டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஜிகே வாசன் மந்திராலோசனை.. தமிழ்நாடு பாஜக 'தலைகள்' உருளப் போகிறதா?
டெல்லியில் பிரதமர் மோடியை ஜிகே வாசன் சந்தித்து பேசிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியது தமிழ்நாடு பாஜகவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் அதிமுக- பாஜக இடையே உக்கிர மோதல்களை விலாவாரியாகவே பிரதமர் மோடியிடம் புகார் பட்டியலாகவே விவரித்தார் ஜிகே வாசன் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
டெல்லியில் இபிஎஸ் கோஷ்டியின் தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்தார். அவரைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருக்கிறார். திமுக ஆட்சி, தமிழ்நாடு அரசியல், அதிமுக- பாஜக விவகாரங்கள் ஆகியவற்றைதான் பிரதமர் மோடியிடம் ஜிகே வாசன் விலாவாரியாக பகிர்ந்து கொண்டாராம். இந்த சந்திப்புக்கு முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமியும் ஜி.கே.வாசனும் சுமார் 30 நிமிடங்கள் ஃபோனில் பல்வேறு விசயங்களை பகிர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே பிரதமர் மோடியின் அப்பாயிண்மெண்ட் பெற்று அவரை சந்தித்துள்ளாராம் ஜிகே வாசன்.

பிரதமர் மோடி- ஜிகே வாசன் சந்திப்பில், அண்ணாமலையின் அரசியல் பாணியானது பாஜக-அதிமுக கூட்டணி உறவில் சிக்கலை அதிகப்படுத்துகிறது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய அண்ணாமலையின் சர்ச்சை தேவை இல்லாதது என்று அண்ணாமலைக்கு எதிராக குமுறினாராம் வாசன். எடப்பாடியின் அட்வைஸில் இதனை மோடியிடம் வாசன் சொல்லியிருக்கலாம் என்கிறார்கள் த.மா.கா.வினர்.
மேலும் பிரதமர் மோடியிடம் வாசன் பேசும்போது லோக்சபா தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி நீடிப்பதுதான் பலம். அதிமுகவுக்கான செல்வாக்கு மக்களிடம் குறையவில்லை. இரு கட்சிகளின் தலைவர்களும் ஆளாளுக்கு எதிர்மறை பேட்டிகள் கொடுப்பதுதான் மக்களையும் இரு கட்சிகளின் தொண்டர்களையும் அதிருப்தி அடைய வைக்கிறது. இரு கட்சித் தலைவர்கள் சரியாக இருந்தால் குழப்பம் வராது என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அப்போது, கூட்டணி பற்றி சில கேள்விகளை பிரதமர் மோடி கேட்க, அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ஆனால் இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொள்வது களத்தில் இரு கட்சிகளின் தொண்டர்களிடமும் ஒற்றுமையில்லாமல் போய்விடுகிறது. இதனாலேயே, வாக்குகள் வந்து சேருவதில்லை. அதிமுக-பாஜக கூட்டணி நீடித்தால் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் கூட்டணிக்கு கிடைப்பதில்லை. இதில் இப்போது கொஞ்சம் மாறுதல் தெரிய ஆரம்பித்துள்ளது. அதாவது, திமுக மீதும் திமுக அரசு மீதும் கொஞ்சம் கொஞ்சமாக சிறுபான்மையினரிடம் எதிரான மனநிலை உருவாகியுள்ளது. இது ஒருபுறமிருந்தாலும், சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அதிமுக-பாஜக கூட்டணிக்கு கிடைக்காமல் போவதை ஈடுகட்ட மற்ற சமூக மக்களின் வாக்குகளை கவர ஏதேனும் சிந்திக்க வேண்டும் என்று தனது கருத்தை சொல்லியிருக்கிறார் வாசன்.












Click it and Unblock the Notifications