நா ரெடி தான் வரவா! மாணவர்களை சந்திக்கும் தேதி..விஜய் சொன்ன சேதி! ஆனா.. இரண்டு கட்டமாக ஏன் தெரியுமா?
சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தமிழகம், புதுச்சேரியில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை விஜய் சந்திக்கும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை ஒரே நாளில் விஜய் மாணவ மாணவிகளை சந்தித்த நிலையில் இந்த முறை இரண்டு கட்டங்களாக சந்திப்பது ஏன்? என்பது குறித்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்திருக்கும் விஜய் மாணவ, மாணவிகளிடையே செல்வாக்கு பெற்ற நபராக இருக்கிறார். காரணம் கடந்த 20223 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை விஜய் சந்தித்தது தமிழகம் முழுவதும் பேசுபொருளானது.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இருந்தும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களின் போக்குவரத்து செலவு உணவு தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை ஏற்றுக்கொண்டனர். காலையிலிருந்து இரவு வரை ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் தன் கையாலேயே பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிய விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட 11 மணி நேரம் எந்தவித முக சுளிப்பும் இன்றி மகிழ்ச்சியோடு விஜய் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதனால் இளைஞர்களின் பார்வை விஜய் பக்கம் திரும்பியது. மேலும் அந்த நிகழ்ச்சி பெருவெற்றி பெற்றதால் விஜய் தரப்பு மகிழ்ச்சி அடைந்தது. குறிப்பாக இது இளம் தலைமுறை வாக்காளர்களை விஜய் பக்கம் வரவழைக்கும் என்பதால் வருடம் தோறும் இதே நிகழ்ச்சியை நடத்த விஜய் மக்கள் இயக்கத்தினர் திட்டமிட்டனர். இதையடுத்து இந்த ஆண்டும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இதை அடுத்து 234 தொகுதிகளிலும் இரு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை அடையாளம் காணும் பணி கடந்த வாரமே நிறைவு பெற்றது. இதையடுத்து அவர்களுக்கு 'பாஸ்' வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஒரே நாளில் விஜய் மாணவ மாணவிகளை சந்தித்து நிலையில் இந்த முறை இரண்டு கட்டங்களாக சந்திக்கிறார். இதுகுறித்தான அறிவிப்பை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில்,"தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2024-ம் ஆண்டு நடந்து முடிந்த 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் 'தமிழக வெற்றிக் கழகம்' சார்பாகப் பாராட்ட உள்ளார்.
முதற்கட்டமாக வரும் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஜூலை 3 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள். மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் விஜய் கவுரவிக்க உள்ளார் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறப்பட்டுள்ளது.
கடந்த முறை ஒரே நாளில் சுமார் ஆயிரம் மாணவர்களை விஜய் சந்தித்து அவர்களோடு புகைப்படமும் எடுத்துக் கொண்ட நிலையில் தற்போது ஏன் இரண்டு கட்டங்களாக மாணவர்களை சந்திக்கிறார் என்பது குறித்து விஜய் கட்சி நிர்வாகிகளிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக பேசினோம். இது தொடர்பாக பதில் அளித்துள்ள அவர்கள்,"கடந்த முறை தொகுதிக்கு மூன்று பேர் என சுமார் 800 மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்கள் குடும்பத்தினர் சகோதரர்கள் என மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை வரவழைக்க வேண்டி இருந்தது.
அவர்கள் போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு ஆகியவை சிறப்பாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்த போதும் காலை முதல் இரவு வரை நிறைய மாணவர்கள் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் அங்கேயே காத்திருந்தனர்.. இதன் காரணமாக சில சர்ச்சைகள் ஊடகங்களில் எழுந்தது மேலும் நடிகர் விஜய்யும் 14 மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் நின்றுவாறு அவர்களுக்கு சிரித்த முகத்துடன் பரிசுகள் வழங்கினார். ஆனால் அதற்குப் பிறகு மூன்று நாட்கள் அவருக்கு கடுமையான கால் வலி ஏற்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக இது போன்ற பிரச்சனைகளையும் சிக்கல்களையும் தவிர்க்கும் வகையிலேயே தற்போது இரண்டு கட்டங்களாக மாணவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சுற்றிலும் அதிக கூட்டம் திரளும் என்பதாலும் இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை களையவே விஜய் இரண்டு கட்டங்களாக மாணவர்களை சந்திக்கிறார்" என்றனர்.












Click it and Unblock the Notifications