தங்க மங்கை கோமதிக்கு போட்டி போட்டுக் கொண்டு நிதியுதவி வழங்கும் கட்சிகள்.. என்ன காரணம்?
சென்னை: ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு அரசியல் கட்சிகள் வாரிவாரி நிதியுதவி வழங்கி வருகின்றன
அள்ளிக்கொடுப்பதில் வள்ளல்கள் நம்மூர் அரசியல்வாதிகள் என்றாலும், ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடுவார்கள். காரணம் இல்லாமல் போடுவார்களா என்பது மில்லியன் கேள்வி?
ஏனெனில் 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலும் நடக்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கம் வென்ற தங்கமங்கை கோமதி மாரிமுத்துவுக்கு நிதியதவியை வாரி வழங்கி வருகின்றன.

ஸ்டாலின் 10 லட்சம்
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமலில் இருப்பதால் வெறும் வாழ்த்து மட்டுமே தமிழக அரசு சார்பில் கோமதி மாரிமுத்துவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனை திசைதிருப்பிய சிலர், ஆளும் பழனிச்சாமி அரசு தங்கம் வென்ற கோமதிக்கு நிதியுதவி தரமறுப்பாக சமூக ஊடகங்களில் கிளப்பிவிட்டனர். இதனால் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பான சூழல் காணப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், கோமதி மாரிமுத்துவை அழைத்து, திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

முதல்வர் 15லட்சம்
இதனால் சுதாரித்துக் கொண்ட அதிமுக, உடனடியாக கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 15 லட்சம் வழங்குவதாக அறிவித்தது. இதன்படி முதல்வர் பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் இல்லத்துக்கு கோமதி மாரிமுத்துவை அழைத்தார். அங்கு வந்த கோமதி மாரிமுத்துவுக்கு முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து ரூ.15லட்சம் வழங்கினார்கள்.

காங்கிரஸ் ரூ.5லட்சம்
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று கோமதியை அழைத்து, ரூ.5லட்சத்தை வழங்கியதோடு, சால்வை அணிவித்து கவுரவித்தார். முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி ரூ5லட்சமும், ரோபோ சங்கர் ரூ.ஒரு லட்சமும் வழங்கினார்கள்.

அரசியல் கட்சிகள்
ஏழ்மையிலும் ஆசிய தடகளத்தில் வென்று சாதித்த கோமதி மாரிமுத்துவை வைத்து தேர்தல் நேரத்தில் அரசியல் செய்ய அரசியல் கட்சிகள் முயன்றது வெளிப்படையாக தெரிந்தாலும், தற்போது போட்டிபோட்டுக்கொண்டு அரசியல் கட்சிகள் கோமதி மாரிமுத்துவுக்கு உதவியிருப்பதை பாராட்டித்தான் ஆக வேண்டும்












Click it and Unblock the Notifications