2K கிட்ஸ்களின் மோசமான முன்னுதாரணம் டிடிஎப் வாசன்- நிகழ்த்திய 'சம்பவங்கள்'- எப்போது கடும் நடவடிக்கை??
சென்னை: இன்றைய இளம் வளரும் தலைமுறையின் மோசமான முன்னுதாரணமாக இருக்கும் டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Twin Throttlers யூடியூப் நடத்தி வரும் டிடிஎப் வாசன் கடந்த சில ஆண்டுகளாக வளரும் தலைமுறைகளால் கொண்டாடப்படுகிற சமூக வியாதியாகிப் போனார். பைக் ரைடிங்கில் விருப்பம் உள்ளவர்கள் டிடிஎப் வாசனின் யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைபர்ஸ் ஆக ரொம்பவே துளிர்விட்டுப் போனது.

இதனால் சட்ட விதிகளைப் பின்பற்றாமல் சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலான, மரணத்தை ஏற்படுத்துகிற பைக் சாகசங்களை போகிற போக்கில் அசால்ட்டாக செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் டிடிஎப் வாசன். இந்த சாகசங்கள்தான் வளரும் தலைமுறையை 'அடிமை' மனநிலைக்கு கொண்டு செல்கிறது. இந்த சட்டவிரோத சாகசப் பேர்வழியின் சில 'சம்பவங்கள்'..
மேட்டுப்பாளையம் பிறந்த நாள்: கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அருகே பிறந்த நாளை கொண்டாடுவதற்காக தமது ரசிகர்களை டிடிஎப் வாசன் சந்தித்த போது எல்லோரும் அதிர்ச்சி அடைந்துதான் போனார்கள். இத்தனை ஆயிரம் இளம் தளிர்கள் இந்த மோசமான முன்னுதாரணத்துக்கு அடிமைகள் போல திரண்டிருந்ததுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். போலீசார் வந்துதான் கூட்டத்தைக் கலைக்க வேண்டி இருந்தது.
கடலூர் பஞ்சாயத்து: கடந்த ஆண்டு கடலூர் அருகே ஒரு நிகழ்ச்சிக்கு டிடிஎப் வாசன் செல்ல, அவரை பின்பற்றுகிற இளைஞர் கும்பலும் அதிவேகத்தில் அவரது ஸ்டைலில் கடலூர் செல்ல பெருந்துயரமாகிப் போனது போலீசுக்கு. அப்போது டிடிஎப் வாசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவங்களின் போது போலீசாரை தரக்குறைவாக மிரட்டி வீடியோ வெளியிட்டவையும் பின்னர் பம்மிக் கொண்டு மன்னிப்புக் கேட்டவையும்தான் அடங்கும்.
சென்னையில் கும்மாளம்: சென்னையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாத காரில் நண்பர்களுடன் கும்மாளமடித்து சிக்கினார் டிடிஎப் வாசன். இதன் பின்னர் சில மாதங்களில் மீண்டும் போலீசாரை மிரட்டி ஒரு வீடியோ வெளியிட்டு இடைவிடாத சர்ச்சையின் நாயகனாகிப் போனார்.
நீலகிரியில் சிக்கிய கதை: சில மாதங்களுக்கு முன்னர் நீலகிரி மலையில் தாறுமாறாக வண்டி ஓட்டிப் போய் போலீசில் சிக்கினார். அப்போது போலீசார் அபராதம் விதித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது.
சினிமா: இத்தகைய சமூகத்துக்கு கேடான இந்த இளைஞனை முன்வைத்து மஞ்சள் வீரன் எனும் சினிமாவும் வரப் போகிறது என்றது ஒரு அறிவிப்பு.
வீலிங் சாகசம்: இப்போது சென்னை- பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் எனும் பைக் சாகசம் செல்ல முயன்று தூக்கி அடிக்கப்பட்டு தலைகுப்புற விழுந்து உயிர் பிழைத்துள்ளார். இப்போது டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடும் நடவடிக்கை, பாடம் தேவை: இத்தகைய பேர்வழிகளை தொடக்கத்திலேயே கடுமையாக தண்டித்து ஜென்மத்துக்கும் எந்த வண்டியையும் எந்த திசையிலும் ஓட்டவே முடியாத ஒரு கடும் நிலையை போலீசார் எடுத்து அவரது யூடியூப்பை தடை செய்திருந்தால் இத்தகைய சமூகப் பேரவலத்தை அனுமதித்திருக்க முடியாமல் போயிருக்கும் என்பதுதான் இன்றைய இளம் தலைமுறையினர் குறித்து தகித்துக் கொண்டிருக்கும் பெற்றோரின் குமுறல்.. இனியும் டிடிஎப் வாசனுக்கு தக்க பாடத்தை போலீஸ் கற்றுத் தர வேண்டும் என்பதுதான் பெற்றோரின் தாழ்மையான வேண்டுகோள். இனியேனும் தமிழ்நாடு போலீசார் இத்தகைய சமூக விரோத முன்னுதாரணங்களை தட்டி வைத்தாக வேண்டும்; இல்லையெனில் எதிர்கால சமூகம் பாழ்பட்டுப் போக உடந்தையாக இருந்த பெருங்குற்றத்தை இழைத்தவர்களாகிவிடுவர் என்பதும் பெற்றோர்களின் வேதனை.












Click it and Unblock the Notifications