திமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா?
தமிழகத்தில் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அதிமுக அரசு முடிவு செய்திருப்பதற்கு பின் முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அதிமுக அரசு முடிவு செய்திருப்பதற்கு பின் முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. திமுகவின் பழைய திட்டத்தை தற்போது அதிமுக செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் அடுத்த தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னும் ஒன்றரை மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் இந்த அறிவிப்பை வெளியிடலாம்.
உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக வெற்றியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான கூட்டணி அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு!
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் உள்ளாட்சி, நகராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து இருக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுடன், தமிழகத்தில் மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
மக்கள் இல்லை
இதனால் தமிழகத்தில் இந்த முறை நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளின் தலைவர்களை மக்கள் தேர்வு செய்ய மாட்டார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் இவர்ளை வாக்களித்து தேர்வு செய்வார்கள். இதுதான் மறைமுக தேர்தல் என்று அழைக்கப்படுகிறது.
ஏன் இப்படி
1973ல் தமிழகத்தில் நேரடி மேயர் தேர்தல் முறையே இருந்தது. அதன்பின் 2006ம் ஆண்டில் திமுகதான் மறைமுக தேர்தல் முறையை கொண்டு வந்தது. இதற்காக அப்போதே திமுக சட்ட திருத்தம் கொண்டு வந்தது. முறைப்படி பார்த்தால் இது திமுகவின் திட்டம்தான்.
ஆனால் மாற்றம்
ஆனால் 2011ல் மீண்டும் முதல்வர் ஜெயலலிதா சட்டத்திருத்தம் அடிப்படையில் மக்களின் நேரடி வாக்கு மூலமாகவே மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்ய வழி வகுத்தார். ஆனால் மீண்டும் அவரே 2016ல் இதை மாற்றி மறைமுக தேர்தல் முறையை கொண்டு வந்தார். பின் இதை 2018ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடி தேர்தலாக மீண்டும் மாற்றினார்.
தற்போது மீண்டும்
தற்போது மீண்டும் அதை மறைமுக தேர்தலாக மாற்றி இருக்கிறார்கள். பருத்தி மூட்டை இதுக்கு குடோன்லயே இருந்திருக்கலாம் என்று சொல்வது போலதான் மாற்றி மாற்றி சட்ட திருத்தம் கொண்டு வந்து இருக்கிறார்கள். திமுகவின் இந்த தேர்தல் கொள்கையை அதிமுக பின்பற்ற ஒரு காரணம் இருக்கிறது.
இதுதான் பின்னணி
பெரும்பாலும் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் எல்லாம் ஒரு கட்சியாக இருப்பார்கள். ஆனால் மேயர் வேறு கட்சியாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் மாநகராட்சி கூட்டங்கள் நடக்காது. இதில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். கூட்டத்திற்கு மேயர் அழைப்பு விடுத்தால் கவுன்சிலர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். இதனால் நிறைய சிக்கல் நிலவி வந்தது.
புதிய முறை
ஆனால் புதிய முறைப்படி மேயர்களை தேர்வு செய்தால், மேயர் மற்றும் பெரும்பான்மை கவுன்சிலர்கள் எல்லோரும் ஒரே கட்சியாக இருப்பார்கள். இதனால் எந்த சிக்கலும் நடக்காது. திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதனால்தான் அதிமுக இந்த முடிவை எடுத்தது என்கிறார்கள்.