வருவதை பெரும்பாலான மக்கள் தவிர்க்கிறார்கள். அவர்கள் காலையில் விரைந்து வாக்களிக்க வந்தனர். ஆனால் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறிய கணக்குப்படி பார்த்தால் கூட 305 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. கணக்கில் வராதது இன்னும் பல.
'ஒருவிரல் புரட்சியை நிகழ்த்திய விஜய்'... சென்னை அடையாறில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பு
இதுமட்டுமின்றி, உள்ளூர்களில் வசிப்பவர்கள் வாக்களித்துவிட்ட நிலையில், வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்கள் சென்று வாக்களிக்க முயன்றவர்கள் பஸ்கள் கிடைக்காமல் திரும்பி போய்விட்டனர். அல்லது காலதாமதமாக சொந்த ஊர்களுக்கு வருகிறார்கள். அவர்களும் வாக்களிக்க ஆரம்பித்த பிறகுதான், இனிமேல் சுறுசுறுப்பை பார்க்க முடியும்.
ஆனால், பஸ்கள் கிடைக்காமலோ, வாக்குப்பதிவு இயந்திர கோளாறு சரி செய்யப்படாமலோ வாக்களிக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டால், வாக்குப்பதிவு எண்ணிக்கை குறையும். வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்தால், அதாவது சுமார் 80 சதவீதம் அளவுக்கு சென்றால், அது ஆளும் கட்சிக்கு சாதகமான அம்சம் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வாக்குப்பதிவு குறைந்து இருந்தால் மக்கள் மத்தியில் ஆட்சி மீது அதிருப்தி இல்லை என பொருள் கொள்ள முடியும் என்கிறார்கள் அவர்கள்.