சர்ரென குறைஞ்சிடுச்சே.. வெளியூர் பயணம் செய்யும் மக்களுக்கு கெட்ட செய்தி.. ஆம்னி பஸ்கள் எடுத்த முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கை திடீரென குறைந்து உள்ளது.
பண்டிகை தினங்கள் வந்தால் யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ, ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு வேற லெவல் கொண்டாட்டமாக இருக்கும். பேருந்துக் கட்டணத்தை இஷ்டம் போல உயர்த்தி வசூல் வேட்டையில் ஈடுபட, பண்டிகை தினங்களே அவற்றுக்கு உதவி வருகிறது.

ரயில்களில் முன்னதாகவே இருக்கைகள் நிரம்பிவிடுவதால், மக்களின் ஒரே ஆப்ஷனாக இருப்பது பஸ்கள் மட்டுமே. இதனை தெரிந்துகொண்ட ஆம்னி பஸ் நிறுவனங்கள், மக்களின் இந்த இக்கட்டான சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.
பொங்கல், கிறிஸ்துமஸ், தீபாவளி, புத்தாண்டு பண்டிகைகள் வந்தால் போதும் ஆம்னி நிறுவனங்கள் தங்களின் வழக்கான கட்டணக் கொள்ளையில் இறங்கும். பண்டிகைகள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் தேர்வுகள் ,முடிந்து விடுமுறை வரும் சமயத்திலும் கட்டணங்களை ஆம்னி பேருந்துகள் உயர்த்தும்.
சாதாரண நாட்களில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு செல்ல ஏசி இல்லாத பஸ்களில் ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், பண்டிகை நாட்களில்அதே ஊர்களுக்கு ரூ.2,800 முதல் ரூ 3,300 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஏசி இல்லாத பஸ்களிலேயே இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
கொள்ளை: அந்த அளவிற்கு ஆம்னி பேருந்துகளில் கொள்ளையடிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கை திடீரென குறைந்து உள்ளது.
இழப்புகள் மற்றும் கோவிட்-19 பரவலால் ஏற்பட்ட கடன் காரணமாக தனியார் ஆம்னி பேருந்துகள் தங்கள் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளனர். முக்கியமான நகரங்களுக்கு இடையேயான சேவைகளின் எண்ணிக்கையை குறைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கொரோனா காலத்தில் வாங்கிய கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவதில், அப்போது ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீள்வதற்கு ஆம்னி ஆபரேட்டர்கள் இன்னும் போராடி வருகின்றனர். இதனால் ஆம்னி பேருந்து நிர்வாகங்கள் தங்களது எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக குறைந்த பயணிகள் வரக்கூடிய சேவைகளை குறைக்க முடிவு செய்துள்ளனர். அதேபோல் வார நாட்களில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை வார நாட்களில் மொத்தம் 2,700லிருந்து வெறும் 1,400 ஆகக் குறைந்துள்ளது. வார இறுதி நாட்களில், எண்ணிக்கை 1900 என்ற அளவில்தான் உள்ளது. இன்னமும் பேருந்துகள் எண்ணிக்கை 2000ஐ கூட தாண்டவில்லை.
முன்பு இயங்கியதில் 35 சதவிகித பேருந்துகள் மட்டுமே தற்போது தொடர்ந்து இயங்கி வருகின்றன. பேருந்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, பயணிகள் அதிக அளவில் பயணம் செய்ய ஆர்வம் காட்டாதது போன்ற விஷயங்கள்தான் இந்த சரிவிற்கு முக்கிய காரணம்.
இதனால் வரும் நாட்களில் நீங்கள் வெளியூர் செல்ல தனியார் பேருந்துகள் கிடைக்காமல் போகும் அபாயமும் உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக விரைவு பேருந்துகளில் அதிரடி மாற்றங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் விரைவு போக்குவரத்து பேருந்துகளில் இருக்கும் குறைகளை சரி செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் 200 புதிய படுக்கை மற்றும் இருக்கை வசதி பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது
இதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. பேருந்துகளில் உள்ள வசதி குறைபாடுகளை களைய ஆலோசனைகளை செய்து வருகின்றனர். நேரடியாக பேருந்து ஆர்வலர்கள், மக்களிடம் இருந்து தற்போது உள்ள மாண்புமிகு மேலாண் இயக்குனர் கருத்துகளை பெற முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications