கள் போதை பொருளா.. தமிழகத்தில் மட்டும் கள் இறக்க தடை ஏன்.. விளக்குகிறார் விவசாயி!
சென்னை: தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் ஒருவகைப் பானம்தான் 'நீரா', இது மதுபானத்திற்கு சரியான மாற்று. நீரா என்றால் என்ன? அவற்றின் பலன்கள் என்ன?.. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கள் இறக்க அனுமதிக்கப்படும் போது தமிழ்நாட்டில் மட்டும் மறுக்கப்படுவது ஏன்?... உள்ளிட்ட பல தகவல்களை விளக்குகிறார் விவசாயிகள் மற்றும் மரம் ஏறுபவர்களின் நலனுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் கள் இயக்க தலைவர் நல்லசாமி.
Recommended Video
இதுகுறித்து நல்லசாமி கூறுகையில் நீரா என்பது சுவை நீர். பனை, தென்னை, ஈச்சமரம் உள்ளிட்டவைகளில் இருந்து வடிய கூடிய ஒரு சுவை நீர். அந்த நீர் வடியும் போது ஒரு கலையத்தில் சேகரமாகிறது. அந்த காற்று பட்டு, கலையத்தில் உள்ள ஈஸ்ட் பட்டு அது நொதித்து பெர்மண்டேஷன் ஆகிறது.
அப்போது ஆல்கஹால் வந்துவிடும். அவ்வாறு ஆல்கஹால் வந்தால் அதன் பேர் கள். இந்த நொதித்தலை நிறுத்த வேண்டும் என்பதால் சுண்ணாம்பு தடவ வேண்டும். சுண்ணாம்பு தடவும்போது அது நொதித்தலை நிறுத்தும். அதற்கு பேர் பதநீர்.
பதநீர்
சுண்ணாம்பை தடவுவதால் பதநீர் ஒரு கலப்பட பொருளாகும். நீரா இயற்கையாக பாலையிலிருந்து வடியக் கூடியது. கள்ளில் 4.5 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். எவ்வளவுதான் புளிக்க வைத்தாலும் அதன் ஆல்கஹாலின் அளவு 13 க்கு மேல் செல்லாது. ஆனால் டாஸ்மாக் மதுவில் ஆல்கஹாலின் அளவு 42 இருக்கிறது. பனை ஓலையில் பாலித்தீன் பையை கட்டி விடுவோம்.
காற்று
சுவை நீர் அந்த பையினுள்தான் வடிகிறது. வடியக் கூடிய நீர் காற்று படுவது கிடையாது. ஐஸ் பெட்டி போன்ற கலையத்தில் வடிகிறது. 4 டிகிரி சென்டிகிரேட்டுக்கு கீழ் இருக்கும். வடியும் போது அது காற்று படாததால், களையத்தில் ஒட்டாததாலும் அது நொதிப்பதற்கு வாய்ப்பில்லை. அதுதான் நீரா. காலையில் நீராவை இறக்கியவுடன் குடித்தால் தேவாமிர்தம் போல் இருக்கும்.
செயற்கை நிறமூட்டி இல்லை
அந்த சுவை நீரில் செயற்கை நிறமூட்டி இல்லை, ரசாயனம் இல்லை, பாதுகாப்பதற்காக எதையும் சேர்ப்பதில்லை (No colouring, No Chemicals, No Preservative) சுகாதாரமான உடலுக்கு நன்மையை பயக்குவதாகும். இயற்கையான சத்தான வென் பானம் என அரசு தரப்பில் சொல்கிறார்கள். நீராவை இறக்குவதற்கு அனுமதி உள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் மரமேறிகளுக்கு உரிமை கொடுக்கிறார்கள்.
தடை
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தடை செய்யப்பட்ட கள்ளிற்கு மீண்டும் உரிமம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த தடையானது தமிழ் இனத்திற்கு அரசால் இழைத்திருக்கும் அநீதி. நீராவுக்கு அனுமதி வழங்குவதாக 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
நீரா
அதில் தென்னை மரங்களில் இருந்து மட்டுமே நீரா இறக்க வேண்டும். அதிலும் ஒரு விவசாயி 100 தென்னை மரங்களை வைத்திருந்தால் அதில் 5-இல் இருந்து இறக்க வேண்டும் என உள்ளது. இந்த நீராவை தனியாக இறக்க முடியாது, 1000 பேர் சேர்ந்து Coconut producers company வைத்து தலைக்கு ரூ 1000 முதலீடு செய்து அதை வைப்புத்தொகையாக வங்கியில் வைத்து மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தில் அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி வாங்கி இறக்க வேண்டும்.
கள் இறக்க அனுமதி
நீராவை இறக்க அனுமதி, இறக்குவதை எடுத்துச் செல்ல அனுமதி, அதை சந்தைப்படுத்த அனுமதி என இத்தனை அனுமதிகள் வாங்கிக் கொள்வதற்கு ஒரு விவசாயி 7 ஜோடி செருப்பை வாங்க வேண்டிய சூழல் இருக்கிறது. அந்த அளவுக்கு அலைக்கழிப்பு. தமிழகத்தில் மட்டும் கள் இறக்க அனுமதி மறுப்பை கண்டித்து கள் இயக்கம் சார்பில் அசுவமேத யாகம் நடத்தவுள்ளோம் என்கிறார் நல்லசாமி.