"700% வளர்ச்சி.." தமிழ்நாடு சாதிப்பது எப்படி! டேட்டாவுடன் வந்த அமைச்சர் பிடிஆர்.. நறுக் விளக்கம்
சென்னை: கேரளாவை விடத் தமிழ்நாடு மிகச் சிறப்பாக வளர்ந்து இருப்பதாக அமைச்சர் பிடிஆர் தெரிவித்தார். சில துறைகளில் கேரளா மிகச் சிறப்பாக இருந்தாலும் கூட வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கேரளா தவறிவிட்டதாகவும் இதன் காரணமாகவே இளைஞர்கள் கேரளாவில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்தார். மறுபுறம் தமிழகம் பல துறைகளில் முதலீடுகளைத் தொடர்ந்து பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கேரளா மாடலுடன் தமிழக மாடலை ஒப்பிட்டுப் பேசினார். கேரளா சில பிரிவுகளில் சிறந்த மனித மேம்பாட்டுக் குறியீடுகளைக் காட்டுகிறது.

அமைச்சர் பிடிஆர்
ஆனால், போதியளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கேரள தவறிவிடுவதாக அவர் தெரிவித்தார். இதற்கு நேர்மாறாக, தமிழ்நாடு வலுவான மனித மேம்பாடு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி 700% அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
கேரளா
இது தொடர்பாக பிடிஆர் பேசுகையில், "தமிழகம் ஒரு தனித்துவமான மாநிலம்.. இங்குள்ள சூழல்கள், அரசியல், அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தவை. மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தின் சாதனைகள் மிகச் சிறந்தவை. இந்த மாடலின் உண்மையான விளைவுகளே முக்கியம். தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உயர்கல்வி சேர்க்கை விகிதம், வறுமை குறியீடு, ஆயிரம் மக்களுக்கு மருத்துவர்கள் எண்ணிக்கை என எந்த குறியீடாக இருந்தாலும் தமிழகத்தின் சாதனைகள் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. புள்ளிவிவரங்கள் எதுவாக இருந்தாலும், நாங்கள் சிறந்த முடிவுகளையே காண்கிறோம்" என்றார்.
தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகம் எப்படி வேறுபட்டு இருக்கிறது என்பதை விளக்கிய அவர், "கேரளாவில் சிறந்த மனிதவளம் உருவாக்கப்படுகிறது. ஆனால், போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை. இதனால் கேரள மக்கள் உலகின் மற்ற பகுதிகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் இப்போது கேரளாவில் பெரும்பாலும் முதியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.. இளம் வயதினர் பெருமளவில் இடம்பெயர்ந்துவிட்டனர்.
கேரள மாடல்
இது ஒருவிதத்தில் பிரச்சனையாக மாறிவிட்டது. இதை ஒரு 'கேரள மாடல்' என்று கூட நான் கூறமாட்டேன். என்ன பெயரில் அழைக்கிறோம் என்பதை விட என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறோம் என்பதை முக்கியம். அதற்காகவே நான் வேலை செய்கிறேன். கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், மனித மற்றும் சமூக மேம்பாட்டில் கேரளாவுக்கு இணையாகத் தமிழ்நாடு செயல்படுகிறது. ஆனால் அத்துடன் நின்றுவிடாமல், மற்ற மாநிலங்களால் சாத்தியப்படாத வழிகளில் முதலீடுகளை ஈர்க்கும் வலுவான பொருளாதாரச் சூழலையும் தமிழ்நாடு கொண்டுள்ளது.
எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி
ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் 700% வளர்ச்சி அடைந்துள்ளோம். இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி 60% அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகளில், தமிழகத்தின் முக்கியமான வளர்ச்சி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சர்வதேச நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறுவது இதற்கு முக்கிய காரணம் என்றாலும் பல ஆயிரம் திறமையான பணியாளர்களும், சாதகமான பொருளாதாரச் சூழல், ஊக்கத்தொகைகள், மற்றும் எளிதான தொழில் செய்யும் சூழல் எனப் பலவற்றைத் தமிழகம் கொண்டுள்ளதால் தான் அந்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வருகிறது" என்றார்












Click it and Unblock the Notifications