இங்குதான் நாம் வேறுபடுகிறோம்.. இதனால்தான் நாம் எப்போதும் முன்னோடி.. தனித்து நிற்கும் தமிழகம்!
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் தமிழகம்தான் எப்போதும் முன்னோடி மாநிலம் என்பதை மீண்டும் ஒருமுறை நாம் அழுத்தம் திருத்தமாக நிரூபித்து இருக்கிறோம்.
Recommended Video
சென்னை: இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் தமிழகம்தான் எப்போதும் முன்னோடி மாநிலம் என்பதை மீண்டும் ஒருமுறை நாம் அழுத்தம் திருத்தமாக நிரூபித்து இருக்கிறோம்.
இரண்டு நாட்களுக்கு முன் லோக் சபாவில் அவை கூடியது, உயர் சாதியினருக்கு பொருளாதார ரீதியாக 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மீதான விவாதம் தொடங்கியது. வரிசையாக ஆதரவு மேல் ஆதரவு, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று வேறுபாடு இல்லாமல் ஆதரவு குரல்கள்.
ஒரே ஒரு குரல்.. தமிழகத்தில் இருந்து ஒலித்தது.. அந்த ஒரு குரல் தைரியமாக, தனியாக அந்த மசோதாவை எதிர்த்தது. அது அதிமுக எம்.பி தம்பிதுரையின் குரல். நீ தனியாக நின்றால் கூட தவறில்லை, எது சரியானதோ அதன் பக்கம் நில்! என்று பிரபல ஆங்கில பொன் மொழிக்கு ஏற்றபடி தம்பிதுரை லோக் சபாவில் தமிழகத்தின் குரலாக ஒலித்தார்.
கனிமொழி பேச்சு
ஆனால் தமிழகத்தின் குரல் அதோடு முடியவில்லை. ராஜ்யசபாவில் அதே மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அங்கும் அதே நிலைதான். எல்லா கட்சிகளும் சொல்லி வைத்தார் போல மசோதாவை ஆதரித்தது. தமிழகத்தில் இருந்து தேர்வான, கம்யூனிஸ்ட் எம்பி டிகே ரங்கராஜன் கூட மசோதாவை ஆதரித்து பேசினார். ஆதரவு குரல்களுக்கு இடையே சீறி வந்து எதிர்ப்பு தெரிவித்தார் திமுக எம்.பி கனிமொழி. அம்பேத்காரின் பொன்மொழியில் தொடங்கி நான் பெரியார் மண்ணின் புதல்வி என்று கூறியது வரை.. அவரது பேச்சு அவையை அதிர வைத்த ஒன்று.
தமிழகம் இப்படித்தான்
தமிழகம் எப்போதுமே இப்படித்தான். இந்தியா ஒரு பக்கம் சென்றால்.. தமிழகம் ஒரு பக்கம் செல்லும். கடைசியில் என்னவோ தமிழகம் சென்ற பக்கம்தான் சரியாக இருக்கும், இருந்திருக்கிறது! இந்தி எதிர்ப்பில் விழுந்த விதை இப்போதுவரை மாறாமல் தொடர்ந்து வருகிறது. 10% கோட்டா மசோதாவிற்கு தனியாளாக எதிர்ப்பு தெரிவித்தது தமிழகம் மட்டும்தான் என்பது கண்டிப்பாக இந்திய வரலாற்றில் இடம் பிடிக்கும்.
இந்தி எதிர்ப்பு
1950களில் இந்தி மொழி இந்தியா முழுக்க திணிக்கப்பட்டது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா வரை இந்தி மொழி வந்தது. ஆனால் சென்னை எல்லையை தொடும் முன் பெரிய போராட்ட அணை கட்டப்பட்டது. இந்திக்கு எதிராக இளைஞர்கள் கொதித்தெழுந்து போராட துவங்கினார்கள். அப்போது தமிழர்களை ''யார் இவங்க மொழி வெறி பிடித்து இருக்கிறார்கள்'' என்று கூறியவர்கள் எல்லாம், இப்போது எங்கள் மொழியில் இந்தி கலந்துவிட்டது, என்ன செய்வதென்று தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரே மாநிலம்
அப்போது இந்தியை எதிர்த்த ஒரே மாநிலம் தமிழகம்தான். இப்போது அதன் காரணத்தை மற்ற மாநிலங்கள் உணர்ந்து இருக்கிறது. அதேபோல்தான் இப்போது தமிழகம் தனி ஆளாக 10% கோட்டா மசோதாவை எதிர்த்து இருக்கிறது. இந்தியாவில் நடந்த பல மாற்றங்களுக்கு விதை இங்கிருந்து போடப்பட்டதுதான். அதேபோல்தான் தற்போது 10% கோட்டா மசோதாவிற்கு எதிரான விதையை தமிழகம் போட்டுள்ளது.
முன்னோடி மாநிலம்
இந்தி கற்காத காரணத்தால் தமிழகம் எந்த சிறிய இழப்பையும் சந்திக்கவில்லை. அதேபோல்தான் தமிழக எம்பிக்கள் ஏன் இந்த 10% கோட்டா மசோதாவை எதிர்த்தார்கள் என்று எதிர்காலத்தில் , மற்ற மாநிலங்கள் உணர்ந்து கொள்ளும். 69 சதவிகித இடஒதுக்கீடு வைத்தும் கொண்டு கூட, தமிழகம் இந்த 10% கோட்டா மசோதாவை பார்த்து ஏன் அச்சப்பட்டது என்பதை காலம் பிற மாநிலங்களுக்கு உணர்த்தும் அப்போது.. தமிழகம் இதிலும் முன்னாடிதான் என்பது தெரியவரும்.
|
கனிமொழி பேச்சு
ராஜ்ய சபாவில் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ரங்கராஜன் மசோதாவிற்கு ஆதரவாக பேசிய போது கோபம் கொண்ட கனிமொழி '' என்ன அநியாயம் இது?'' என்று உணர்ச்சி பெருக்கில் கேள்வி கேட்டார். அந்த உணர்ச்சி.. அந்த குரலில் இருந்த கோபம், அதிர்ச்சி.. அதுதான் தமிழகத்தின் குரல். இந்த கோட்டாவின் பிரச்சனைகள் தெரிய வரும் சமயத்தில் அது மொத்த இந்தியாவின் குரலாகவும் மாறும்!