டாஸ்மாக் கடைகளில் கேஷ் ஒன்லி.. டிஜிட்டல் பணத்தை வாங்க மறுக்கும் கடைகள்.. ஓ இதுதான் காரணமா?
சென்னை: தமிழகத்தில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை இருந்தும் ரொக்கமாகவே பணத்தை வாங்குவதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. எனினும் கொரோனா தொற்று வந்ததை அடுத்து தற்போது பூக்கடை, பெட்டிக் கடைகளில் கூட டிஜிட்டல் முறையில் பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.

நேரடியாக பணத்தை கொடுப்பதன் மூலமும் வாங்குவதன் மூலமும் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதால் டிஜிட்டல் முறையில் பணம் பெறுதல் அதிகரிக்கப்பட்டது. பூக்கடை, பெட்டிக் கடை, பானிப்பூரி கடை உள்ளிட்ட இடங்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
யூபிஐ எண்ணை வைத்துக் கொண்டு போன் பே, பேடிஎம், கூகுள் பே உள்ளிட்ட பேமண்ட் கேட்வேக்களிலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு , நெட் பேங்கிங் மூலமாக இந்த பணவர்த்தனை செயல்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் இது போன்று டிஜிட்டல் முறையில் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை குடிமகன்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பிஓஎஸ் இயந்திரம் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கையில் பணம் இல்லாவிட்டாலும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்திக் கொள்ளலாம் என சிலர் எண்ணி சென்றனர். ஆனால் சில கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில கடைகளில் இயந்திரம் ரிப்பேர் என டாஸ்மாக் ஊழியர்கள் சொல்லிவிடுவதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் டிஜிட்டல் முறையில் பணம் பெற்றால் பாட்டிலுக்கு உண்டான பணத்தை மட்டுமே செலுத்த வேண்டும். பாட்டிலுக்கு கூடுதலாக ரூ 10 வாங்க முடியாது. அதனால்தான் ரொக்கமாக கேட்பதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்டால் நிஜமாகவே டிஜிட்டல் கருவிகள் வேலை செய்யவில்லை. அதனால் நாங்கள் பணத்தை வாங்குகிறோம் என்கிறார்கள். கூட்ட நெரிசலாக இருக்கும் நேரங்களில் கூட்டத்தை விரைவாக வெளியேற்ற டிஜிட்டல் முறை தாமதமாவதாலும் டாஸ்மாக் ஊழியர்கள் பணத்தை வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஊழியர்கள் மறுத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications