Flash back:காலந்தோறும் அதிமுகவில் கலகம் எழுப்பிய மைத்ரேயன்.. தாய்வீடு கமலாலயத்துக்கே திரும்புகிறார்!
சென்னை: அதிமுகவில் காலந்தோறும் கலகக் குரல் எழுப்பிய மைத்ரேயன் தாய்வீடான பாஜகவுக்கே திரும்புகிறார்.
2019-ம் ஆண்டு ராஜ்யசபா எம்பி பதவி நிறைவடைந்த போது அதிமுகவின் மைத்ரேயன் நெஞ்சை உலுக்கும் வகையில் பேசினார். 2009-ம் ஆண்டு ஈழத் தமிழர்கள் பல லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டபோது செலுத்தப்படாத மவுன அஞ்சலியை இந்த சபை எனக்கும் செலுத்தக் கூடாது என கூறியிருந்தார்.

மைத்ரேயன்.. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து உருவானவர். தமிழ்நாட்டில் பாஜக எனும் கட்சி பெயரை உச்சரிக்கக் கூட ஆள் இல்லாத காலம்.. அத்வானி வருகை தந்தால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 பேர் மட்டுமே வரவேற்கக் கூடிய ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டின் பாஜக முகமாக இருந்தவர் மைத்ரேயன். பாஜக தலைமை நிர்வாகிகளில் ஒருவராக வலம் வந்தவர். 23 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவுக்கு குட்பை சொல்லிவிட்டு அதிமுகவுக்கு தாவினார்.
அதிமுகவின் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தவர். அதிமுகவின் மைலாப்பூர் முகமாக அடையாளப்படுத்தப்பட்டவர். அதனாலேயே ராஜ்யசபா பதவியும் கிடைத்தது. 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு அதிமுக ராஜ்யசபா எம்பியாக இருந்தார்.
2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த போது தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்-க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர். அதிமுக ஓபிஎஸ் கோஷ்டியின் மூத்த தலைவராக இருந்தவர் மைத்ரேயன். ஒருகட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்த போது இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கியமான நபராக இருந்தார். இரு அணிகள் இணைந்த போதும் கல்லெறிந்து கூட்டைக் கலைக்கும் வகையில் ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டவர் மைத்ரேயன்.

அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் என மாறி மாறி ஊசலாட்டமாடிக் கொண்டிருந்தார். 2022-ம் ஆண்டு மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இனி எந்த அணியிலும் தம்மால் இணைய முடியாது என முடிவெடுத்ததாலேயே தற்போது மீண்டும் தாய்வீடான பாஜகவுக்கே திரும்ப முடிவு எடுத்துவிட்டார் மைத்ரேயன்.
அதுவும் தமிழ்நாட்டில் பாஜகவின் மூத்த தலைவர்கள் 3 பேர் அடுத்தடுத்து ஆளுநர்களாகிவிட்டனர். மற்றொரு மூத்த தலைவர் எச்.ராஜா, தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறார். இந்த நிலையில் அந்த சீனியர்கள் வரிசையில் தம்மை இணைத்துக் கொள்ள மைத்ரேயன் முடிவு செய்திருக்கலாம். இதனாலேயே அதிமுகவை விட்டு விலகி மீண்டும் பாஜகவில் இணையவும் மைத்ரேயன் முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications